யாழ் பொதுசன நூலகம்
காரைநகர் ஈழத்துச்சிதம்பரம்
சங்கிலிய மன்னனும், ஆட்சியின் எச்சங்களும்
யாழ்ப்பாணம் நூதனசாலையிலிருந்து…
நல்லூர்
யாழ் பொதுசன நூலகம்
காரைநகர் ஈழத்துச்சிதம்பரம்
சங்கிலிய மன்னனும், ஆட்சியின் எச்சங்களும்
யாழ்ப்பாணம் நூதனசாலையிலிருந்து…
நல்லூர்
பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்
வாசித்துவிட்டுத் தொடர்ந்து வாசிக்கவும்.
சந்தோஷின் தொலைபேசியில் தெரிந்த அவளது பெயரைப் பார்த்ததுமே எடுத்துப் பேசடா என்று மனது குறுகுறுக்க, நண்பனின் தொலைபேசியில் ஒரு பெண்ணின் அழைப்பு என்ற நாகரிகங்களையெல்லாமே மறந்துவிட்டுத் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக் ‘ஹலோ’ என்றான் ஹரீஷ்.
‘ஹலோ, இஸ் சந்தோஷ் ஓவர் தேர்?’ என்ற எதிர்முனையின் குரலைக் கேட்டு மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிக்க, அவள்தான், அவளேதான் என்று இதயம் வேகமெடுக்க, தானாகவே கிளம்பிய சிரிப்பையும் கட்டுப்படுத்திக்கொண்டு
‘நோ, ஐம் ஹிஸ் ப்ரன்ட் ஹரீஷ்’
‘பார்டன்’
‘ஐம் ஹரீஷ், நீங்க தேவா சேரின்ட மகள் தானே?’
………….
‘ஹலோ….. ஹலோ......’
எதிர்முனையின் மௌனத்தை தொலைபேசி இணைப்பின் ‘பீப்’ ஒலி துண்டித்தது. கண நேரத்துக்குள் கலைந்துவிட்ட தன் சந்தோஷத்தை ஹரீஷ் பெருமூச்சாக வெளிவிட, ‘யார் மச்சான் ஃபோனில?’ கேட்டுக்கொண்டே வந்தான் சந்தோஷ்.
இலண்டன் மாநகரத்தின் வானத்தை மாலைச்சூரியன் செம்மையாக்கிக்கொண்டிருந்தது. அப்போதே ஆரம்பித்துவிட்ட பனியின் துகள்கள் மெதுவாக வீசிய காற்றில் ஆடியபடியே கீழிறங்கிக்கொண்டிருக்க, யன்னலினூடான சூரியக்கதிர்களைத் தன்மேல் படரவிட்டபடி இதையெல்லாம் ரசிக்கமுடியாதவளாய் வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள் வைஷாலி. சந்தோஷிற்கு அழைப்பெடுத்த அக்கா ஒரு வார்த்தைகூடப் பேசாமல் லைனைக் கட் செய்ததும், சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் அறைக்குள் சென்று அடைத்துக்கொண்டதும், வேகமாக வீட்டைவிட்டு வெளியே போனதும் அவள் மனதில் குழப்பத்தையும் பயத்தையும் உண்டாக்கிவிட்டிருந்தது. தான் ஒத்திகை பார்த்து அரங்கேற்றிய நாடகம் தன் கண்ணெதிரிலேயே திசைமாறிப்போனதை மீண்டுமொருமுறை அசைபோடத்தோடங்கினாள் அவள்.
அவளுக்கும், அக்காவிற்குமான நேற்றய அந்த உரையாடல் மிக நீண்டதாக இருந்தது. முற்றிலும் புதிய ஒரு மனிதருடன் பேசுவதுபோல உணர்ந்தாள். எதைப் பேசுகிறேன் என்று அவளுக்கே தெரியாத அளவிற்குப் பேசினாள். சமயங்களைப்பற்றிப் பேசினாள். சாதியைப்பற்றிப் பேசினாள். யாழ்ப்பாணத்து அயலவர்கள் பற்றிப் பேசினாள். சந்தோஷைப்பற்றிப் பேசினாள். இறுதியாக அவனுடனான காதலைப்பற்றிப் பேசினாள். அவளது காதல் புரிந்துகொள்ளப்பட்டபோது சந்தோஷப்பட்டாள். அந்தக் கணம் முதல் அக்கா சந்தோஷிற்கு அழைப்பெடுத்த கணம்வரை எல்லாம் அவள் விரும்பியபடியேதான் நடந்திருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள். அதிகம் வார்த்தைகள் இல்லாத அந்த ஒற்றை நிமிடநேர தொலைபேசி உரையாடல் அவ்வளவு கனமானதா என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவள் தோள் தொட்டுத் திருப்பப்பட்டாள்.
பரீட்சைப் பெறுபேற்றை எதிர்பார்க்கும் மாணவனின் ஆர்வத்தோடு, கண்ணில் நிராகரிப்பின் வலியோடு, ஒரு நிராயுதபாணியாய், கருணையற்ற உலகத்தின்முன்னால் வைக்கப்படும் கடைசிப்பிரார்த்தனையாக அவள் நிமிர்ந்து பார்க்க, அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அக்கா.
சில நாட்களுக்குப்பிறகு…
அரைமணிநேரத் தாமதத்துடன் கட்டுநாயக்க விமானநிலைத்தில் வந்திறங்கிய ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் விமானத்திலிருந்து காதலையும், கடைமையையும் எதிர்நோக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தாள் லாவண்யா.
- பதிவர் கன்கோனினால் தொடரப்படும்.
கொழும்பிலிருந்து விலகும் அந்த நெடுச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்துக்கும் சற்று அதிகமாகச் சீறிக்கொண்டிருந்த அந்தக் காரைச் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பெண் என்றால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். காருக்குள் ராபின் திக்கிலின் செக்ஸ் தெராஃபி கரைந்துகொண்டிருக்க, நெற்றிக்கு மேலாக கண்ணாடியைக் கவிழ்த்துவிட்டபடி காரை ஓட்டிக்கொண்டிருந்த சந்தியாவின் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம்போட்டுக்கொண்டிருக்க, பற்களுக்குள் பபிள்கம் ஒன்று நசுங்கிக்கொண்டிருந்தது. அவளைப்பற்றி அதிகம் வர்ணிக்கத் தேவையில்லை. இலட்சங்களில் சம்பாதித்துக்கொண்டு தனது இருபதுகளையே இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் பொதுவாக என்ன விடயங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்களோ, அவை எல்லாமே இருந்தது அவளிடம்.
இவை எல்லாம் நடந்துகொண்டிருந்த கணத்தில் நான் ஒரு அரைச்சொகுசுப் பேருந்தில் அவள் செல்லும் அதே பாதையில் சென்றுகொண்டிருந்தேன். கையில் சுஜாதாவிக் கடவுள்
“தற்போது எக்ஸ்டென்டட் சூப்பர் கிராவிட்டி என்று ஒன்று கொண்டுவந்திருக்கிறார்கள். அதை விளக்க ‘கிராவிட்டான்’, ‘க்ளுவான்’ போன்ற கற்பனைத் துகள்களை… “
என்று ஏதோ தெளிவாக்க முயன்று, தெளிவாகக் குழப்பிக்கொண்டிருக்க பக்கத்து சீட்டில் இருந்தவர் ஆரம்பித்தார்.
‘தம்பி’ நிமிர்ந்து பார்த்தேன்.
‘நேரம் என்ன?’ சொன்னேன்.
‘நிறைய வாசிப்பீங்களோ?, எத்தினையாம் நம்பர்?’
‘2’
‘ரண்டாம் நம்பர்க் காரர்தான் இப்படி ஏதாவது தேடிக்கொண்டே இருப்பாங்கள். என்ன சந்தேகப்புத்தி கொஞ்சம் கூட. ஏழாம் நம்பர்ப் பெட்டையாப் பாத்துக் கட்டுங்கோ தம்பி, அப்பதான் சந்தோஷமா இருக்கலாம்’
ஒரு புன்னகையை அவருக்குப் பதிலாகக் கொடுத்துவிட்டு, ஜன்னலுக்கால் பார்வையைத் திருப்பியபோதுதான் அவளை எனது பஸ்சிற்குப் பக்கத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தபோது முதன்முதலில் தரிசித்தேன். பஸ்சிலிருந்தான பார்வைக்கோணம் காருக்குளிருந்த அவளைத் தெளிவாகக் காண்பிக்க, அடிவயிற்றில் பட்டாம்பூச்சி, தலைக்குமேல் பல்ப் என்று அத்தனை சகுனங்களும் சரியாக இருக்க இவள்தான் அந்த ஏழாம் நம்பராக இருக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டிக்கொண்டபோது, பச்சை எரிந்து வாகனங்கள் வெவ்வேறு வேகங்களில் விரையத்தொடங்கியிருந்தன.
ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு பஸ் பயண விதிகளின்படி இறங்குவதற்கு சிறிது நேரமே இருக்கையில் சரியாக எழுந்திருந்தேன். வெளியில் மழை பெய்துகொண்டிருக்க பஸ் ஹப்புத்தளையை அண்மித்துக்கொண்டிருந்த இருள் கவ்வத்தொடங்கியிருந்த மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று பஸ்சின் முன்னால் பெரிய சத்தமொன்று கேட்க, டிரைவர் பஸ்சை வலப்பக்கமாகத் திருப்பி, அவசரமாக பிரேக் போட்டு, மலைச்சுவற்றோடு உராய்ந்தபடி நிறுத்த கண்ணாடி உடைந்து சிதறியதில் எனக்குமேலும் துகள்கள் கொட்ட, பின்னாலிருந்த பெண் வீலிட்டாள்.
இறங்கிச்சென்று பார்த்தபோது பஸ்சுடன் முட்டியும் முட்டாமலுமாக மேலிருந்து உருண்டு விழுந்த ஒரு பெரிய பாறாங்கல் சமத்தாக வீற்றிருந்தது. அந்தப் பாதையில் மேலும் பல இடங்களில் மண்சரிவு என்பதை சற்று நேரங்களுக்கெல்லாம் வந்த தொலைபேசிக் குறுஞ்செய்தி உறுதிசெய்ய, சிறுவயதிலிருந்தே நன்று பழகியிருந்த இறப்பர்த்தோட்டங்களுக்குள்ளாக இறங்கி வீதியை ஒட்டியபடி வீட்டை நோக்கி நனைந்தவாறே நடக்க ஆரம்பித்த சிறிது தூரத்தில் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்
‘எக்ஸியூஸ்மி’ என்றது.
‘யெஸ்’ என்றவாறே திரும்பினேன். சிறிது தூரத்தில் அவள், அதே அவள் முழுவதுமாக நனைந்தபடி ஒடிவந்துகொண்டிருக்க, ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவள் அங்கங்களின் எளிமையிசை இயக்கத்தால் மனது பிரௌணியின் இயக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்க, தற்செயலாகத் திறந்துவிட்ட ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில் சிலையாகி, கனவா நனவா எனச் சுயசோதனை செய்துகொண்டு, சிலமுறை எச்சில் விழுங்கி, எனக்கே எனக்காக ஒருமுறை மூச்சுவிட முயன்று தோற்றுக்கொண்டிருக்க அருகில் வந்து
“லேண்ட் ஸ்லாப்பில் கார் மாட்டிட்டுது. நாளைக்குத்தான் எடுக்கலாம். இரவு தங்கறதுக்கு நல்ல ஹோட்டல் பக்கத்தில எங்கயாவது இருக்குமா?’ என்றாள்.
அவளைக்கூட்டிக்கொண்டு தங்குமிடம் தேடித்திரிந்ததில் நன்றாகக் கழைத்துவிட்டிருக்க, குளிர் வேறு உடம்பைக் குத்திக்கொண்டிருந்தது. அருகிலிருந்த ஹோட்டல்கள் எல்லாம் மண்சரிவின் புண்ணியத்தில் நிறைந்து வருமானம் பார்த்துக்கொண்டிருக்க, எஞ்சியிருந்த இரண்டாம்தர ஹோட்டல்களில் ஒரு பெண்ணாக அவள் தனியே தங்குவது சாத்தியப்படாது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
‘தெரிஞ்சவங்க வீடு ஏதாவது இருந்தாலும் பரவாயில்லை. அங்க தங்கிக்கலாம். அவங்களுக்கு நான் பே பண்ணிடறேன்’ என்று அவளே ஆரம்பித்தாள்.
‘உங்களுக்குப் பிரச்சினை இல்லேன்னா எங்க வீட்டுக்கும் வரலாம். அம்மாவும், தங்கச்சியும் இருக்கிறாங்கள்’ என்றதற்கு அவள் தலையை ஆட்டியபோது மனம் துள்ளிக்குதிக்க, ஏதோ ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பெண் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைத்தாள்.
வீட்டாரின் சந்தேகப்பார்வையைத் தீர்த்து, சம்பிரதாயபூர்வ அறிமுகங்கள் முடிந்த சிறிது நேரத்திலேயே தங்கையுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். அவள் பாடத்திலிருந்த ஏதோ ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைத்தாள். அம்மாவின் சாம்பாரை ர(ரு)சித்தாள். எமிலி டிக்கின்ஸன் கவிதைகளோடு வைரமுத்து கவிதைகளையும் ரசிப்பதாகச் சொன்னாள். தமிழில் பிடித்த எழுத்தாளர் சுஜாதா என்றும், தமிழில் அவரைத்தாண்டி அதிகம் வாசிப்பதில்லை என்றாள். மறுநாள் விதியில் கற்கள் ஒதுக்கப்பட்டு காரை வீட்டுக்கு எடுத்துவந்தபோது பலமுறை நன்றிசொன்னாள். தொலைபேசி இலக்கத்தைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றபோது மனதில் தைரியத்தை வரவளைத்துக்கொண்டு அவளது பிறந்ததினத்தைக் கேட்டுக்கொண்டேன்
ஏப்ரல் 7, 198*.
- தொடரலாம்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயம்
யாழ் கோட்டை, மற்றும் அங்கிருந்து சில …
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
கப்பலில் செல்லும்போது கரையை முதலில் அறிவிக்கும் காங்கேசன்துறை சீமெந்து ஆலை மற்றும் கீரிமலை தேவாலயம்
செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் பாலம்
தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy