இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஒஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். இசைப்புயலின் இசையில் வந்து என்னால் அதிகமாகச் செவிமடுக்கப்பட்ட, அதிகமாக முணுமுணுக்கப்பட்ட, நான் விரும்பி ரசித்த மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயமாக இவை உங்களுக்கும் பிடித்தவையாகவே இருக்கும்
அந்த அரபிக்கடலோரம் – பம்பாய்
என் உற்சாகமான தருணங்களோடு உற்சாகமாகத் தொற்றிக்கொண்டுவிடும் பாடல் இது. இசைப்புயலின் குரலில் தாளம் போடவைக்கும் இந்தப்பாடலின் படத்தில் இடம்பெற்றதை விட மேடைக்கச்சேரிகளில் ப்ளேஸின் ராப் ஆரம்பத்துடன் பாடப்படும் இந்த வடிவம் என்னை இன்னும் அதிகமாகக் கவர்ந்திருக்கிறது
வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்
அந்த அரபிக்கடலோரம் பாடல் பாடிய அதே குரலில் இப்படியொரு மென்மையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலைத் தெரியச்சொன்னால் எனது தெரிவு இதுவாகத்தான் இருக்கும். காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசையும் உறுத்தாத குரலுமாக என் பலநாள் தூக்கங்களைத் தழுவிக்கொண்ட சுகானுபவம் இந்தப்பாடல்
புது வெள்ளை மழை – ரோஜா
இசைப்புயலின் முதற் படத்திலிருக்கும் இந்தப்பாடல் இதுவரை நான் அதிக தடவைகள் கேட்ட பாடல்களில் நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும். சுஜாதா, உன்னிமேனன் குரல்களில் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம் இந்தப்பாடலில். இதன் ஆரம்ப இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடனான ஹோரஸும் காதுகளில் கபடியாடுகையில் பல தடவைகள் என்னையறியாமலேயே கண்கலங்கியிருக்கிறேன். நிச்சயமாக ஒரு வித்தியாசமான உணர்வு அது.