இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிராச்சரங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அதையெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? நானும் என்பங்குக்கு எனது பிராச்சரத்தையும் செய்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். தமிழ்மண விருதுக்காக நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவில் பதிவு எழுதிப்பார் என்ற பதிவையும், சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் இயற்கையின் வட்டமும், மதங்களும், மனிதர்களும் என்ற பதிவையும் நாமினேட் செய்திருக்கிறேன். நமக்குள்ள எதுக்கு வாக்குறுதி எல்லாம் குடுத்துகிட்டு? ஏதோ பாத்து செஞ்சிடுங்க மக்கா
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சுனாமியின் ஐந்தாவது நினைவுதினம் வந்து போய்விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத அனர்த்தம் அது. சுனாமி வந்தவுடன் ஏதோ கடல் ஊருக்குள் புகுந்துவிட்டதாம் என்று டியூசனை மூடிவிட்டார்கள். அப்பாடா என்று வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்தபிறகுதான் தெரிந்தது நிலமையின் உச்சம். அதன்பிறகு நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றபோது கண்ட காட்சிகள் மறக்கவே முடியாதவை. பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து செய்த முதல் நல்ல காரியம் எனக்குத் தெரிந்து நிவாரணப்பணிக்குச் சென்றதுதான். ஆனால் அன்று நாங்கள் சென்ற பகுதிகள் எல்லாம் இன்று அதைவிட மோசமாக அழிவடைந்துவிட்டன. இயற்கை எவ்வளவோ பரவாயில்லை இல்லையா?
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கிரிக்கெட்டில் அண்மையில் ரசித்த ஒரு விடயம் அவுஸ்திரேலிய வீரர் வட்சனின் ஆட்டமிழப்பு. பொதுவாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கும்போது அவர் ஆட்டமிழந்தாரா இல்லையா என்பதற்கே மூன்றாவது நடுவரின் உதவி நாடப்படும். ஆனால் இங்கே வட்சன், ஹட்டிச் இருவரில் யார் ஆட்டமிழந்தார் என்று அறிய மூன்றாவது நடுவரின் உதவி நாடப்பட்டதும், இறுதியில் ஒரு நொடிக்கும் குறைவான நேர வித்தியாசத்தால் ஹட்டிச் முந்திக்கொள்ள வட்சன் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும்தான் சிறப்பு. அந்தக் காட்சியை இங்கே சென்று பாருங்கள். கிரிக்கெட்டில் பலகாலங்களுக்கு பேசப்படப்போகும் விடயம் இது.
கடுப்பாக்கிய விடயம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கைவிடப்பட்ட நேற்றய போட்டி. இந்திய ஆடுகளங்கள் ஒன்றில் தட்டையாக, அல்லது இந்தமாதிரி அபாயகரமாக இருப்பது விளையாட்டின் சுவாரசியத்தையே குறைத்துவிடுகிறன.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இணையத்தில் படித்த செய்திகளில் கோபப்படுத்திய செய்தி ருச்சிகா கிர்கோத்திரா என்கிற பெண்ணின் மீது பாலியல் வன்முறை செய்த ரத்தோர் என்றவனுக்கு, 19 வருடங்களின் பின்னர் ஆறுமாத சிறையும், ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, உடனே பெயிலும் கொடுத்த நீதிபதிகள்(?) பற்றியது. 14 வயதுப்பெண்ணைக் கற்பழித்தவனை 19 வருடங்கள் வெளியில் விட்டுவைத்த்தும் அல்லாது, கொடுக்கப்பட்ட கேவலமான தீர்ப்பு நீதித்துறையின் கேவலம். இப்போது எனது பார்வையில் அந்த நீதிபதிகளும் குற்றவாளிகளே. இந்தியச் செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், இன்னும் பேசப்படாத எத்தனையோ செய்திகள் இங்கேயும் கிடந்து உறுத்துகின்றன.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இந்த வருடத்தில் எனது இறுதிப் பதிவு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். எனவே இப்போதே சொல்லிவிடுகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒரு வார்த்தையில்லாக் கவிதை - இரக்கம்