Sunday, May 16, 2010

ம்……

17 comments

DSC_0360

ஞாபகங்கள்

 

ஞாபகங்களில் மட்டும் – இன்னும்

மாறாமல் இருக்கிறது…

வரலாறும், புவியியலும்!

 

வேறுபாடு

 

ஊர் பெயர் கேட்டுவிட்டு

உயர்த்தும் உன் புருவங்களால்

புரிந்துகொள்கிறேன் நண்பா – உன்னிலிருந்து

எனக்குள்ள வேறுபாடு..!

 

முற்றுப்புள்ளி

 

அந்தக்கால உதாரணங்களுடன்

அமரிக்காவையும் சேர்த்துவிட்டு

முற்றுப்புள்ளியிடுகிறேன்.

விதிவிலக்காகிவிட

நீ ஒன்றும் இயேசுவல்லன்..!

புத்தனுமல்லன்..!!

 

இன்று… இப்படி…

 

நாடு கடந்து வந்த காசில்

நான்கு அறை வீடு

இளைப்பாறக் கொடுப்பதற்காய்

இப்போதுதான் பொருத்தப்பட்ட ஏ.சி

முற்றத்தில் காவிவந்த பேருந்து

இருபுறமும் பூந்தோட்டம்

பக்கத்துவீட்டுப் பார்வை தவிர்க்க

ஆளுயர மதில்

அழகிய படலை

அதற்கும் வெளியில் – ஒரு

பற்றைக்காணி

Monday, May 3, 2010

சுஜாதா !!!

17 comments

 

writer_sujatha_bday

 

சுஜாதா – அறிமுகமே தேவையில்லாத ஒரு ஆளுமை. அவரின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் சரி, இன்றய பதிவர்களும் சரி, அவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவிற்கு தனது மேலோட்டமான எழுத்துக்களால் வாசகர்களை ஆழமாகப் பாதித்தவர் சுஜாதா.

சுஜாதாவின் எழுத்துக்களில் தேவையற்ற விபரிப்புகள் இருக்காது. ஒரு நகைச்சுவை இருக்கும். விபரிக்கும் சூழலை உள்வாங்கி, அதற்கேயுரிய மொழிநடையில் ஆழமான கருத்துக்களையும் மிக இலகுவாகச் சொல்லிச்செல்வதில் அவருக்கு நிகர் அவரேதான். இலகுவான இந்த நடைதான் அவரை தமிழில் அதிகம் படிக்கப்படும் எழுத்தாளராக மாற்றியது மட்டுமல்ல, அவரது படைப்புக்களை ஒருதடவை படிப்பவர்கள் மேலும் தேடித்தேடிப் படிக்கவும் வைத்தது.

சுஜாதா ஒரு எழுத்தாளர் மாத்திரமல்ல, பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். அவரது காலம்வரை இருந்துவந்த எழுத்துநடையை இலகுவாக்கி, எழுத்துகளில் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை அதிகமாக இடம்பெறச்செய்த அவரது முயற்சிதான், அவரை வாசிப்பவர்களிடமும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்றய தமிழ்ப் பதிவுலகமும், அதன் அதிகப்படியான பரம்பலும் சுஜாதாவின் இந்த மாற்றத்தின் விளைவுதான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சுஜாதா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா என்ற எண்ணமும் கூட வருகிறது அவர் 60, 70 களில் எழுதிய கணையாளியின் கடைசிப்பக்கங்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் சினிமா பற்றிய எதிர்வுகூறல்களும் சரி, பல இடங்களில் குறிப்பிட்ட அறிவியல், தொழில்நுட்ப எதிர்வுகூறல்களும்சரி பல இன்று உண்மைகளாகியிருக்கின்றதை, உண்மைகளாகிவருவதைப் பார்க்கின்றபோது.

சிறுகதைஉலகில் இவரது பணி அளப்பரியது. கணேஷ், வசந்த் என்ற இரு கதாபாத்திரங்களை உருவாக்கி, வாசகர்கள் மனதில் உண்மையான கதாபாத்திரங்களாகவே நடமாடவைத்தவர். ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மூலம், நான் முன்பின் பார்த்திராத ஒரு ஊரையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர். கதைமாந்தர்களின் இலகுவான உரையாடல்மூலம் கதையை நகர்த்திச்செல்லும் இவரது பாணி, வாசகர்களை இலகுவில் கதையோடு ஒன்றச்செய்துவிடும்.

சினிமாவான இவரது படைப்புகள், வாசிப்பில் ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் ஏற்படுத்தத் தவறியிருந்தாலும்கூட, இவர் வசனமெழுதி வெளிவந்த படங்களின்மூலம் சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

பல்வேறு காரணங்களுக்காக சிலர் இவரது படைப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், இவர்வசமுள்ள பெரிய வாசகர் கூட்டமும், அவர்களில் இவர் ஏற்படுத்திய தாக்கமும் தமிழ் எழுத்துலகில் இருந்துகொண்டுதான் இருக்கும்.

பி.கு – மறைந்தும் மறையாமல் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்கு இன்று (03/05/2010) 75 ஆவது பிறந்தநாள்.

Saturday, May 1, 2010

சுறா – சூப்பர்ப் படம்பா

33 comments

 

711_20100305_53449400_sura-poster-2

 

இளைய தளபதி விஜய் நடித்து, உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுறா திரைப்படத்தை ஓசி டிக்கெட்டில் பார்க்கும் ஒப்பற்ற வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பக் காட்சி முதலே இளைய தளபதி விஜயின் ஆர்ப்பாட்டம்தான். அறிமுகக் காட்சி இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாதது. அதில் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியவாறே இளைய தளபதி விஜய் டைவ் அடித்து வரும் காட்சியைப்பார்த்த நீச்சல் உலக சாதனையாளர் மைக்கல் பிலிப்ஸ், இளைய தளபதி விஜயைத் தொடர்புகொண்டு அவ்வகை நீச்சலின் நுட்பங்களைத் தெரிந்துகொண்டதிலிருந்தே அதன் கனதியை அறியமுடியும்.

படத்தில் இளைய தளபதி விஜய் பிறந்து, வளர்ந்து, போராடிக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் கிராமத்தின் பெயர் யாழ்நகர். இப்படியான ஒரு காவியத்தில் இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு அருமையாகக் கையாண்டிருப்பது படத்தின் சிறப்புக்கு ஒரு சோறு பதம். யாழ்நகர் குப்பத்தின் குடிசைகள் எல்லாம் வெயில், மழை தாங்கும் கல் வீடுகளாக மாற்றி விட்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் வாழும் இளைய தளபதி விஜய் இனி அந்தக் குப்பத்துக்கு மட்டுமல்ல, இலங்கை இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்குமே தெய்வம் போலத்தான்.

 vijaynewatmstillsn08-8x6

படத்தின் நாயகி தமன்னா. பாசத்துடன் வளர்த்த நாய் காணாமல் போனதற்காகவே தற்கொலை பண்ண முயற்சிப்பதும், பின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் சொல்லாமலேயே, அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என்ற பயத்தில் தற்கொலை செய்ய முயற்சிப்பதும் அவரது இளகிய உள்ளத்தினை எடுத்துக்காட்டும் காட்சிகள். இரண்டாம் முறை தற்கொலைக்கு முயற்சிப்பவரை விஜய காப்பாற்றியபின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் கூறுகிறார். அப்போது தியேட்டரில் இருந்து இதற்கு தற்கொலையே மேல் என்று யாரோ ஒருவர் கத்தியது சத்தியமாக ரசிக்க முடியாத ஒன்று. இளைய தளபதி விஜயும் தமன்னாவை ஏற்றுக்கொண்டபிறகு வரும் டூயட் பாடல் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவாறு புதுமையாக, காதலைப் பறைசாற்றும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

காமெடிதான் படத்துக்கே பெரும் ப்ளஸ். ஒரே காட்சியில் வந்துவிட்டுப் போகும் கவுண்டமணி, செந்தில் ஜோடி, படம் முழுவதும் நினைத்து நினைத்துச் சிரிக்குமளவிற்கு காமெடி பண்ணிவிட்டுப் போகிறார்கள். அதற்குமுன் வடிவேலு அடிவாங்கும் காமெடிகளை ரசிக்க முடியவில்லை.

பின்னணி இசை படத்துக்குப் பெரும் பக்கபலம். படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் பின்னணி இசையை நிறுத்தி, வசனங்களை செவிமடுக்கவிட்டிருப்பது புதுவகை யுக்தி. ஆனாலும் படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் பஞ்ச் டயலாக்கே பேசிக்கொண்டிருப்பதால் பின்னணி இசை இருக்கும் நிமிடங்கள் மிகக் குறைவாகவே இருப்பது வருத்தம்தான்.

வடிவேலு, இளைய தளபதி விஜய் பேசிக்கொள்ளும் காட்சியினூடு றீமேக் படங்களை கலாய்ப்பது, தொடர்ந்து றீமேக் படங்களையே நம்பிக்கொண்டிருப்போர்க்கு செருப்படி. அத்துடன் படத்தின் பெரும்பாலான பாடல்க்காட்சிகளில் கால்சட்டையுடனேயே வந்துபோகும் தமன்னாவை, தஞ்சாவூரு ஜில்லாக்காரி பாடலில் தமன்னாவின் கால்சட்டையை மட்டும் ஆடவிட்டு விஜய் கலாய்ப்பதும் அழகு. இப்படியான காட்சிகள், தமிழ்ப்படம் போன்ற இன்னுமொரு ஸ்கூப் படம்தான் சுறாவோ போன்ற எண்ணப்ப்பாட்டை ரசிகர்கள்மத்தியில் அவ்வப்போது விதைக்கின்றன.

CS_83_29

குப்பத்துத் திருவிழாவில் இளைய தளபதி விஜயை வெள்ளைக்காரிகளுடன் ஆடவிட்டு, கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தான் எவ்வகையிலும் சளைத்தவர் இல்லை என்று காட்டியிருக்கும் இயக்குனர் எஸ்.பி.இராஜக்குமார் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமைகளுப் புகுத்தி, எதிர்பார்ப்புகளை எகிறவைக்கிறார். கஷ்டம் அதிகாரியாக விஜய் வரும் காட்சியில், அவரை யாராலும் அடையாளமே காணமுடியாதவாறு செய்திருப்பதும், வெறும் பட்டாசுகளைக்கொண்டே, றாக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு தாக்குவதுபோல வில்லன் கூட்டத்தை நம்பவைப்பதும், பராசக்தி படத்தில் இருந்ததற்கு நிகராக நீதிமன்றில்  இளைய தளபதி விஜய் பேசும் வசனங்களும் இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.

மொத்தத்தில் சுறா – சூப்பர்ப் படம்பா

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy