Wednesday, February 1, 2012
வேண்டாம்.. விலகிவிடு!
காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது
வேண்டாம் விலகிவிடு
வேண்டாம்.. விலகிவிடு!
மரணத்தின் வலிகூட
மரத்துப்போன பிறகும் - உன்
வார்த்தைகள் வலிக்கிறது..!
வேண்டாம்.. விலகிவிடு!
காலங்கள் கடந்து
காப்பியமாய்க் கிடக்க - காதல்
முடிந்ததென்று நீயோ
முற்றுப்புள்ளி இடுகிறாயே..!
வேண்டாம்.. விலகிவிடு!
கற்கள் கேட்கிறாயே நீ - இந்தக்
காதல் கொண்ட கடைக் கவியிடம்
சொற்கள் மட்டும்தானே
சொந்தமாய் இருக்கின்றன!
வேண்டாம்.. விலகிவிடு!
யதார்த்தம் பேசுகிறாய் நீ - அது
முடியாதவர்களின்
முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் - இன்னும்
எஞ்சியிருக்கும் வெப்பம்
அது போதும் எனக்கு!
வேண்டாம்.. விலகிவிடு!
என்
கவிதைகள் கசக்கிறதா உனக்கு? - சொல்
மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்
என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? - சொல்
போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்
மரணம் கேட்கிறாயே நீ - மறந்தாயா
நம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!
வேண்டாம்.. விலகிவிடு!
நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்
வேண்டாம்.. விலகிவிடு!
Tuesday, December 27, 2011
கால இயந்திரம்
சட்டென்று தனிமை
ஆட்கொள்ளும் நேரங்களில்தான்
தேவையற்ற நினைவுகளும்
செருகேடுகளின் ஞாபகமும்..
புரட்டத் தொடங்கிய
செருகேட்டும் பக்கங்களின்
இடுக்குகளில் உருண்டோடுகிறது
கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட
கால இயந்திரம்
காலம் கடந்து
கவனிக்கையில் மட்டும் - ஏனோ
கடதாசித் தடிப்பையும் விடக்
கனத்துக் கிடக்கின்றன
புகைப்படங்கள்..!
நினைவுகளின் கனத்தைத்
தாங்க முடியாமல் - அதை
முன்னோக்கிச் செலுத்தும்
முழு முயற்சியில் தோற்றுக்கொண்டே
குதிக்கால் ஊன்றி பெருவிரல் வரைந்த
குட்டி வட்டத்துக்குள்
சுற்றத் தொடங்குகிறேன்..
இறந்துபோன நிகழ்காலத்து
இடுக்குகளில் எழுந்துவந்தாள்
பிரிந்துபோன பழைய நண்பி
எப்போதோ பார்த்த நான்
எனக்கே சிரிப்பூட்டினான்
எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது
'அ' போட்டு வரைந்த மயில்
'ல' போட்டு வாங்கிய அடி
பாசி படிந்துபோன
கோயிலடிக் குழாய்க்கிணறு
அதிகம் சுவைத்த
மாற்றான் தோட்டத்து மாங்காய்
பல நேரங்களில்
விடைபெறல் என்பது
வெறும் கையசைப்பு மட்டுமல்ல..!
கடைசிப் பக்கம் கடந்து
கண்கள் நிறைந்து
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளியைப்
புறந்தள்ளி நிமிர்கிறேன்
இன்னும்
தூசி ஏறிப்போன பரனில்
மூலை மடங்கி, முன் அட்டை கிழிந்து
பழுப்பேறிப்போன பழைய புத்தகத்துள்
குட்டிபோட்டுக் கிடக்கின்றன
மயிலிறகுகள்..!
Saturday, July 23, 2011
நிலா..!!!
குழந்தைகளின் உலகுக்குள்
அனுமதிக்கப்படாத அந்நியர்கள்
தங்களை பெரிய மனிதர்களாக
எண்ணிக்கொள்வது பிழையல்ல
பேதமை!
காலையில் விகடனில் படித்துவிட்டு ‘அட!’ போடவைத்த இந்த வரிகள் மாலை தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் உலகத்தைப் பார்த்தபோது அப்படியே மனதில் ஆழப் பதிந்துபோனது.
கிருஷ்ணா – நிலா என்ற இரண்டு குழந்தைகளின் உலகம். இந்தக் குழந்தைகளின் குடும்பத்தின் ஐந்து வயதுக் குட்டி ஏஞ்சல் நிலாவாக பேபி சாரா. அவருக்குத் தகப்பனாக, தாயாக ஏன் சமயத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் இன்னுமொரு குழந்தையாக ஒரு மனநிலை குன்றியவரின் பாத்திரத்தில் சற்றும் அலட்டலில்லாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். இந்த இருவருக்கும் இடையிலான விளையாட்டு, குறும்பு, பாசம், பிரிவு, ஏக்கம், ஏமாற்றம், கோபம் இதுதான் தெய்வத் திருமகள்.
கலகலப்பாக ஆரம்பித்து நகர்ந்துகொண்டிருக்கும் படத்தில் சிரித்துச் சிரித்து கண்ணில் வந்த கண்ணீர் காயுமுன்னரேயே மகளைப் பிரிந்து கிருஷ்ணா கதறும் காட்சி உறையவைக்க உணர்வுகளின் கலவையாக, ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை ஒரே நேரத்தில் முழுமையாக உணரவைக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அடித்துச்சொல்லியிருக்கிறது தெய்வத்திருமகள்.
படத்தில் இசையே பேசப்படாத பல வசனங்களைப் பேசிவிட, பல இடங்களில் பாத்திரங்களது மௌனமும் உடல் மொழிகளுமே புரிந்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்கின்றன. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் இசை காதுகளில் நுளைந்து மனதைக் கட்டிப்போட்டு விடுகின்றன. சரியான பாத்திரத் தெரிவுகள், அலட்டலில்லாத நடிப்பு, மனதைக் கவரும் இசை என்று எல்லாவற்றையும் தாண்டி படம் முடிந்து பல மணி நேரம் ஆகியும் இன்னும் மனதுக்குள் நிற்பது – நிலா!
அடர்ந்த புருவங்கள், கதை பேசும் கண்கள், மெல்லிய புன்னகை என்று ஒருமுறை பார்த்தாலே மனதோடு ஒட்டிக்கொள்ளும் அந்தச் சின்ன முகமே படத்தின் பாதி இடங்களில் நடித்துவிடுகிறது. பாடசாலைக்கு வரும் தகப்பனிடம் சைகை மொழியில் உரையாடி வீட்டுக்குப் போகுமாறு கையெடுத்த்துக் கும்பிடுவதாகட்டும், இடிக்குப் பயந்து இருவரும் ஒடுங்கிக் கிடந்துவிட்டு கைகளில் தண்ணீர் ஏந்தி விளையாடுவதாகட்டும், தகப்பனைப் பிரிந்து ஏங்கும் காட்சிகளாகட்டும், இறுதி நேர நீதிமன்றக் காட்சியில் தகப்பனும் மகளுமாக சைகைகளிலேயே கோபித்துக்கொள்வதும் பின் சமாதானமாகி கதைபேசி உரையாடுவதும் அன்பைப் பரிமாறுவதும் என ஒவ்வொரு காட்சிகளுமே ஒவ்வோர் வார்த்தையில்லாக் கவிதைகள். மழலைக் குரலும், காட்சிக்கேற்ப மாறிமாறிக் கதைபேசும் கண்களுமாக அந்தக் குட்டி ஏஞ்சலுக்கு ஐந்து வயதுதான் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. காட்சிக்குக் காட்சி பாசம், பிரிவு, ஏக்கம், வேதனை என்று மாறி மாறிக் காட்டி இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா? வீட்டுக்குப் போய் முதலில் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லவேண்டும்.
ஒவ்வ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்?
படம் I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.
குட்டி நிலாவின் பாசப் போராட்டம் முடிந்து வெளியேறும்போது அடர்ந்த மௌனம், கனத்த மனத்துடன் கொஞ்சம் கண்ணீரையும் சேர்த்தே தந்துவிடுகிறது தெய்வத்திருமகள்.
Friday, July 22, 2011
ஜயமுண்டு பயமில்லை மனமே!
ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலேகவிதையினை ஒலிவடிவில் கேட்க…
விடுதலை உண்டு நிலை உண்டு,
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற
குலசக்தி சரணுண்டு பயமில்லை
சக்தி பெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
புற்றளை விநாயகனே
எங்கள் விழா நாயகனே
யானை முகத்தவனே
சாற்றுகிறேன் முதல் வணக்கம்.
நற்றமிழ் தந்து நாவில் விளையாடும்
கலை வாணிக்கோர் கவி வணக்கம்.
தங்க மொழி தந்த தமிழ்த்தாய்க்குத் தமிழ் வணக்கம்
பாட்டுடைத் தலைவனாம் பாரதிக்கோர் பெருவணக்கம்
அண்ணன் – பெரியண்ணன்
பேச்சிலே இவன் ஒரு விண்ணன்
விளையாட்டிலோ இவன் இன்னுமொரு கண்ணன்
அறிமுகமே தேவையில்லா மன்னன்.
இவன் வைத்திருப்பதோ ஒரு வலைப்பூ
இவன் குரல் கேட்டால் ஒருவித மலைப்பு
இவன் பெயரால் இங்கே பலருக்கும் பிழைப்பு
இவனால்தான் எனக்கும் இங்கே அழைப்பு
இவன் ஒலியுலக சிற்பி
செல்லமாய் விக்கி
கவியரங்கத்திலோ இன்று இவன் எம் மத்தி.
அரங்கத் தலைவர் லோஷனுக்கு ஓர் தனி வணக்கம்
கூடிக் கவி பாடக்
கூடவே வந்திருக்கும்
ஒரு கூட்டுப் பறவைகள்
ஒருவர் - என்
கட்டைவிரல் கேட்காத கவியுலக துரோணர்
கணினி உலகின் கலங்கரை விளக்கம்
சிரிப்பிலோ சினேகா - சீற்றத்தில் சிங்கம்
சிறீ அண்ணா எங்கள் கருப்பு நிறத் தங்கம்.
அடுத்து அண்ணன் மாலவன்.
எங்கள் காவலன்
கூட்டத்தின் குலவிளக்கு.
பக்கத்தில் பார்த்தாலோ ஒரு புகை கக்கும் எரிமலை
பழகிப் பாருங்கள் அண்ணன் ஒரு பனி மலை
இறுதியாய் என் இளவல் பவன்.
எங்கள் செல்லக் குஞ்சு.
இவன் மனமோ வெள்ளைப் பஞ்சு
பதிவுலகில் பப்புமுத்து
கவியுலகிலோ இவன் ஒரு குட்டி வைரமுத்து
மூவருக்கும் மொத்தமாய்
முத்தாக ஒரு வணக்கம்.
இனி அவை வணக்கம்
கணினி மொழி பயிலும் காலத்தில் கூடக்
கவி மொழி கேட்கக் காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
இது – என்
கன்னி மொழி விதைக்கத் தரப்பட்ட பெருந்தோட்டம்.
கன்னி மொழி –எதனுடனும்
கலக்காத ஒரு மொழி
தனியாக வேரூன்றித் தருவாகத் தழைத்திட்ட
என் தாய் – தமிழ் மொழி
அதைச் சரியாகப் பேசிச்
சரியாமல் காக்கின்ற – ஊரே… உறவுகளே…
உங்களுக்கோர் பெருவணக்கம்.
கவிதை தொழிலல்ல எனக்கு
தொழில் முடிந்துத் தேகம் ஆற்றும் தேசம் அது
அறியும் ஆறாம் புலன் அது
ஆற்றாமையில் எந்தன் புலம்பல் அது
ஆங்காங்கே வந்தாலும் - எம்
வாய்ப்பிழை பொறுத்தருள்வீர்
ஜயமுண்டு பயமில்லை மனமே
நேற்று இரவு – எனக்கோர் கனவு
பகல் கனவில்லை.
பாதியிலேயே கலைந்து எழுந்துவிடவுமில்லை.
கனவிலே வந்தான் – ஒரு
கறுப்புச்சட்டைக்காரன்.
‘யாரப்பா நீ?’
நான்தான் பாரதி என்றான்.
‘மறுபடியும் பாரதியா?’
இதற்குமுன் எங்கேயப்பா என்னை நீ பார்த்தாய் என்றான்.
அதுதான் யாழ் வரும் வழியில்
பொட்டல் காட்டில் – நெற்றிப்
பொட்டுடன் வரவேற்றாயே என்றேன்.
அது வெறும் தட்டியடா என்று
தடதடத்துச் சிரித்தான்.
தலைப்பாகை இல்லையே என்றேன்
(என்) தலையே போனபிறகு தலைப்பாகை ஒரு கேடா என்றான்
எனக்கிது போதாதா என்று வடத்து மீசை முறுக்கிக்கொண்டான்.
இறந்தவர்கள் கனவிலே பேசாரே என்றதற்கு
இறக்கவில்லையடா. உன்னில் – அவனில்
உயிர் வாழ்கிறேன் என்றான்.
உயிர் போகும் அவசரம் என்றாயே? என்றேன்
அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.
நான் கனாக்கண்ட உலகம் காண உன் கனவுக்குள் வந்தேன் என்றான்.
நகர்வலம் செல்வோம் வா! என்றான்
நகர்வலம் எதற்கு? உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் காட்டுகிறேன் என்றேன்
மடிக்கணினி பயின்றான்.
கணையப் பசி மறந்து இணையம் நாடினான்
கூகில் கண்டு குறிச்சொல் தேடினான்.
முதலில் பாரதி – பாரதி பார்த்தான்
கறுப்பு மீசையின்கீழ் வெழுப்பாய்ப் புன்னகைத்தான்.
புதுமைப் பெண் தேடினான்
அங்கேயும் நான்தானா என்றான்
கொஞ்சம் இரு … என்று ஆங்கிலம் காட்டினேன்.
ஐயகோ என்றான். ஆங்கிலம் வேண்டாம், அழகு தமிழே போதுமென்றான்.
அதையும் காட்டினேன்.
வேண்டாம், நிறுத்து என்றான்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருக்கிறதே என்றேன்.
அது – இதுவல்ல என்றான்.
காணி நிலம் உண்டோ என்றான்.
காலி இடம் இல்லை என்றேன்.
கடலுக்குள் கட்டிக்கொண்ட
களனி நிலம் காட்டினேன். விந்தை என்றான்.
நீண்டு கிடக்கும் நெடும்பாலம் கண்டு வியந்தான்.
அடுக்கு மாடி பார்த்து அதிசயித்தான்.
விலை கேட்டான். விறைத்தான்.
மோவாய் சொறிந்து முகடுபார்த்தான்.
என்ன இது கூடாரம்? உன்வீடு எங்கே என்றான்.
உன் பாரத தேசத்தால் வீடு எமக்குப் பகல்கனவு என்றேன்.
ஊமைப் பெருமூச்சை எறிந்தான்.
சலிப்பா என்றேன்.
இல்லை, அது என் சாபமென்றான்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம். - என்ற
ஒற்றைக் கனவாவது ஒழுங்காய் பலித்ததே என்றான்.
எப்படியப்பா?
அதுதான் கடலுக்குள் களனி செய்து காப்பாற்றுகிறீர்களே என்றான்.
மெல்லச் சிரித்தேன்.
சோமாலியா எதற்கு என்று
சொந்த நாடே சுட்டினேன்.
உன் நாட்டின் நிலைமையோ
இதைவிட மோசமென்றேன்.
உளைப்பு இல்லையோ?
செக்கு மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்
நெஞ்சம் குமுறுகிறார்
ஏன் என்றான் கவிஞன்
எதுவும் மாறவில்லை
என்றேன் நான்.
பொன்மொழிகள் பொய்க்காது – ஆகவே இந்தக்
கவிஞன் வாக்கும் பொய்க்காது தம்பி - பொய்ச்
சாதியேனும் போனதுவோ என்றான்
சோலி எதற்கென்று ஞாயிறு இதழில்
நான்கு பக்கம் சுட்டினேன்.
மணமகன் தேவை
மணமகள் தேவை
மாமியார் தேவை
தேவைகளின் தொடர்ச்சியாய்
சிவத்து உயர்ந்த சிங்கை மாப்பிளைக்கு
சீதணத்தோடு சேர்த்து
சாதியும் தேவைப்பட்டது.
துடித்தான் மஹாகவி.
போகுமுன்பு ஒன்று என்று
செல்லம்மாவின் சோறு போட்ட சிட்டுக்குருவி கேட்டான்.
இரசாயணத்தால் அழிந்துவரும் இன்னல் விளக்கினேன்.
போங்கடா என்று பொங்கினான்.
அன்றே சொன்னேன்
காலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை என்றான்.
விரக்திச் சிரிப்பிற்கு விளக்கம் கேட்டான்.
இன்னும் இன்னல் உள்ளதுவோ என்றான்.
நீதான் கவிஞனாயிற்றே - எங்கள்
கசியும் மௌனங்களில் இருந்தே
கண்டுபிடித்துக் கொள்ளேன் என்றேன்.
நான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.
பொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.
ஒன்று மனதிற்கொள்.
வாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்
தாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.
ஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்
ஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்
காரிருளின் கர்வத்தை மின்னல்களும் போக்கலாம்
அடித்த காற்றில் முகில் விலகி நட்சத்திரமும் தோன்றலாம்.
ஜயமுண்டு பயமில்லை மனமே
சும்மா இருக்காதே
பஞ்ச பூதங்களின் பழக்கம் தேடு
வேரில் வார்க்கப்பட்ட அமிலம் கிடக்கட்டும்
காற்றில் கரைந்திருக்கும் ஒட்சிசன் தேடு
காற்றைப் பிடிக்கக் கறுவி நின்றாலும்
தழுவிச்செல்லும் பழக்கம் நாடு
ஒப்பாரியிலும் ஒழிந்திருக்கும்
ஓர் ராகம் தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
நீர் போல் மாறு
பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே
எதுவுமே சும்மா இல்லை இயற்கையில்.
பூமி அமைதிதான் – ஆனால் அது
சும்மா சிரித்தாலே சுனாமி வருகிறது
இயற்கை பழகு
மேடு கிடக்கட்டும் – முதலில்
பள்ளத்தைப் பதம் செய்
கற்கள் கிடக்கட்டும் – முதலில்
கனிம மண்ணில் வேர் விடு
மலையின் மௌனத்தையும்
அருவி கொண்டு போக்கு
புல்லின் நுனியிலும்
புதுக் கவிதை தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
ஒற்றைச் சொடுக்கில் உலகம்
ஓடிக்கொண்டே இருக்கும் நகரம்
கடல் தூர்த்து நிலம்
காகிதமில்லா புத்தகம்
கணிப்பொறியில் கடிதப்போக்குவரத்து
நேனோ தொழில்நுட்பம் மூலம்
சிரன்ஜீவிதனம் சீக்கிரமே சாத்தியம்
என்னதான் வந்தாலும் - உலகின்
ஏதோ ஒரு மூலையில் மனிதம் ஒட்டிக் கிடக்கும்வரை
ஜயமுண்டு பயமில்லை மனமே.
எனது இந்தக் கவிதைக்கான தொகுப்பைப் படிக்கவும், கவியரங்கத்தினை லோஷன் அண்ணாவின் தளத்தில் தொடர்ந்து படிக்கவும் இங்கே சொடுக்கவும்.
Tuesday, May 17, 2011
ஈழத்துச் சதன்
சிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.
அதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.
பறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.
அவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.
ஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.
எவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.
ஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.
- ஈழத்துமுற்றத்திற்காக எழுதியது-
Wednesday, February 16, 2011
‘குஞ்சு’ பவன்
ஃபோட்டோ கொமன்ட் பவன் என்று பதிவுலகில் பலராலும் அறியப்பட்டவர் பதிவர் பவன். அதன் பின்னர் இவரது உல்டா கவிதைகளுக்காக பப்புமுத்து என்றும் நாமாகரணம் செய்யப்பட்டாலும் சில பல காரணங்களுக்காக இவருக்கு வைக்கப்பட்ட குஞ்சு பவன் என்ற பெயரே பலருக்குப் பிடித்துப்போனது, நிலைத்தும்போனது.
மொத்தமாக மூன்று கையடக்கத் தொலைபேசிகளுக்குச் சொந்தக்காரர். எங்கு சென்றாலும் மூன்று தொலைபேசிகளையுமே பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு செல்லும் இவர் மூன்றிலிருந்தும் மிஸ்ட்கால் மட்டுமே கொடுப்பார் என்பது கூடுதல் தகவல்.
சிறந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர். இவர் பந்துவீசும் பாணியை வைத்தும், இவரது தோற்றத்தை வைத்தும் இந்திய வீரர் இசாந் சர்மாவுடன் இவரை ஒப்பிடுபவர்கள் பலர். அது தனக்கு அவமானம் என்று கருதுகிறார் இவர் ;)
வெயிலோ, இல்லை குளிரோ இவரது அறையில் எந்நேரமும் ஒரு உஷா ஃபேன் சுற்றிக்கொண்டே இருக்கும்.
அண்மையில் தனது உயர்கல்வியை ஆரம்பித்திருக்கும் இவர் பகிடிவதையில் பகிடி மட்டுமே இருப்பதால் அது இப்போதைக்கு முடிந்துவிடக்கூடாது என்று கோணேஸ்வரப் பெருமாளை வேண்டிக்கொள்கிறாராம். நாளொன்றுக்கு பத்துப் பாட்டு, நாற்பது சல்யூட்டு என இவரது ‘பகிடி’ லிஸ்ட் நீள்கிறது.
புதிதாகக் கல்லூரியில் கிடைத்திருக்கும் நண்பிகளிற்கு பல விடயங்களையும் கற்றுக்கொடுக்கும் முக்கிய சுமை காரணமாகவே அண்மைக்காலமாக இவர் பதிவுகளை குறைத்துக்கொண்டிருப்பதாக நேற்றய கும்மியில் அறிவித்திருக்கிறார்.
விரல்வித்தை நடிகரின் பரம விசிறி. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு தூக்கிவிட்ட காலரை இன்னமும் இறக்காமலேயே சுற்றித்திரிகிறார் இவர்.
இவரது கம்யூட்டர் முதல் கனவு வரை அத்தனை இடங்களிலுமே எமா வட்சன் மயம்தான்.
அண்மைக்காலமாக இளையராஜாவின் காதல் பாடல்களை அதிகம் ரசிக்க ஆரம்பித்திருக்கிறார். யார் செய்த மாயமோ?
முன்பின் தெரியாத பெண் ஒருவர் கடையொன்றில் வைத்து “’நீங்கள் பதிவர் பவன்தானே?” என்று கேட்டதை இன்னும் பிறவிப்பயனாக நினைத்து மகிழ்கிறார்.
சுஜாதாவின் எழுத்து, வைரமுத்துவின் கவி வரிகள் எறு நீளும் ரசனைக்குச் சொந்தக்கார்ரான இவரது எதிர்கால இலட்சியம் ஒரு கிராஃபிக் டிசைனராவது.
இன்று இவருக்கு 21வது பிறந்தநாள் :)
எங்கள் குஞ்சு பவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
Tuesday, January 18, 2011
சின்னதாய்ச் சில…
யுத்தம் விட்டுச்சென்ற
கந்தகக் குழிக்குள்ளும்
எட்டிப்பார்க்கிறது ஈரம்..!
முன்பனி இரவு
பிச்சைக்காரன் தட்டில்
ஒடுங்கி விழுகிறது
ஒற்றைத்துளி..!
கனவுகளற்ற உறக்கத்தின்
கடைசிக் கணத்தின்பின்...
ஐயோ கொல்லாதே..!
தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' !
பறித்துக்கொண்டு பறக்கிறது.
எக்கணமும் வெடிக்கலாம்
சிறுவனின் உலகம்!
அரைத்தூக்கச் சிரிப்பில்
அம்மாவுக்கும் தெரிகிறது
குழந்தையின் கனவு!
Thursday, January 6, 2011
இசைப்புயலின் முத்துக்கள் மூன்று
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஒஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். இசைப்புயலின் இசையில் வந்து என்னால் அதிகமாகச் செவிமடுக்கப்பட்ட, அதிகமாக முணுமுணுக்கப்பட்ட, நான் விரும்பி ரசித்த மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயமாக இவை உங்களுக்கும் பிடித்தவையாகவே இருக்கும்
அந்த அரபிக்கடலோரம் – பம்பாய்
என் உற்சாகமான தருணங்களோடு உற்சாகமாகத் தொற்றிக்கொண்டுவிடும் பாடல் இது. இசைப்புயலின் குரலில் தாளம் போடவைக்கும் இந்தப்பாடலின் படத்தில் இடம்பெற்றதை விட மேடைக்கச்சேரிகளில் ப்ளேஸின் ராப் ஆரம்பத்துடன் பாடப்படும் இந்த வடிவம் என்னை இன்னும் அதிகமாகக் கவர்ந்திருக்கிறது
வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்
அந்த அரபிக்கடலோரம் பாடல் பாடிய அதே குரலில் இப்படியொரு மென்மையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலைத் தெரியச்சொன்னால் எனது தெரிவு இதுவாகத்தான் இருக்கும். காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசையும் உறுத்தாத குரலுமாக என் பலநாள் தூக்கங்களைத் தழுவிக்கொண்ட சுகானுபவம் இந்தப்பாடல்
புது வெள்ளை மழை – ரோஜா
இசைப்புயலின் முதற் படத்திலிருக்கும் இந்தப்பாடல் இதுவரை நான் அதிக தடவைகள் கேட்ட பாடல்களில் நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும். சுஜாதா, உன்னிமேனன் குரல்களில் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம் இந்தப்பாடலில். இதன் ஆரம்ப இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடனான ஹோரஸும் காதுகளில் கபடியாடுகையில் பல தடவைகள் என்னையறியாமலேயே கண்கலங்கியிருக்கிறேன். நிச்சயமாக ஒரு வித்தியாசமான உணர்வு அது.
Friday, December 24, 2010
Thursday, December 23, 2010
மன்மதன் அம்பு
கமல், கே. எஸ். ரவிக்குமார் இணைப்பில் வந்திருக்கும் கமலின் இன்னுமொரு ராக்கெட் மன்மதன் அம்பு. கமலின் கலகல + விறுவிறுப்பான திரைக்கதையில், அவரது பாணி அலட்டலில்லாத நடிப்பில் இறுதிவரை கட்டிப்போட்டுவிடுகிறது மன்மதன் அம்பு.
பிரபல தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவனும், சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். சூர்யாவுடனான சூட்டிங்கின்போது த்ரிஷாவிற்கு புதிதாக வாங்கிய காரை பரிசளிக்க வரும் மாதவனும் அவரது தாயார் உஷா உதூப்பும் சூட்டிங் பார்ப்பதற்காக இருந்துவிட அங்கு நடக்கும் சில சம்பவங்கள் த்ரிஷாமீது மாதவனுக்கு சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடுகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக பாரீஸ் செல்லும் த்ரிஷாவைக் கண்காணிக்க கமலை நியமிக்கிறார் மாதவன். அங்கு இடம்பெறும் திடீர் திருப்பங்களும், கதையோடு ஒட்டிய நகைச்சுவையும் திரையில் பார்க்கப்படவேண்டியவை.
முறுக்குமீசையும், மூன்றுநாள் தாடியுமாக இந்திய இராணுவ கமான்டோ மேஜர் ராஜா மன்னாராக வருகிறார் கமல். காதல் மனைவியை விபத்தில் பலிகொடுத்துவிட்டு பஞ்சதந்திரம் நண்பன் ரமேஷ் அரவிந்த்தின் கான்சர் ட்றீட்மென்ட்டுக்காக மாதவன் கொடுக்கப்போகும் பணத்தை எதிர்பார்த்து பாரீசில் அவருக்காக த்ரிஷாவைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் பாத்திரத்தில் வருகிறார் கமல். த்ரிஷாவின் பர்சைப் பறிக்கும் கும்பலைத் துரத்திப்பிடிக்கும் சேசிங் காட்சியில், அவரது மனைவியாக வரும் ஜூலியட்டை கடந்தல் கும்பலிடமிருந்து இராணுவ மேஜராக இருந்து காப்பாற்றும் காட்சியில், ‘போனால் போகட்டுன்னு’ பாடலில் ஆடிக்கொண்டே நடக்கும் காட்சியில், மனைவியுடனான ரொமான்டிக் காட்சியில், என்று நடிப்பில் வழமைபோல பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். திரைக்கதை, வசனங்களிலும் தனித்துத் தெரிகிறார்.
அவரைச்சுற்றியே நடக்கும் கதையைத் தாங்கும் நடிகையின் பாத்திரம் த்ரிஷாவுக்கு. கவிதை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவராக , அம்புஜாஶ்ரீ என்ற பிரபல நடிகையாக வருகிறார் அவர் இம்முறை சொந்தக் குரலில் பேசி அலட்டலில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
த்ரிஷாவைக் காதலிக்கும் சந்தேகப் பேர்வழியாக தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். அவருக்கேயுரிய ரொமான்டிக் லுக்குடன் அறிமுகமாகிறார். த்ரிஷாவுடனான ஊடலுக்குப் பிறகு அவரைக் கண்காணிக்க கமலை அனுப்பிவிட்டு அங்கு நடப்பவற்றை தொலைபேசியில் கேட்பதும், எந்நேரமும் நண்பர்களுடன் பாரில் தண்ணீரில் மிதப்பதுவும்தான் அவரது வேலை. க்ளைமார்க்சில் பாரீசிற்கு வந்து காமெடியில் கலக்குகிறார்.
பாரீசில் த்ரிஷாவின் பள்ளித்தோழியாக, இரு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்துவாழும் கதாபாத்திரத்தில் சங்கீதா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மகனாக வரும் குட்டி வாலு விஷ்ஷு பண்ணும் ரகளைகளும், பெரியவர்களின் சங்கேதங்களைப் பிடித்துக்கொண்டு அவன் பண்ணும் சேட்டைகளும் படம் முழுவதும் கலகல.
கான்சரில் அவதிப்படும் கமலின் நண்பனின் பாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், அவரது மனைவியாக ஊர்வசியும் வந்து போனாலும் ரமேஷ் அரவிந்த்தின் பாத்திரம் இன்னும் மனதிலேயே நிற்கிறது. இவர்களைத்தவிர த்ரிஷாவிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க அவரைத் துரத்தும் கேரள தயாரிப்பாளர் குஞ்சன் குரூப்பும், அவரது மனைவியும் கதையூடே நகரும் நகைச்சுவைக்கு நன்றாகத் துணைபோயிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் சூர்யாவாகவே வந்துவிட்டுப் போகிறார்.
கமலின் வரிகள் மற்றும் குரலில், தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் தியேட்டரில் தாளம்போட வைக்கின்றன. இலங்கை இரசிகர்களுக்கு போனஸ் பரிசாக கமலின் ‘கண்ணோடு கண்ணைக் கலந்தாள்’ கவிதையும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. புதுமையான ஒரு முயற்சியாக பின்னோக்கிப் பயணிக்கும் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் நீலவானம் பாடலும், அதற்கேற்ப சரியான வாயசைப்புகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. மனூஸ் நாடனின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரமும், சுற்றுலாக் கப்பலும் கண்முன்னே விரிகின்றன.
அருமையான கதைக்களத்தைத் தேர்வுசெய்து, அதற்கு நகைச்சுவை முலாம்பூசி வெளியிடுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் கமலும் கே. எஸ். ரவிக்குமாரும் என்றே சொல்லலாம். ஆங்காங்கே தன் நாத்திகக் கருத்துக்களையும் கமல் விதைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் மைனசாகச் சொல்லவேண்டுமானால் க்ளைமார்க்சுக்கு முந்தய கொஞ்சம் இழுவையான படகுக் காட்சிகளைச் சொல்லலாம். மற்றபடி அமைதியான முதற்பாதியும், கலகலப்பான இரண்டாம் பாதியுமாக ரசிகர்களுக்கு விருந்தாகிறது மன்மதன் அம்பு.
மன்மதன் அம்பு – கமலின் ராக்கெட்.
Saturday, December 18, 2010
இலங்கைப் பதிவர்கள் கிரிக்கெட் – புகைப்படங்கள்
நாளை ஞாயிற்றுக்கிழமை (19 – 12 – 2010) காலை 9.31 முதல் இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். சந்திப்பு வழமைபோல பதிவர் கெளபோய்மது அவர்களால் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.
இதையொட்டி பதிவர்களின் அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக இன்று இடம்பெற்ற பதிவர்களிற்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் புகைப்படங்களை கீழே காணுங்கள்
நன்றி நண்பர்களே!, நாளை சந்திக்கலாம்.
Thursday, December 16, 2010
மீண்டு'ம்...'
ஆழம்
ஆழி அடி இருளில்
அமிழ்ந்திருந்து, அலைக்கழிந்து மேல்வந்து
ஆர்ப்பரிந்த மேற்பரப்பின் ஓரத்தில்
வெளிச்சத்தின் கிறக்கத்தில் - இவன்
அறிவுக்கெட்டிய ஆழத்தின் தேடுதலில்
இன்னும்
அதே இருளில்
அது...!
நம்பிக்கை
பொத்தி விரிந்த கரங்களில்
ஒட்டிக்கொண்ட மஞ்சள்பற்றி
லஜ்ஜையற்றுக் கிளம்பியது
இரசாயணத்தில் இறக்கப்போகும்
இறுதிப் பட்டாம்பூச்சி..!
அன்பு
தொடங்கலிலும், முடிவிலுமாக
கடிதங்களில் மட்டும் தொங்கியிருந்ததைக்
கலைத்தெறிந்துவிட்டது காலம்
சங்கேதச் சுருக்கங்களையும்
அடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி - இன்னும்
பாட்டியின் பார்வைக்கு மட்டும் இழைத்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு சந்திப்பிற்கிடையிலும்…!
Monday, December 6, 2010
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட்
முஸ்கி – இந்தப் பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. தெரிந்தோ, தெரியாமலோ யார் மனதாவது புண்பட்டால் மருந்து போடுவதற்கு மருத்துவர் பாலவாசகனை அணுகவும்.
இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையில் பதிவர் நிரூஜாவின் அறிமுக உரையோடு ஆரம்பமாகியது.
இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள். பதிவுகளின் மூலம் சந்தித்துவந்திருக்கும் நாம், இன்று நேரில் சந்தித்திருக்கிறோம். இணையம் என்பதே ஒரு மாயை. அதில் கவற்சியான பெயர்கள் மற்றும் சம்பவங்கள் கொண்டு யாரையும் ஏமாற்றிவிடலாம் என்பதாலேயே இப்படியான சந்திப்புகள் அவசியமாகின்றன. முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றேன். நான் நிரூஜா என்று ஆரம்பிக்க முன்னாள் பதிவர் புல்லட் வாய்க்குள் ஈ புகுந்தது கூடத் தெரியாமல் அவரையே வெறித்துப்பார்க்கின்றார்.
அடுத்ததாக தன்னை அறுமுகப்படுத்த வருகிறார் பதிவர் மதிசுதா.
‘எனக்குத்தான் சுடுசோறு, இரண்டாவதாக பேசினாலும் சோறு இன்னும் ஆறேல்லை, சூடாத்தான் கிடக்கு’ என்றவர், ‘ நான் மதிசுதா, நனைவோமா என்ற தளத்தில் எழுதிவருகிறேன்’ என்று முடித்தார்.
அடுத்ததாக கன்கொன் கோபியின் முறை வர, அதைக் கவனிக்காமல் தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து யாரோ கோபிக்கண்ணா என்று செல்லமாக அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
‘நான் கோபிகிருஷ்ணா, கன்கொன் என்ற பெயரில் ….. பெயரில் ….. ‘என்று சிறிதுநேரம் யோசித்தவர், ‘தளத்தின்ட பெயர் எனக்கே மறந்துபோச்சு, அடுத்தமுறை வரேக்கை பாத்துக்கொண்டுவாறன்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.
அடுத்ததாக பதிவர் ஜனா
‘நான் ஜனார்த்தனன். Cheers with Jana என்ற தளத்தில் எழுதி வருகிறேன். இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்.... ஜப்பானிய இலக்கிய எழுத்தாளர் ஹருகி முரகாமி தனது யசுநாரி கவபாட்டா என்ற நாவலில் கூறியிருக்கிறார் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று. அவ்வாறான எனது தேடல்கள்தான் பதிவுலகுமூலம் வெளிப்படுகின்றன. பதிவர் சந்திப்புக்கு நன்றி’ என்று முடித்தார்.
அடுத்ததாக மைக்கைப்பிடித்தார் பதிவர் மது
‘அன்பின் பதிவர் எல்லாருக்கும் வணக்கம், நான் தான் மது’. எல்லோரும் குறுகுறுன்னு யாரோ புதியவரைப் பார்ப்பது போல பார்க்க, ‘ஆங்.. என்ன அப்பிடிப் பாக்கீங்க எல்லாரும் நான்தான் மதுயிசம் மது’ என்றார். அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் தோன்ற அப்பாடா என்று உட்காந்தார்.
அடுத்து சிவப்பு டீசர்ட் கையில் கறுப்பு ஜாக்கட், டீசர்ட் கழுத்தில் டீசர்ட்டை ஈய்த்துக்கொண்டிருக்கும் கறுப்புக்கண்ணபடி, காலில் கன்வஸ் சப்பாத்து,கைகளில் கறுப்பு கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்
‘அனைவருக்கும் வணக்கம் நான்தான் வந்தி வித்தின் பிரக்கட்ஸ் லண்டன் என் உளறல்களி்ல் சூப் வழங்கி வருகிறேன். இப்பதான் லண்டனில இருந்து ஃபிளைட் பிடிச்சு நேரா வாறேன்’. என்று முடித்தார்.
அடுத்ததாக சிரித்துக்கொண்டே மைக் பிடித்தார் கூல்போய் கிருத்திகன்.
‘வணக்கம். நான் கிருத்திகன். மதிசுதா அண்ணைக்கு சுறுசோறு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் பதிவு எழுதாவிட்டாலும் பதிவுலகத்தை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். பொழுது போக்கு எண்ட தளத்தில எழுதுறன். யாரும் எனக்குக் கோல் எடுத்துப்போடேதைங்கோ, ஐ ஆம் ஆல்வேய்ஸ் பிசி’ என்று காதுவரைக்கும் சிரித்தார்.
அடுத்ததாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பதிவர் ஆதிரை
‘நான்தான் ஆதிரை. கடலேறி என்ற தளத்தில எழுதினான். திடீரென்று பார்த்தால் அது என் பார்வையினூடு… என்று மாற்றப்பட்டிருக்கு. எனக்கு அடிக்கடி பதிவெழுத ஆசைதான். ஆனாலும் சில கடவுச்சொல் பிரச்சினைகளால் எழுதமுடியாமலிருக்கு’ என்று கவலையுடன் அமர்ந்தார்.
அடுத்து எழுந்த அனுதினன்
‘ஹாய் எவ்ரிபொடி, ஐம் அனு சுருக்கமா என்னை அனுதினன் அனுதினன்னு கூப்பிடுவாங்க, ஆடுகளம் என்ற பெயரில வலைப்பதிவை எழுதி வருகிறேன். சுத்தவர இருக்கிற 205 பட்டிக்கும் or பியூட்டிக்கும் நானே ராஜா, ஒரு நாள் நான் திருகோணமலையில இருந்து ரெயினில வந்துகொண்டிருந்த போது…..’ என ஆரம்பிக்க பவன் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கத்தொடங்கினார்.
அடுத்ததாக எழுந்த பதிவர் லோஷன்
‘நான்தான் லோஷன் அலைஸ் விக்கி அலைஸ் விக்கிரமாதித்தன்’ என்று தொடங்க குறுக்கிட்ட நிரூஜா,
‘அண்ணே கோவிக்காதைங்கோ, உங்களைத்தெரியாதாக்கள் யாராவது இருப்பினமோ? இப்ப இடைவேளை நேரம்’ எனச்சொல்ல கன்கொனும், அஸ்வினும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பதிவர் வதீஸ் கையில் பக்கோடாவுடன் வர, லண்டனில குளிர் -17. சூடா பக்கோடா சாப்பிட்டா இதமா இருக்கும் என்றவாறே சதீஷ் எழுந்துகொள்ள இடைவேளைக்காக அறிமுகம் இடைநிறுத்தப்பட்டது.
Saturday, December 4, 2010
கொலைக்காற்று
ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது. கண்டி மாநகரின் கடுங் குளிருக்கு இதமாக இரண்டாம் முறையாக அடித்த அலாரத்தையும் ஸ்னூசில் போட்டுவிட்டு அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டாள் வர்ஷா.
‘ஹேப்பி பர்த்டே டார்லிங்’ பார்த்ரூமிலிருந்து உற்சாகமாக வெளிப்பட்ட கௌதம் குரலைத்தணித்து ‘இன்னும் தூங்கிட்டிருக்கியா? ரொம்பவே டயர்ட் போல’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். அந்தக் குளிருக்கும் குளித்திருந்தான். இடுப்பில் சுற்றியிருந்த துவாயின் கீழே கால்களில் இன்னும் ஈரமிருந்தது. மெதுவாக அருகில் வந்து ஈர விரல்களால் அவள் கன்னங்களை வருடினான். சிணுங்கிக்கொண்டே திரும்பியவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுவிட்டு, மறுபடியும்
‘ஹேப்பி பர்த்டேடா’
‘ம்ம், விஷ் எல்லாம் இருக்கட்டும். என்ன கிஃப்ட் தரப்போறீங்க?’
‘அதான் நேற்று நைட்டே கொடுத்தேனே’ சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.
‘ஏய், யூ…’ என்று அவனைத் தள்ளிவிட்டவள், ‘ஓகே, ரெடியாகு, இன்னும் பத்தே நிமிஷத்தில கிளம்பிடலாம்’ என்றவாறே எழுந்து, பாத்ரூமிற்குள் சென்று சாத்திக்கொண்டாள்.
இரவுக் குளிரில் ஈரமான வீதிகளை மரங்களினூடான சூரியப்பொட்டுக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. இலைகளில் ஒடுங்கிக்கிடந்த நீர்த்துளிகள் சொட்டத்தொடங்கி காலைக்குளிரை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்க, அந்தக் குளிரிலும் திருமணமாகி ஒரு வாரமே ஆன புது மனைவியின் கைகோர்த்தபடி நடந்துகொண்டிருப்பது இதமாகத்தான் இருந்தது கௌதமிற்கு.
‘வர்ஷு, ஹௌ டூ யூ ஃபீல்?’
‘இப்படியே நடந்துட்டே இருக்கலாம் போல இருக்குங்க’ கையை இன்னும் இறுக்கியவாறே அவன் தோளில் சாய்ந்துகொண்டவளைக் கடைக்கண்ணால் ரசித்துக்கொண்டான். சிலநிமிட நடையில் இருக்கும் கோயிலில் பிறந்தநாள் தரிசனம் முடித்துவிட்டு, அருகிலேயே ரெஸ்ரொரன்டில் காலை உணவையும் எடுத்துக்கொண்டு கொழும்பு புறப்பட்டாகவேண்டும். திருமணத்திற்காக எடுத்த விடுமுறை இன்றுடன் முடிய, அடுத்தநாள்முதல் அமரிக்க முதலாளித்துவத்திற்கு ஆணி பிடுங்கி, றூபியுடன் மல்லுக்கட்டவேண்டும் என்று நினைக்கையிலேயே என்னவோ செய்தது அவனிற்கு.
**********************************
கொழும்பு நகரின் இதயப்பகுதியிலிருக்கும் அந்த அப்பார்ட்மென்ட் வழமைக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையும் பரபரப்பாகக் காணப்பட்டது.
‘இங்கதான் சேர், த்தேர்ட் ஃப்ளோர்’
‘இவர்தான் முதல்ல பாத்திருக்கார்’
‘அன்யூஸ்வலா கதவு ரொம்பநேரம் திறந்திருந்தது சார், அதுதான் எட்டிப்பார்த்தேன்’
அப்போதுதான் வந்திறங்கியிருந்த இன்ஸ்பெக்டரிடம் யார்யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். லிஃப்டில் ஏறி வேகமாக மூன்றாம் மாடியை அடைந்தார் இன்ஸ்பெக்டர். மூன்றாம்மாடி வெறிச்சொடிப்போய் நிசப்தமாக இருந்தது. லிஃப்டின் எதிரிலேயே ‘ஓ’வெனத் திறந்திருந்த வீடு அவரை வரவேற்றது. டைல்ஸில் வடிந்திருந்த இரத்தம் வாசலில் திட்டாக உறைந்துபோய்க் கிடந்தது. இரத்தத்தைக் கண்ணாலேயே பின்தொடர்ந்தவருக்கு அதிகம் வேலை வைக்காமல் முன்னால் சொஃபாவின் அருகிலேயே சுருண்டு கிடந்தாள். பிங்க் நிறத்தில் இரவு உடை அணிந்திருந்தாள். இரத்தம் தோய்ந்த கத்தி அருகிலேயே கிடக்க, அவள் வயிற்றுப்புற ஆடை பிங்கிலிருந்து சிவப்பாக மாறி, பின் கபிலமாகக் காய்ந்துபோயிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் தயங்கியபடியே அழைத்துவரப்பட்டார்.
‘இவங்க பெயர் தெரியுமா?’
‘ஜெனி சார்’
‘கூட வேற யார்யாரெல்லாம் இருந்தாங்க?’
‘பேரன்ட்ஸ் இருந்தாங்க சார், போன கிழமைதான் ஊருக்குக் கிளம்பிப்போனாங்க. அவங்களுக்குக்கூட ஃபோன் பண்ணி சொல்லிட்டோம்’
‘கல்யாணம் ஆயிடுச்சா?’
‘இன்னும் இல்லை சார்’
‘நைட் உங்களுக்கு சத்தம் எதுவுமே கேக்கலையா?’ உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்.
‘ஓகே, யூ மே கோ நவ், அப்புறமாக் கூப்பிடுறேன்’ என்று தலையாட்டியவாறே வீட்டுக்குள் நுளைந்த இன்ஸ்பெக்டர் ஆதாரங்களைச் சல்லடை போடத்தொடங்கினார். ப்ரிண்ட்ஸ்காக ட்ஸ்ட் பண்ணி முடித்திருந்த சொபா முதற்கொண்டு மேசை ட்றாயர் வரை சல்லடைபோட்டார். அலமாரிகளைப் புரட்டிப்போட்டார். அங்கே கிடைத்த ஜெனியின் ஹேன்ட் பேக்கை ஆராயத்தொடங்கினார். மூக்கு மட்டுமே தெரியக்கூடிய சைசில் முகம்பார்க்கும் கண்ணாடி, லிஃப்ஸ்டிக், இரண்டு வகை ஸ்ப்ரே, சில கிரீம்கள் என்று ஒவ்வொன்றாகப் புறக்கணித்துக்கொண்டு வந்தவரின் கைகளில் அவளின் பர்ஸ் அகப்பட்டது. எடுத்துத் திறந்தவர் ஒருமுறை நெற்றியைச் சுருக்கிவிட்டுக்கொண்டார்.
அதிலே இருந்த புகைப்படத்தில் ஜெனியின் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.
இந்தத் தொடர்கதையை சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது. அவரவர் கற்பனைக்கே விடப்பட்டுள்ள தொடரில் எனக்கு அடுத்ததாக பதிவர் பவன் தொடர்வார்.
பின்னிணைப்பு
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம்பாகம்
பதிவர் சதீஷால் எழுதப்பட்ட மூன்றாம்பாகம்
பதிவர் மதுவால் எழுதப்பட்ட நான்காம்பாகம்
பதிவர் லோஷனால் எழுதப்பட்ட ஐந்தாம்பாகம்
Thursday, December 2, 2010
ம்…
வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட
ஊமல் கொட்டைகளினதும்
மண் கட்டிகளினதும்
எறி பிடி விளையாட்டு
தண்ணீர் நிரம்பிய
சதுரக் குழிகளுக்குள்
சறுக்கி விழுந்து அடித்த நீச்சல்
எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்
கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு
பேச நாதியின்றி
எமக்குள் பேசியபடி
நானும், இன்னுமொரு பொம்மையும்
பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்
Tuesday, November 9, 2010
வந்தியத்தேவன்
சரியாக ஒரு வருடம் ஏழு நாட்களுக்கு முந்தய ஒரு இனிய பொன்மாலைப்பொழுதில் ஆமர்வீதி 176ம் இலக்க பேருந்து நிறுத்தத்தில்தான் இவருடனான எனது முதலாவது சந்திப்பு. அன்று கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தள்ளாடி ஆரம்பித்த எங்கள் நட்பு அதன்பின்னரான மின்னஞ்சல் கும்மிகளால் ஸ்டெடியானது.
இவர் ஒரு தாவர போஷணி. எக்காலத்திலும் மாமிசத்தை ருசிக்கவே மாட்டேன் என்று தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்திருக்கும் இவர் ஒரு முருங்கைக்காய்ப் பிரியர் என்பது கூடுதல் தகவல்.
பெரிதாக நண்பர்கள் இல்லாது இலண்டனில் தனிமையில் தவித்துவந்த இவர் சதீஷின் இலண்டன் விஜயத்துக்குப் பிறகு மகிழ்ச்சியில் திளைப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைச் சிரிப்புக்குச் சொந்தக்காரர். சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் விண்ணர். சிரிப்பிலும், சொ. செ. சூ வைத்துக்கொள்வதிலும், ஏன் இவரது எல்லாத் தனித்துவங்களிலுமே இவருக்குப் போட்டியாக இளவல் ஒருவர் உருவாகிவந்தாலும்கூட இவருக்கு நிகர் இன்னும் இவரேதான்.
தன்னைப் பச்சிளம் பாலகனாக அறிவித்துக்கொள்ளும் இவர் அதற்கேற்ப தனது நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்பவர். லோஷன், ஆதிரை, கோபி, பவன் என்று விரிவடைந்த இவரது நட்பு இப்போது வந்து நிற்பது லோஷன் அண்ணாவின் குட்டி மகன் ஹர்ஷுவில்!
இவர் ஒரு கமல் பைத்தியம். உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.
இவர் ஒரு சங்கீதப்பிரியர். இளையராஜாவின் இசை ரசிகர். எக்காரணம் கொண்டும் இசைஞானியின் பாடல்களைத் தாண்டிப் பெரிதாகக் கவராத இவரது ரசனையை எந்திரன் பாடல்கள் கவர்ந்துள்ளன. காரணம் ஒரு தொலைபேசி அழைப்பாம்.
யாழில் பிறந்து, கொழும்பில் வளர்ந்து, தற்போது இலண்டனில் உயர்கல்வி கற்றுவரும் இவர் தனது எதிர்காலத்தை குஜராத்தில் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்.
நீச்சல், ஜிம் என்று தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் ஒரு கராத்தே ஸ்பெசலிஸ்டும் கூட. மின்னஞ்சல் கும்மிகளில் தனது (மான்)கராத்தே கலையை அடிக்கடி காண்பித்து அசத்துவார்.
பெற்றோரின் செல்லப்பிள்ளை. வீட்டின் இளவல். உறவினர்களுக்கு இவர் என்றாலே ஆவல். நண்பர்களின் கும்மிக்கோ இவர் ஒரு அவல்.
இத்தனையும் எதற்காக என்கிறீர்களா...?
இன்று இவருக்கு பிறந்த நாள்.
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வந்தியரே...
அனைவருக்கும் சுடச்சுட சூப் கொடுக்கும் இவருக்காக எனது பிறந்தநாள் பரிசு சிரட்டையால் செய்யப்பட்ட இந்த soup bowl
Saturday, October 2, 2010
எந்திரன் – குற்றமும் பின்னணியும்
“சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதையில் இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாகவேண்டும்” - சுஜாதா
மேலைநாட்டுக் இலக்கியங்களிலேயே தாராளமாகக் காணப்பட்ட அறிவியல் புனைகதைகள் (Science fiction) மற்றும் எதிர்காலவியல் சிந்தனைகளுடன் கூடிய கதைகள் (Futurology) என்பவற்றை மேலைநாட்டு வட்டத்தைத்தாண்டி தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அவருக்கு முன்னரும் சில கதைகள் தமிழில் இந்த வட்டத்தைத் தொட முயற்சித்திருந்தாலும், சைன்ஸ்ஃபிக்ஷன் என்று அவற்றை ஏற்றுக்கொள்வது சிரமம்தான்.
இந்த சைன்ஸ்ஃபிக்ஷனை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் ஆங்கிலத்தில் சாதாரணமானவை என்றாலும், தமிழுக்குப் புதிது. இவற்றுக்குப் பின்னாலிருக்கின்ற அதிக பொருட்செலவுதான் இதற்குச் சொல்லப்படுகின்ற பிரதான காரணமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களுக்குள்ளாகவே நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் குத்தப்பட்டுவிடுகின்ற ‘இமேஜ்’ உம், அதைவிட்டு வெளியே வருவதை அவர்களும், ரசிகர்களும் விரும்பாததும்கூடக் காரணம்தான். இதே காரணத்துக்காகத்தான் எந்திரன் ரஜினி படமா, சங்கர் படமா என்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ரஜினியின் அண்மைக்காலப் படங்களில் ரஜினி என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார். சந்திரமுகி, சிவாஜி என்று இப்போது எந்திரனில் சாதாரணமாக நடித்துவிட்டுப் போயிருப்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், வரவேற்கவேண்டிய ஒரு விடயமே. அடுத்ததாக சங்கர். அவரது வழமையான ஊழல் பேயைத் துரத்தும் வேலையையும், நாட்டை மாற்றியமைக்கும் முக்கியமான பொறுப்பையும் புறந்தள்ளிவிட்டு, வித்தியாசமான ஒரு முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்.
சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, இன்னும் அவற்றில் லாஜிக் அடி வாங்கிய இடங்களையும் மாற்றி எந்திரனில் ரோபோவையும் காதலிக்கவைத்திருக்கிறார். படத்தில் இவரது பல வசனங்கள் நறுக் என்று இறங்குகின்றன. வசனங்களில் தாராளமாகக் கடந்துபோகும் அறிவியல் சங்கதிகள் எல்லாம் உறுத்தாமல் இறங்குகின்றன. இப்படி ஒரு படத்திற்கான கதையை பத்துவருடங்களுக்கு முன்னரேயே எழுதிவிட்டு இறந்துபோயிருக்கிறார். இவர் இல்லாவிட்டால் எந்திரனை தொழில்நுட்பத்தில் அதிகம் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இப்படி ஒரு பரிமானத்தில் சாத்தியமே இல்லை. எந்திரத்திற்கும் உணர்வுகள் வருகின்றட என்பதை மீண்டும் ஜீனோவில் தொட்டுச்சென்றவர், எந்திரனில் அதைக் காதலிக்கவும் வைத்துவிட்டார். படத்தை குறைந்தபட்சம் அவருக்கு சமர்ப்பணமாவது செய்திருக்கலாம். எல்லாம் பணம் செய்யும் வேலை.
ரஹ்மானின் பின்னணி இசை எங்கேயுமே உறுத்தாமல் படத்தோடு சேர்ந்து ரசிக்கமுடிகிறது. பாடல்கள் தியேட்டரில் கேட்கும்போது அதிகமாக இனிக்கின்றன. குறிப்பாக அரிமா அரிமா ஹெட் செட்டில் கேட்கும்போது இல்லாத ஒரு உணர்வை தியேட்டரில் கொடுத்தது. ஆஸ்கர் பெற்றுக்கொண்டபோது அவர்முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மீண்டும் ஒருமுறை எந்திரன் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். கிளிமாஞ்சாரோ பாடல் ஏற்கனவே பிடித்துவிட்டாலும் திரையில் பாடலை ரசிக்கவிடாமல் ஐஸ் ஆக்கிரமித்திருக்கிறார். ஐஸ் படம் முழுவதும் அப்படியேதான் வந்துபோனாலும் க்ளோசப் காட்சிகள் அவருக்கும் வயதாவதைக் காட்டுகின்றன.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் க்ளைமாக்சின்போது கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தாலும், அதன் நுணுக்கங்கள் கச்சிதமாக இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் சிட்டி ரோபோ தன் எந்திர உடலுடன் முதன்முறையாக ரஜினி ஸ்டைலிலேயே நடந்துவந்து, இடுப்பில் கைவைத்து லுக்குவிடும் காட்சி ஒன்றே போதும், கிராபிக்சின் துல்லியத்தையும், சங்கர் அவற்றைக் கையாண்ட நேர்த்தியையும் சொல்ல.
இந்தப் படத்தில் ரசித்த இன்னுமொரு விடயம், காட்சிகளை பலதரப்பட்ட ரசிகர்களையும் கவரும்படியான காட்சிகள்தான். விஞ்ஞான நுணுக்கங்களைக்கூட போகிறபோக்கில் உறுத்தாமல் சொல்லிவிட்டுச் செல்வது அழகு. படத்தின் ஒன்லைன், பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், சொல்லப்பட்ட விதம் எல்லாமே தமிழ் சினிமாவிற்குப் புதிது. இதில் உள்ள ஆங்கிலப்படத்தின் தாக்கங்களை தேடித்தேடிப் பலரும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தப்படத்துக்கான சிந்தனை பத்து வருடங்களுக்கு முற்பட்ட ஒன்று, இரண்டாவது இப்படி ஒரு படம் தமிழுக்குப் புதிது. எந்திரன் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு படம். குறை கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்துக்கொண்டேயிருங்கள். புறக்கணிப்பவர்கள் புறக்கணித்துக்கொண்டேயிருங்கள். உங்களுக்காகவே யாராவது மசாலா அரைத்துக்கொண்டிருப்பார்கள்.
Thursday, September 23, 2010
டைமன்ட் (சவால் சிறுகதை)
கையிலிருந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு புன்னகையுடன் மீண்டும் ஒருமுறை தலையை ஆட்டிக்கொண்டான் சிவா. அதிலே பூக்களின் பின்னணியில், மாலைச்சூரிய வெளிச்சத்தால் அங்கங்களும் கொஞ்சம் மஞ்சள் தொட்டுத் தெரிய, வெள்ளை நிற ஆடையில், ஃபேன்சி தோடுகள் சகிதமாக ‘சீஸ்’ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள் காமினி.
‘சூப்பரா இருக்கா பாஸ், ஆமா பெயர் என்ன சொன்னீங்க?’
‘காமினி’ இது பரந்தாமன்
‘என்ன பெயர் பாஸ் இது? ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க?’
‘அடேய், அது அவளோட ஒரிஜினல் பெயர்டா, சரி நீ கிளம்பு. நைட் 2.30க்கு லேன்டிங். ட்றஃபிக் இருக்காது. ஒன் அவர்ல இங்க வந்துடலாம். பொருள் பத்திரம்’
‘பயப்படாதீங்க பாஸ், பொண்ணும் பத்திரமா இருக்கும்’ சிரித்தபடியே காரைக் கிளப்பினான் சிவா.
-
பதினைந்து நிமிடத் தாமதத்துடன் ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி முரண்டுபிடித்துவிட்டு, மூன்றாவதுதடவை முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வருகையை ஒற்றை வார்த்தையில் அறிவிப்புப்பலகை அறிவிக்க, ஒருவித பரபரப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. சிறிதுநேரத்திலேயே வெளிப்பட்ட காமினியைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமமிருக்கவில்லை அவனுக்கு.
‘ஹாய், ஐம் சிவா’ என்றவாறே கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டான்.
‘காமினி’
‘ஐ நோ, நைஸ் நேம். ட்ராவல்ல ஒண்டும் பிரச்சினையில்லையே?’
‘இல்லை. போகலாமா?’
இடதுபக்கக் கதவால் காமினி பின் சீட்டில் ஏறிக்கொள்ள, சீட் பெல்ட்டை மாட்டியவாறே காரை எடுத்தான் சிவா.
‘U.K ல எங்க இருக்கிறீங்க?’
‘Uxbridge’
‘ஸ்டூடன்ஸ் விசாவா? என்னோட மாமாகூட அங்கதான் இருக்கார், பெயர் கூட வந்…’
‘சிவா, உங்க பருப்பு எங்கிட்ட வேகாது. பரந்தாமன் அங்கிள் உங்களைப்பற்றி முன்னாடியே எல்லாம் சொல்லிட்டார். So, கொஞ்சம் பேசாமப் போறீங்களா?’
கோபத்துடன் சிவா ஆக்சிலரேட்டரை மிதிக்க, அதிகம் வாகனநடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் சீறிப்பாய்ந்தது கார். சிறிதுதூரத்தில் குறுக்கே புகுந்த மோட்டார்சைக்கிள்காரனைக் காப்பாற்ற சிவா எடுத்துக்கொண்ட முயற்சியால் கார் கண்ணுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த இரும்பு மின்விளக்குக்கம்பத்தை 30 பாகையால் சரிக்க, அதே வேகத்தில் முன் சீட்டில் இடிபட்டு, மீண்டும் பின்னால் பிடரியில் அடிபட்டு பின்சீட்டிலேயே வலதுபக்கமாகச் சரிந்தாள் காமினி.
-
உடலில் ஆங்காங்கே வயர்கள் மாட்டப்பட்டு, கண்கள் சொருகிய நிலையில் சோர்ந்து கிடந்தாள் காமினி.
‘சீரியசா எதுவுமில்லை. நெத்தியிலதான் ஏழு ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். ரத்தம் கொஞ்சம் அதிகமாப் போனத்தல மயங்கிட்டா. பிரடியில அடிபட்டதால மூச்சுவிட கொஞ்சம் கஸ்டப்பட்டா, இப்ப எல்லாம் நார்மல். கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சுடுவா’ அருகில் டாக்டர் ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி, பரந்தாமன் வீட்டைச் சென்றடைந்தாள்.
‘என்ன ஆச்சு காமினி? ஏன் இவ்வளவு லேட்? நெத்தியில என்ன காயம்?’ பார்த்ததுமே பதறிய பரந்தாமனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள் காமினி.
‘அப்ப சிவா?’
‘சீட் பெல்ட் மாட்டியிருந்ததால அவனுக்கு அவ்வளவா அடிபடல போல, ஆக்சிடன்ட் ஆனதுமே கார்லருந்து இறங்கி என்னோட ஹேன்ட்பேக்கையும் எடுத்துட்டு ஓடுறதைப பார்த்தேன். அதுக்கப்புறம் நான் மயங்கிட்டதால எதுவுமே தெரியல’
‘அதுசரி, நீ எதுக்கும்மா ஹாஸ்பிட்டல்ல இருந்து ஓடிவந்த? போலீஸ் கேஸ் வேற. சிக்கலாயிடும். வா போலீஸ் ஸ்ரேசனுக்குப் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு, உன் மத்த லக்கேஜசையும் வாங்கிட்டு வந்துடலாம்’
இவர்கள் வாசலால் வெளியேற, அதற்காகவே காத்திருந்தவன் போல குறுக்கே பாய்ந்து
‘ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை’ என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
‘த்சோ த்சோ த்சோ, பயந்துட்டியா?’ என்றவாறே துப்பாக்கியை எடுத்து இம்முறை பரந்தாமனின் நெற்றியில் வைத்தான்.
‘உன்னோட லக்கேஜில எனக்குத் தேவையான பொருள் ஒண்டு இருக்கு. மரியாதையா அதை எப்படியாவது போலீஸ்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்திடு. ஏதாவது வம்பு பண்ணணும்னு நினைச்சா உன்னோட பரந்தாமன் அங்கிள் அந்தப் பரந்தாமன்கிட்டயே போகவேண்டியதுதான்’ என்றான் சிவா.
-
சில மணி நேரங்களில் லக்கேஜை எடுத்தவாறு உள்ளே நுளைந்த காமினி பரந்தாமனும், சிவாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றாள்.
‘காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே’ என்று பாராட்டினார் பரந்தாமன்
‘டைமன்டா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி
‘என்னோட ப்ரண்ட் உன்கிட்ட தந்துவிட்ட பார்சல்ல டைமன்ட் இருக்கிற விசயம் உனக்குத் தெரியாது. அது இருக்கிற பாக் எண்டு நினைச்சுத்தான் சிவா உன்னோட ஹேன்ட்பேக்கை எடுத்துட்டு ஓடினான் என்கிறதும் உனக்குத் தெரியாது. கடைசியா நான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தா அரஸ்ட் பண்ணிடுவாங்க என்கிறதால உன்னைத் தனியா அங்க அனுப்புறதுக்குப் போட்டதுதான் இந்த துப்பாக்கி ட்றாமா என்கிறதும் உனக்குத் தெரியாது’ என்றுவிட்டு அதிர்ந்து சிரித்தார் பரந்தாமன்.
‘இப்ப உங்களைக் கொண்ணுட்டு டயமன்டை நானே எடுத்துக்கப்போறேன் எண்டுற விசயம் உங்களுக்குத் தெரியாது பாஸ்’ என்றவாறே பரந்தாமன் தலையில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
‘வெரிகுட், ஆனா நான் போலீஸ் என்கிற விசயம் உங்கள் ரெண்டுபேருக்குமே தெரியாது’ என்றவாறே சிவாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாள் காமினி.
Tuesday, August 31, 2010
யாழ்ப்பாணம் - 2
யாழ் பொதுசன நூலகம்
காரைநகர் ஈழத்துச்சிதம்பரம்
சங்கிலிய மன்னனும், ஆட்சியின் எச்சங்களும்
யாழ்ப்பாணம் நூதனசாலையிலிருந்து…
நல்லூர்


