Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Wednesday, February 1, 2012

வேண்டாம்.. விலகிவிடு!

14 comments


காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது

வேண்டாம் விலகிவிடு



வேண்டாம்.. விலகிவிடு!
மரணத்தின் வலிகூட 
மரத்துப்போன பிறகும் - உன்
வார்த்தைகள் வலிக்கிறது..!


வேண்டாம்.. விலகிவிடு!


காலங்கள் கடந்து 
காப்பியமாய்க் கிடக்க - காதல்
முடிந்ததென்று நீயோ
முற்றுப்புள்ளி இடுகிறாயே..!


வேண்டாம்.. விலகிவிடு!


கற்கள் கேட்கிறாயே நீ - இந்தக்
காதல் கொண்ட கடைக் கவியிடம்
சொற்கள் மட்டும்தானே
சொந்தமாய் இருக்கின்றன!


வேண்டாம்.. விலகிவிடு!


யதார்த்தம் பேசுகிறாய் நீ - அது 
முடியாதவர்களின் 
முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் - இன்னும்
எஞ்சியிருக்கும் வெப்பம்
அது போதும் எனக்கு!


வேண்டாம்.. விலகிவிடு!


என்
கவிதைகள் கசக்கிறதா உனக்கு? - சொல்
மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்
என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? - சொல்
போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்
மரணம் கேட்கிறாயே நீ - மறந்தாயா
நம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!


வேண்டாம்.. விலகிவிடு!


நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்


வேண்டாம்.. விலகிவிடு!

Tuesday, December 27, 2011

கால இயந்திரம்

10 comments





சட்டென்று தனிமை
ஆட்கொள்ளும் நேரங்களில்தான்
தேவையற்ற நினைவுகளும்
செருகேடுகளின் ஞாபகமும்..


புரட்டத் தொடங்கிய 
செருகேட்டும் பக்கங்களின்
இடுக்குகளில் உருண்டோடுகிறது
கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட 
கால இயந்திரம்


காலம் கடந்து 
கவனிக்கையில் மட்டும் - ஏனோ
கடதாசித் தடிப்பையும் விடக் 
கனத்துக் கிடக்கின்றன
புகைப்படங்கள்..!


நினைவுகளின் கனத்தைத் 
தாங்க முடியாமல் - அதை
முன்னோக்கிச் செலுத்தும் 
முழு முயற்சியில் தோற்றுக்கொண்டே
குதிக்கால் ஊன்றி பெருவிரல் வரைந்த
குட்டி வட்டத்துக்குள் 
சுற்றத் தொடங்குகிறேன்..


இறந்துபோன நிகழ்காலத்து
இடுக்குகளில் எழுந்துவந்தாள்
பிரிந்துபோன பழைய நண்பி


எப்போதோ பார்த்த நான்
எனக்கே சிரிப்பூட்டினான்


எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது


'அ' போட்டு வரைந்த மயில்
'ல' போட்டு வாங்கிய அடி
பாசி படிந்துபோன
கோயிலடிக் குழாய்க்கிணறு
அதிகம் சுவைத்த 
மாற்றான் தோட்டத்து மாங்காய்


பல நேரங்களில் 
விடைபெறல் என்பது 
வெறும் கையசைப்பு மட்டுமல்ல..!


கடைசிப் பக்கம் கடந்து
கண்கள் நிறைந்து
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளியைப்
புறந்தள்ளி நிமிர்கிறேன்


இன்னும்
தூசி ஏறிப்போன பரனில்
மூலை மடங்கி, முன் அட்டை கிழிந்து
பழுப்பேறிப்போன பழைய புத்தகத்துள் 
குட்டிபோட்டுக் கிடக்கின்றன
மயிலிறகுகள்..!


Friday, July 22, 2011

ஜயமுண்டு பயமில்லை மனமே!

9 comments

யாழ்ப்பாணம் புற்றளை பிள்ளையார் ஆலயத்தில் லோஷன் அண்ணாவின் தலைமையில் இடம்பெற்ற மறுபடியும் பாரதி என்ற பொதுத்தலைப்பிலான கவியரங்கத்தில் ஜயமுண்டு பயமில்லை மனமே  என்ற தலைப்பின்கீழ் நான் படித்த கவிதை இது.
 
இக் கவியரங்கக் கவிதைகள் அனைத்துமே எம்மால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் அறிமுகத்திலிருந்து தொடங்கிப் படிப்பது கவியரங்கத்தை முழுமையாக வாசித்த உணர்வைத் தரும் என்பதால் இங்கே இருந்து படிக்க ஆரம்பிப்பது நலம்.
 
கீழே சிகப்பு எழுத்தில் இடப்பட்டுள்ள பகுதி வணக்கங்களும், சின்னச் செல்லக் கடிகளும்தான் என்பதால் பிரதான கவிதையை மட்டுமே படிப்பேன் என அடம்பிடிப்போர் சிகப்பு நிறப் பகுதியை ஒரே தாவாகத் தாவிக் கீழே சென்று படிக்கவும்.
DSCN1190

கவிதையினை ஒலிவடிவில் கேட்க…
ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலே
விடுதலை உண்டு நிலை உண்டு,
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற
குலசக்தி சரணுண்டு பயமில்லை

சக்தி பெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
புற்றளை விநாயகனே
எங்கள் விழா நாயகனே
யானை முகத்தவனே
சாற்றுகிறேன் முதல் வணக்கம்.
நற்றமிழ் தந்து நாவில் விளையாடும்
கலை வாணிக்கோர் கவி வணக்கம்.
தங்க மொழி தந்த தமிழ்த்தாய்க்குத் தமிழ் வணக்கம்
பாட்டுடைத் தலைவனாம் பாரதிக்கோர் பெருவணக்கம்

அண்ணன் – பெரியண்ணன்
பேச்சிலே இவன் ஒரு விண்ணன்
விளையாட்டிலோ இவன் இன்னுமொரு கண்ணன்
அறிமுகமே தேவையில்லா மன்னன்.
இவன் வைத்திருப்பதோ ஒரு வலைப்பூ
இவன் குரல் கேட்டால் ஒருவித மலைப்பு
இவன் பெயரால் இங்கே பலருக்கும் பிழைப்பு
இவனால்தான் எனக்கும் இங்கே அழைப்பு
இவன் ஒலியுலக சிற்பி
செல்லமாய் விக்கி
கவியரங்கத்திலோ இன்று இவன் எம் மத்தி.
அரங்கத் தலைவர் லோஷனுக்கு ஓர் தனி வணக்கம்

கூடிக் கவி பாடக்
கூடவே வந்திருக்கும்
ஒரு கூட்டுப் பறவைகள்
ஒருவர் - என்
கட்டைவிரல் கேட்காத கவியுலக துரோணர்
கணினி உலகின் கலங்கரை விளக்கம்
சிரிப்பிலோ சினேகா - சீற்றத்தில் சிங்கம்
சிறீ அண்ணா எங்கள் கருப்பு நிறத் தங்கம்.

அடுத்து அண்ணன் மாலவன்.
எங்கள் காவலன்
கூட்டத்தின் குலவிளக்கு.
பக்கத்தில் பார்த்தாலோ ஒரு புகை கக்கும் எரிமலை
பழகிப் பாருங்கள் அண்ணன் ஒரு பனி மலை

இறுதியாய் என் இளவல் பவன்.
எங்கள் செல்லக் குஞ்சு.
இவன் மனமோ வெள்ளைப் பஞ்சு
பதிவுலகில் பப்புமுத்து
கவியுலகிலோ இவன் ஒரு குட்டி வைரமுத்து
மூவருக்கும் மொத்தமாய்
முத்தாக ஒரு வணக்கம்.
இனி அவை வணக்கம்

கணினி மொழி பயிலும் காலத்தில் கூடக்
கவி மொழி கேட்கக் காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
இது – என்
கன்னி மொழி விதைக்கத் தரப்பட்ட பெருந்தோட்டம்.
கன்னி மொழி –எதனுடனும்
கலக்காத ஒரு மொழி
தனியாக வேரூன்றித் தருவாகத் தழைத்திட்ட
என் தாய் – தமிழ் மொழி
அதைச் சரியாகப் பேசிச்
சரியாமல் காக்கின்ற – ஊரே… உறவுகளே…
உங்களுக்கோர் பெருவணக்கம்.

கவிதை தொழிலல்ல எனக்கு
தொழில் முடிந்துத் தேகம் ஆற்றும் தேசம் அது
அறியும் ஆறாம் புலன் அது
ஆற்றாமையில் எந்தன் புலம்பல் அது
ஆங்காங்கே வந்தாலும் - எம்
வாய்ப்பிழை பொறுத்தருள்வீர்
ஜயமுண்டு பயமில்லை மனமே

நேற்று இரவு – எனக்கோர் கனவு
பகல் கனவில்லை.
பாதியிலேயே கலைந்து எழுந்துவிடவுமில்லை.
கனவிலே வந்தான் – ஒரு
கறுப்புச்சட்டைக்காரன்.
‘யாரப்பா நீ?’
நான்தான் பாரதி என்றான்.
‘மறுபடியும் பாரதியா?’
இதற்குமுன் எங்கேயப்பா என்னை நீ பார்த்தாய் என்றான்.
அதுதான் யாழ் வரும் வழியில்
பொட்டல் காட்டில் – நெற்றிப்
பொட்டுடன் வரவேற்றாயே என்றேன்.
அது வெறும் தட்டியடா என்று
தடதடத்துச் சிரித்தான்.
தலைப்பாகை இல்லையே என்றேன்
(என்) தலையே போனபிறகு தலைப்பாகை ஒரு கேடா என்றான்
எனக்கிது போதாதா என்று வடத்து மீசை முறுக்கிக்கொண்டான்.
இறந்தவர்கள் கனவிலே பேசாரே என்றதற்கு
இறக்கவில்லையடா. உன்னில் – அவனில்
உயிர் வாழ்கிறேன் என்றான்.
உயிர் போகும் அவசரம் என்றாயே? என்றேன்
அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.
நான் கனாக்கண்ட உலகம் காண உன் கனவுக்குள் வந்தேன் என்றான்.
நகர்வலம் செல்வோம் வா! என்றான்
நகர்வலம் எதற்கு? உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் காட்டுகிறேன் என்றேன்

மடிக்கணினி பயின்றான்.
கணையப் பசி மறந்து இணையம் நாடினான்
கூகில் கண்டு குறிச்சொல் தேடினான்.
முதலில் பாரதி – பாரதி பார்த்தான்
கறுப்பு மீசையின்கீழ் வெழுப்பாய்ப் புன்னகைத்தான்.
புதுமைப் பெண் தேடினான்
அங்கேயும் நான்தானா என்றான்
கொஞ்சம் இரு … என்று ஆங்கிலம் காட்டினேன்.
ஐயகோ என்றான். ஆங்கிலம் வேண்டாம், அழகு தமிழே போதுமென்றான்.
அதையும் காட்டினேன்.
வேண்டாம், நிறுத்து என்றான்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருக்கிறதே என்றேன்.

அது – இதுவல்ல என்றான்.

காணி நிலம் உண்டோ என்றான்.
காலி இடம் இல்லை என்றேன்.
கடலுக்குள் கட்டிக்கொண்ட
களனி நிலம் காட்டினேன். விந்தை என்றான்.
நீண்டு கிடக்கும் நெடும்பாலம் கண்டு வியந்தான்.
அடுக்கு மாடி பார்த்து அதிசயித்தான்.
விலை கேட்டான். விறைத்தான்.
மோவாய் சொறிந்து முகடுபார்த்தான்.
என்ன இது கூடாரம்? உன்வீடு எங்கே என்றான்.
உன் பாரத தேசத்தால் வீடு எமக்குப் பகல்கனவு என்றேன்.
ஊமைப் பெருமூச்சை எறிந்தான்.
சலிப்பா என்றேன்.
இல்லை, அது என் சாபமென்றான்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம். - என்ற
ஒற்றைக் கனவாவது ஒழுங்காய் பலித்ததே என்றான்.
எப்படியப்பா?
அதுதான் கடலுக்குள் களனி செய்து காப்பாற்றுகிறீர்களே என்றான்.
மெல்லச் சிரித்தேன்.
சோமாலியா எதற்கு என்று
சொந்த நாடே சுட்டினேன்.
உன் நாட்டின் நிலைமையோ
இதைவிட மோசமென்றேன்.
உளைப்பு இல்லையோ?
செக்கு மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்
நெஞ்சம் குமுறுகிறார்
ஏன் என்றான் கவிஞன்
எதுவும் மாறவில்லை
என்றேன் நான்.

பொன்மொழிகள் பொய்க்காது – ஆகவே இந்தக்
கவிஞன் வாக்கும் பொய்க்காது தம்பி - பொய்ச்
சாதியேனும் போனதுவோ என்றான்
சோலி எதற்கென்று ஞாயிறு இதழில்
நான்கு பக்கம் சுட்டினேன்.
மணமகன் தேவை
மணமகள் தேவை
மாமியார் தேவை
தேவைகளின் தொடர்ச்சியாய்
சிவத்து உயர்ந்த சிங்கை மாப்பிளைக்கு
சீதணத்தோடு சேர்த்து
சாதியும் தேவைப்பட்டது.
துடித்தான் மஹாகவி.

போகுமுன்பு ஒன்று என்று
செல்லம்மாவின் சோறு போட்ட சிட்டுக்குருவி கேட்டான்.
இரசாயணத்தால் அழிந்துவரும் இன்னல் விளக்கினேன்.
போங்கடா என்று பொங்கினான்.
அன்றே சொன்னேன்
காலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை என்றான்.

விரக்திச் சிரிப்பிற்கு விளக்கம் கேட்டான்.
இன்னும் இன்னல் உள்ளதுவோ என்றான்.
நீதான் கவிஞனாயிற்றே - எங்கள்
கசியும் மௌனங்களில் இருந்தே
கண்டுபிடித்துக் கொள்ளேன் என்றேன்.
நான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.
பொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.

ஒன்று மனதிற்கொள்.
வாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்
தாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.
ஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்
ஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்
காரிருளின் கர்வத்தை மின்னல்களும் போக்கலாம்
அடித்த காற்றில் முகில் விலகி நட்சத்திரமும் தோன்றலாம்.
ஜயமுண்டு பயமில்லை மனமே

சும்மா இருக்காதே
பஞ்ச பூதங்களின் பழக்கம் தேடு
வேரில் வார்க்கப்பட்ட அமிலம் கிடக்கட்டும்
காற்றில் கரைந்திருக்கும் ஒட்சிசன் தேடு
காற்றைப் பிடிக்கக் கறுவி நின்றாலும்
தழுவிச்செல்லும் பழக்கம் நாடு
ஒப்பாரியிலும் ஒழிந்திருக்கும்
ஓர் ராகம் தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
நீர் போல் மாறு

பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே

எதுவுமே சும்மா இல்லை இயற்கையில்.
பூமி அமைதிதான் – ஆனால் அது
சும்மா சிரித்தாலே சுனாமி வருகிறது
இயற்கை பழகு
மேடு கிடக்கட்டும் – முதலில்
பள்ளத்தைப் பதம் செய்
கற்கள் கிடக்கட்டும் – முதலில்
கனிம மண்ணில் வேர் விடு
மலையின் மௌனத்தையும்
அருவி கொண்டு போக்கு
புல்லின் நுனியிலும்
புதுக் கவிதை தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே

ஒற்றைச் சொடுக்கில் உலகம்
ஓடிக்கொண்டே இருக்கும் நகரம்
கடல் தூர்த்து நிலம்
காகிதமில்லா புத்தகம்
கணிப்பொறியில் கடிதப்போக்குவரத்து
நேனோ தொழில்நுட்பம் மூலம்
சிரன்ஜீவிதனம் சீக்கிரமே சாத்தியம்
என்னதான் வந்தாலும் - உலகின்
ஏதோ ஒரு மூலையில் மனிதம் ஒட்டிக் கிடக்கும்வரை
ஜயமுண்டு பயமில்லை மனமே.

எனது இந்தக் கவிதைக்கான தொகுப்பைப் படிக்கவும், கவியரங்கத்தினை லோஷன் அண்ணாவின் தளத்தில் தொடர்ந்து படிக்கவும் இங்கே சொடுக்கவும்.
 

Tuesday, January 18, 2011

சின்னதாய்ச் சில…

20 comments

 

 cry-blood-red-tears

 யுத்தம் விட்டுச்சென்ற

கந்தகக் குழிக்குள்ளும்

எட்டிப்பார்க்கிறது ஈரம்..!

 

 

 tired_beggar

 

முன்பனி இரவு

பிச்சைக்காரன் தட்டில்

ஒடுங்கி விழுகிறது

ஒற்றைத்துளி..!

 

 

2980119739_5c2d5c897a_z

 

கனவுகளற்ற உறக்கத்தின்

கடைசிக் கணத்தின்பின்...

ஐயோ கொல்லாதே..!

 

 

stock-photo-old-wooden-billboard-isolated-over-white-66932572

 

தறித்தெடுத்துச் சீவப்பட்ட

நீள்சதுர மரத்துண்டில்

'மரங்களை வெட்டாதீர்' !

 

 

 

 

 

red_balloon

 

பறித்துக்கொண்டு பறக்கிறது.

எக்கணமும் வெடிக்கலாம்

சிறுவனின் உலகம்!

 

 

 

 

400_F_13058099_OQIrIq0jf7oazuJhVK1kWmokcaA9sVD7 

அரைத்தூக்கச் சிரிப்பில்

அம்மாவுக்கும் தெரிகிறது

குழந்தையின் கனவு!

Thursday, December 16, 2010

மீண்டு'ம்...'

14 comments

96776343_4efe3075ff_b

ஆழம்

ஆழி அடி இருளில்
அமிழ்ந்திருந்து, அலைக்கழிந்து மேல்வந்து
ஆர்ப்பரிந்த மேற்பரப்பின் ஓரத்தில்
வெளிச்சத்தின் கிறக்கத்தில் - இவன்
அறிவுக்கெட்டிய ஆழத்தின் தேடுதலில்
இன்னும்
அதே இருளில்
அது...!

நம்பிக்கை

பொத்தி விரிந்த கரங்களில்
ஒட்டிக்கொண்ட மஞ்சள்பற்றி
லஜ்ஜையற்றுக் கிளம்பியது
இரசாயணத்தில் இறக்கப்போகும்
இறுதிப் பட்டாம்பூச்சி..!

அன்பு

தொடங்கலிலும், முடிவிலுமாக
கடிதங்களில் மட்டும் தொங்கியிருந்ததைக்
கலைத்தெறிந்துவிட்டது காலம்
சங்கேதச் சுருக்கங்களையும்
அடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி - இன்னும்
பாட்டியின் பார்வைக்கு மட்டும் இழைத்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு சந்திப்பிற்கிடையிலும்…!

Thursday, December 2, 2010

ம்…

15 comments

Sad

வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட
ஊமல் கொட்டைகளினதும்
மண் கட்டிகளினதும்
எறி பிடி விளையாட்டு

தண்ணீர் நிரம்பிய
சதுரக் குழிகளுக்குள்
சறுக்கி விழுந்து அடித்த நீச்சல்

எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்

கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு

பேச நாதியின்றி
எமக்குள் பேசியபடி
நானும், இன்னுமொரு பொம்மையும்

பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்

Monday, July 26, 2010

போல..!

26 comments

 

3152260172_4298af3157

தேர்தல்

விதை விதைத்த‍வன் தெரியாமல்

வேர் நீர் நனைத்த‍வன் அறியாமல்

கல் எறிபவனுக்கெல்லாம் - தன்

காய் கொடுத்துக்கொண்டிருக்கிறது

மரம் - மக்கள்

வழங்கும் வாக்குப் போல..!

 

பெரிசு

 எரிந்து முடித்த‍வனின் அஸ்தி கரைத்து,

தாகத்து விலங்கின் நா தழுவி,

ஆடை கழுவும் அழுக்கையும் இழுத்துக்கொண்டு,

வழிப்போக்க‍ன் கால்கழுவி, ஊர் வழி உப்பெடுத்து,

ஓடைக்குள் ஓர்நாள் ஒதுங்கிநின்று வந்தாலும்

பானைக்குள் போன மறுநாள்தான் - பழசு

ஆக்க‍ப்ப‍டுகிறது தண்ணீர்

பெரிசு ஆக்க‍ப்ப‍டும் தாய்போல…‌!

 

மாற்ற‍ம்

ஆதி அடி மரத்தின் அருமை அறியாது

வெட்டி ஒட்டிவிட்ட‍ வெள்ளைப் பூவையே

பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்

சிவப்புச் செவ்வ‍ரத்தை..!

.

‘போல’ என்று போடும் உவமைக்கு

கடிவாளம் இடுகிறது - என்

கனத்த மனது…!!

Saturday, July 17, 2010

ம்…

17 comments

 

single-tree

குணம்

காவலர் வரிசைக்கும்

கள்வர்கள் கயமைக்கும்

புணர்வதற்காய்ப் போட்டிக்கும் – இன்னும்

இல்லாத காரணங்களையும் இறுக்கப் பிடித்தபடி

குரைத்துக்கொண்டுதான் இருக்கின்றன‌

இரவில் தெருநாய்கள்

 

தெளிவு

 

வேகமான பயணம்.

கூடவே ஓடுகிறது நிழல்..!

சற்றே தெளிவற்றுத்தான் தெரிகிறது

நிஜம்..!

 

கணக்கு

 

கூட்டலும் பெருக்கலும்

கணினிக்கு மாறிவிட்டபிறகும்

மனதிலேயேதான் நடக்கிறது

பிரித்தலும்! கழித்தலும்!!

 

எல்லை

 

ஒருகல் தொலைவில் இருக்கிறது

இன்னுமொரு கல்..!

ஏலவே…

வகுக்கப்பட்ட எல்லையில்

இதுதான் இறுதிக்கல்..!

Sunday, May 16, 2010

ம்……

17 comments

DSC_0360

ஞாபகங்கள்

 

ஞாபகங்களில் மட்டும் – இன்னும்

மாறாமல் இருக்கிறது…

வரலாறும், புவியியலும்!

 

வேறுபாடு

 

ஊர் பெயர் கேட்டுவிட்டு

உயர்த்தும் உன் புருவங்களால்

புரிந்துகொள்கிறேன் நண்பா – உன்னிலிருந்து

எனக்குள்ள வேறுபாடு..!

 

முற்றுப்புள்ளி

 

அந்தக்கால உதாரணங்களுடன்

அமரிக்காவையும் சேர்த்துவிட்டு

முற்றுப்புள்ளியிடுகிறேன்.

விதிவிலக்காகிவிட

நீ ஒன்றும் இயேசுவல்லன்..!

புத்தனுமல்லன்..!!

 

இன்று… இப்படி…

 

நாடு கடந்து வந்த காசில்

நான்கு அறை வீடு

இளைப்பாறக் கொடுப்பதற்காய்

இப்போதுதான் பொருத்தப்பட்ட ஏ.சி

முற்றத்தில் காவிவந்த பேருந்து

இருபுறமும் பூந்தோட்டம்

பக்கத்துவீட்டுப் பார்வை தவிர்க்க

ஆளுயர மதில்

அழகிய படலை

அதற்கும் வெளியில் – ஒரு

பற்றைக்காணி

Wednesday, April 28, 2010

மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்

10 comments

24042010149-8x6 
யாழ் மருத்துவபீட மாணவன் வேல். சாரங்கன் எழுதிய ‘மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்’ கவிதைத்தொகுப்பைப்பற்றி பதிவர் பாலவாசகன் தொலைபேசியில் குறிப்பிட்டபோதும்சரி, பின்னர் நேரில் சந்திக்கும்போது படித்துப்பார்க்கும்படி அந்நூலை எனக்குக் கொடுத்தபோதும்சரி அதன்பால் எனக்குப் பெரிதாக ஈர்ப்பு இருக்கவில்லை. படிப்பதற்காக எழுமாற்றாக ஒரு பக்கத்தைத் திறந்து படிக்கத் தொடங்கியபோதுதான் முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. ஒரே மூச்சாக அத்தனை கவிதைகளையும் வாசித்துமுடித்துவிட்டுத்தான் புத்தகத்தை மூடமுடிந்தது.
 
வேல். சாரங்கன், என்னைவிட இரண்டொரு வயது அதிகமிருக்கலாம். இருவரும் பிறந்து, வளர்ந்த தூரமும் அதிகமல்ல. அதனால்தானோ என்னவோ, அவர் கவிதைகளில் வாழ்ந்திருக்கும் வாழ்க்கை என்னுடையது போன்ற உணர்வு. அவர் கவிதைகளாய் மொழிபெயர்த்திருக்கும் மௌனம், என்னுள்ளும் இருக்கும் மௌனம். நான் பேசமறந்த, அல்லது பேசப்பயந்த மௌனம். ஒவ்வொரு கவிதையும் என்னுள் ஒரு உணர்வுகளை விட்டுச்செல்கின்றன, அல்லது தட்டிச்செல்கின்றன. பல இடங்களில் தலை என்னையும் அறியாமல் ஆமோதிக்கின்றது.

மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை..?

கவிஞர்களே ..!
கடதாசிகளை கொடுங்கள்
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்
இல்லயேல்
கண்ணீரையாவது துடைக்கட்டும்..!

முகத்தில் அறைகிறதா? இதோ இன்னுமொன்று

அம்மா பொட்டிழந்து,
அக்கா கற்பிழந்து,
அண்ணா காலிழந்து,
தாய்வயிற்றில்
கருக்கொண்ட
உருவினை
வெறுப்புடன்
எதிர்பார்த்திருந்த
பொழுதுகளில்…
 
குவித்த மண்ணில்
தலைவைத்து
குறையாய் உறங்கிய
பொழுதுகளில்…

என்று ஒவ்வொரு தருணங்களையும் அடுக்கிவருபவர், இறுதியில் கேட்கிறார்

எப்படி சொல்வது இத்தனை நீளமாய் ..?
தலைநகரில்,
அடையாள அட்டையை புரட்டியபடி
ஒற்றை வார்த்தையில் கேட்கிறாய் சோதரா
பிறந்த இடம்…?

நம்மில் பலரும் உணர்ந்த வலிதான் இது. இவை மட்டுமல்ல, நம் காதலும், விளையாட்டுக்களும்கூட இறைந்துகிடக்கிறது கவிதைகளாய்.

மார்களி விடுமுறையில் பட்டம் ஏற்றிவிட்டுவருவதும், அதன்பின் தொடரும் “விடிஞ்சாப் பொழுதுபட்டாப் பட்டம்தான் இவனுக்கு. பட்டத்தை அண்ணாந்து பாத்து முகமெல்லாம் கறுத்துப்போச்சு” என்ற அம்மாவின் அதட்டலும் ஞாபகம் வருகிறது இவரது பட்டம் – விடுகதை…! என்ற கவிதையைப் படிக்கையில்

பாட்டின் அடியினிலே, ஒரு
பல்லவி சரணத்தின் முடிவினிலே
ஏற்றம் இறக்கமுடன் குரல்
கூட்டி இசை தரும் பாடகன்போல்
கூவிப் பறந்திருந்தாய் – அந்த
கூவல் எனக்கென நான் நினைத்திருந்தேன்…!

காற்றின் மிடுக்கினிலே – பல
நாள்கள் பறந்து பழகியதால்
காணும் என உணர்ந்தோ, பட்டம்
கயிற்றை அறுத்து விழுந்ததுகாண்..!!
சேற்று வயல் புறத்தே – நல்ல
நாற்று நடவந்த ஓர்மனிதன்
தோளில விழுந்தது போய்
அதைத் தூக்கி எடுத்தவன் முன் நகர்ந்தான்..!

இப்படியாக நான் அனுபவித்து உணர்ந்த பல பொழுதுகள் கவிதைகளாய்க் காணும்போது பிடித்துவிடுகிறது. முத்தாய்ப்பாக ஒரு கவிதை முழுவதுமாய்

உடைமைகளோடு…

குஞ்சுக்குடிசை…
கூரை செல்லரித்து,
நீலம் தெரியும்..;
நீர்சேரும், மாரியில்..!

பட்ட கதிகால்; சில
பழைய துருப்பேணிகள்…
ஊசித்துளைகளினால்
உருக்குலைந்த பழம்பானை…

போனமுறை ஓடித்
திரும்புகையில்,
தெருவிலெடுத்த
‘பச்சைப் பெட்டி’ நிறைய, கிளிஞ்ச
பழஞ்சேலைகள்…

வாலை ஆட்டியபடி ஒரு
குட்டி நாய்…!

பல்விழுந்த வாயின் புறுபுறுப்பு..
“நான் சேர்த்ததுகள்..,
விட்டிட்டுப் போகேலா…,
வாறது வரட்டும்”!!
 

வேல் சாரங்கனின் மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் கவிதை நூலை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

கொழும்பு-  0777537930.
யாழ்ப்பாணம் - 0779779769
கண்டி - 0779697270.

புத்தகம் கிடைக்கும் இடங்கள்
கொழும்பு -
1.Poobalasingam bk depot, 309A 2/3 Gale rd,welawta.
2. Kokilam bk shp, 4c-5 fussels lane,welawata.
3. Cordova bk shp. 226, gale rd.welawta.
யாழ்ப்பாணம்-
1.poobalasingam.
2.book lab(ramanathan rd)

Monday, September 28, 2009

பதிவு எழுதிப்பார்!

51 comments


வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை ஆளாளுக்கு மாற்றி எழுதிப் பதிவிட்டுவிட்டார்கள். நானும் எழுதாவிட்டால் என்னைப் பதிவர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயத்திலேயே இதை எழுதிவிட்டேன். வைரமுத்து மன்னிப்பாராக.










பதிவு எழுதிப்பார்!

திரட்டிகளில் உன்பெயர்
தெளிவாகத் தெரியும்.
உன்தமிழ் அழகாகும்.
உனக்கும் கோபம்வரும்.
இணையம் தெய்வமாகும்
கம்யூட்டர் கோவிலாகும்.
பதிவு எழுதிப்பார்

அதிகம் சிந்திப்பாய்
பார்ப்பதெல்லாம் குறிப்பெடுப்பாய்
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவாய்
பல்துலக்க முன்னேவந்து – உன்
பதிவுகளில் பின்னூட்டம் தேடுவாய்
பதிவு எழுதிப்பார்.

பதிவெழுத வந்துவிட்டால்
மணித்துளிகள் நிமிசமென்பாய்
பின்னூட்டம் வந்திடாத
நிமிசமும் மணிகளென்பாய்
ஒற்றை நிமிடத்தினுள்
ஒன்பதுமுறை ஓட்டுப்பார்ப்பாய்
பதிவு எழுதிப்பார்

மொக்கைப் பதிவுகளுக்கு
முக்கியத்துவம் தருவாய்
சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்
சிந்தித்தே பதிலளிப்பாய்
கும்மி அடிப்பதென்றால்
குதூகலமாய் கிளம்பிடுவாய்
கும்மி உனக்கென்றால் – கொஞ்சம்
ஒதுங்கியே பதுங்கிடுவாய்
பதிவு எழுதிப்பார்

நல்லாய் இருக்குதென்ற
டெம்ளெட் பின்னூடத்திற்கும்
நன்றிசொல்வாய்
அர்த்தமற்ற அனானிக்கும்
ஆறுதலாய்ப் பதிலுரைப்பாய்
அனானியாய் நீயேவந்து
சமயத்தில் பின்னிடுவாய்
பதிவு எழுதிப்பார்.

அனானிகள் வந்து
தாக்கினாலும்
பாலோவர்ஸ் எண்ணிக்கை
படிப்படியாய்க் குறைந்தாலும்
ஒரே பிளாக்கை இருவர்
சிக்கனமாய்ப் பகிர்ந்தாலும்
நீ பின்னூட்டமிடும் அவனோ, அவளோ
உனக்குப் பின்னூட்டமிட மறுத்தாலும்
பதிவு எழுதிப்பார்.

சொர்க்கம், நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்.


பதிவு எழுதிப்பார்.


Friday, July 24, 2009

எனக்கேன் இந்த வேண்டாத வேலை?

17 comments
நம் இருவரின் உறவையும்
ஒற்றை வார்த்தைக்குள்
பொதுவாக்கப் பார்க்கிறேன் நான்,
போ.. என்று விரட்டுகிறாய் நீ!



ஆறரை நிமிடத்திலேயே
வந்திடாதத சுனாமி - உன்
அரைநொடி கிரகணத்தால்
வந்தே விட்டது எனக்குள்!



உன் பக்தியால்
தினம் எனக்கு
அம்மன் தரிசனம்
பிள்ளையார் கோவிலில்!



உன்
ஒற்றை ரூபாய் பெறும்
பிச்சைக்காரனாய்
ஆகிவிடுகிறேன் நானும்.
எனக்காயும் நிற்பாயா
அரை நிமிடம்?




நீ
எவ்வளவு புறக்கணித்தும்
எதைத்தான் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் உன்பின்னால்?
ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா?

Sunday, May 10, 2009

அம்மா எனக்கொரு போதிமரம்!

1 comments
 
மாதங்கள் பத்து மகிழ்வுடனே காத்திருந்து
பாரமென்று பார்க்காமல் பக்குவமாய் எனைத்தாங்கி
நான் கொடுத்த வலியினையும் நன்மையெனப் பொறுத்துக்கொண்டு
ஈன்றெடுத்த என்னம்மா பொறுமையிலே போதிமரம்

பரீட்சைக்கு நான் படிக்க பக்கத்தில் விழித்திருந்து
கண்ணயர்ந்த போதிலெல்லாம் கனிவுடனே காப்பிதந்து
பாசான செய்திகேட்டு என்னைவிட மகிழ்ச்சிகொண்ட
என்னம்மா எனக்கு பாசத்திலே போதிமரம்

தப்பு செய்தால் உடனே தட்டிக் கேட்டுவிட்டு
கண்கலங்கி நான் நிற்க, தானும் சேர்ந்தழுதுவிட்டு
வாரி எடுத்தென்னை வாயாலே திருத்திவிட்ட
வாஞ்ஞையிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்

மைல்கள் பல கடந்து, தினம்தினம் தொலைபேசி
சின்னக் கவலை மறைத்துச் சிரிப்போடு தினம்பேசி
அங்கிருந்தே எனக்கு அறிவுரைகள் கூறிவிடும்
அறிவினிலே எனக்கு அவர் ஒரு போதிமரம்

அன்னையர் தினத்திற்காய் வாழ்த்தொன்று நான்கூற
‘அடப்போடா’ என்று அப்படியே வெட்கப்பட்டு
சின்னச் சிரிப்பொன்றை எனக்காய்க் கொடுத்துவிட்ட
சிலிர்ப்பினிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்

Tuesday, April 28, 2009

பேருந்துப் பயணம்

16 comments

எப்போது பார்த்தாலும்
வித்தியாசம் காட்டும்
என்றும் இனிக்கும்
சாலை ஓரங்கள்



ஏறியவுடனே என்னைப்பார்த்து
"முன்னே வா" எனக்கூறும், ஆனால்
மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்
நடத்துனன்



வீதி விபத்தைத் தடுப்பதற்கோ
இல்லை வீடு செல்லத் திரணியற்றோ
சைக்கிளையும் முந்த விடும்
சாமர்த்திய ஓட்டுணன்



கூட வரும் பயணிகளைப் பார்க்கயில்
சில சமயம் ஆதங்கங்கள்
பல சமயம் மனதில்
பூகம்பங்கள்



தனிமையில் பயணிக்கையில்
தானும் கூட வரும்
என்னுடைய phone இலுள்ள
Radio & Music player



எல்லாவற்றுக்கும் மேலாக
தனிமையில் நானிருக்க
ஏளனமாய் எனைப் பார்க்கும்
பக்கத்து சீட்



Saturday, February 14, 2009

இன்று காதலின் நாள்

2 comments



இன்று
காதலின் நாள்
அன்றைக் காதவரைக்
கைகோர்த்து விட்டவனின்
கடைசி நாள்
இன்றைக் காதலரின்
இதயம் மறந்துவிட்ட - அவன்
இறுதிநாள்

இன்று
பூ வியாபாரிகட்கோ பொன்நாள்
காதலர் மனம்கவர்ந்த
களியாட்டக்கடைகட்கு நன்நாள்
பார்க்கிலோ பெஞ்களிற்குப்
பற்றாக்குறை ஆகும்நாள்
பீச்சின் வியாபாரிக்குச் சுண்டல்
மிஞ்சாத ஓர்நாள்

இன்று
கலாச்சாரக் காவலற்குக் கரிநாள்
காக்கிச் சட்டைக் காரருக்கோ
கடமை கூடும்நாள்
அப்பாமார் அடிவயிற்றை
அரிக்கும் நாள் - அவர்
பாக்கட்டின் பணத்தையும்
சேர்த்தே பறிக்கும்நாள்

இன்று
காதல் சோல்ல இருப்போர்க்குச்
சோதனைநாள் - அதைச்
சொல்லித் தோற்றவர்க்கோ
வேதனைநாள்
வென்று விட்டவரோ வெளியில்
'வேலையாய்' அலையும்நாள் - வெறும்
என்னைப் போன்றவர்க்கோ
எப்போதும்போல் ஓர்நாள்

Wednesday, February 11, 2009

ஆண்டுகளின் மாற்றத்தில் அவள்!

0 comments



அன்றுனக்கு வயதிரண்டு!

தட்டுத் தடுமாறித் தவழ்ந்துவரும் தாய்மொழியும்,
கட்டாமல் விட்டதனால் கலைந்துவிட்ட உன்தலையும்,
புழுதிகள் பிரண்டுவிட்ட செம்பட்டை நிறமுடியும்,
அதிகம் அலட்டாமல் அணிந்துவரும் ஆடையும்,
தத்தித் தவழ்ந்துவரும் நடையெனும் நாட்டியமும்,
காண்பவரின் கண்களெல்லாம் கனிவோடு நோக்குதடி.




வளர்ந்துவிட்டாய் இன்று, வயது இருபத்தொன்று!

ஆங்கிலத்தின் நடுவினிலே தடுமாறும் தமிழ்மொழியும்,
கட்டாமல் நீட்டிவிட்டுக் கத்தரித்த உன்தலையும்,
காஸ்ட்லி மை பிரண்ட செம்பட்டை நிறமுடியும்,
தோளிரண்டில் நூலிற் தொங்குகின்ற உன் உடையும்,
அடிமீது அடிவைத்து இடையாட்டும் கேட்வாக்கும்,
காண்பவரின் கண்ணையேல்லாம் காமத்தால் நிரப்புதடி.

ஆண்டுகளின் மாற்றத்தில் மாறவில்லை நீ எதுவும்,
காண்பவரின் கண்களிற்றான் காலத்தின் மாற்றமோடி?
அன்று நீ செய்துவிட்டால் குழந்தையின் அறியாமை,
இன்று நீ செய்வதுதான் நாகரிக நரிவேலை!

Wednesday, February 4, 2009

எனக்கு இப்போ வாலிப வயசு!

2 comments


அம்மம்மாவின் பேச்சில் மட்டும்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
என் குட்டி வயதுக் குறும்புத்தனம்

அம்மாவின் அரவணைப்பை
அடியோடு மறந்துவிட்ட என்
தனியறைப் படுக்கை

அன்பாகப் பேசும்
அப்பாவின் பேச்சில் கொஞ்சம்
அதிகாரக் குறைப்பு

தம்பியின் விளையாட்டிலிருந்து
தனியாக்கப்பட்டு விட்ட
எனது பொழுதுபோக்கு

என்கூடத் தனியாக
வெளியில் வருவதையே
தானாகக் குறைத்துவிட்ட அக்கா

தங்கையின் உடைகளில்
நான் இப்போ காட்டும்
தனியான அக்கறை

இவையெல்லாம் எனக்குக்
கூறாமல் கூறின
"உனக்கு இப்போ வாலிப வயசு"

Monday, January 26, 2009

அவளும் நானும்

1 comments
விம்மிய முகத்துடன் நான்
அருகில் விசும்பற் குரலுடன் அவள்
அன்று
ஆண்டு ஒன்றின் முதன்நாள்
ஆண், பெண் என்பதே
அறியாத அந்நாள்

ஆங்கிலம் கற்கத்தொடங்கிய
ஆண்டு மூன்று
அருகிலே அவள் இல்லை
அவன்
அருகிருக்கவும் தோன்றவில்லை
வித்தியாசம் என ஏதோ புரிந்தது

ஆண்டு ஐந்துப் பரீட்சை
அவளைவிட அதிக மார்க்
எடுத்தாக வேண்டும்
ஏதோ ஒரு வைராக்கியம்
அதுவும் முடிந்தது

அடுத்த பாடசாலை
அவளுக்கு வேறு
எனக்கு வேறு
டியூசன் வகுப்பிலும்
தெளிவான இரண்டுபக்கம்
வித்தியாசம் நிச்சயிக்கப்படுகிறது

திடீரென ஓர்நாள்
அவள் இல்லை - பின்
வந்தாள் வாரம் இரண்டு
ஏதோ வித்தியாசம்
எனக்குப் புரிந்தது
எனக்குள்ளும் புரிந்தது

அவள்
தற்செயலாய்த் திரும்பினாலே
தறிகெட்டுத் துள்ளியது மனது
ஆம், என்னைத்தான் பார்க்கிறாள்
நானும் அவளையே

எல்லோரும் என்னையே
பார்ப்பதாய் உணர்கிறேன்
ஆடைகள் விசயத்திலும் நான்
அவ்வளவு கவனம்
தனியாக ஒரு நண்பர் கூட்டம்
என்னைச் சுற்றி
அவளுக்கும் தான்

அவள் என்னைவிட வேகமாக
சைக்கிள் விடுகின்றாள்
அவளுக்குப் பின்னாலே நான்
அடுத்தடுத்த பரீட்சையிலும்

அடுத்துப் பல்கலைக்கழகம்
மீண்டும் அவளோடு நான்
அருகிலேயே
தெளிவாகத் தெரிகின்ன
எதிர்காலக் கேள்விக்குறி
ஆனால்
இப்போது நான்
அதே ஆண்டு ஒன்று!

Saturday, January 24, 2009

காதலில் விழுந்தேன்!

2 comments



கனவோடு வாழ்ந்து தலை
நரைகூடக் கண்டபின்னும்
என் காதலினை உனக்குக்கூற
தைரியம் வரவில்லையடி

கண்டால் முறுவுவதும் பின்
கண் சிமிட்டிச் சிரிப்பதுவும்
கையசைத்துக் கதைப்பதுவும் உன்
காற்கொலுசும் கவிதையடி

உன் கன்னக் குழியினிலே
கவிழ்ந்துவிட்ட என்னோடம்
கரைகாண வழியின்றிக்
கலங்கித் தவிக்குதடி

கண்ணாடி பிம்பங்களும் என்
கண்கடந்து போவோரும்
காண்போரெல்லாம் உன்னுருவாய்க்
கண்ணுக்குத் தெரியுதடி

நழினங்கள் இழையோடும் நம்மவர் நாட்டியமும்
அதிரடி இசையோடும் தற்கால நாட்டியமும்
அங்கங்கள் குலுங்க ஆடும் ஆபிரிக்க நாட்டுயமும்
உன் நடையெனும் நாட்டியத்தின் கடைகூட இல்லையடி

கடிதங்கள் எழுதுகிறேன், அனுப்ப வழி தேடுகிறேன்
தூதுவிடப் புறாவுமில்லை, உன் தூரத்து உறவுமில்லை
உன்னண்பி எனக்கு இன்னும் நண்பியும் ஆகவில்லை
என் கடதாசிக்காதல் உனைக் கண்டு கரை சேருமாடி

Wednesday, January 14, 2009

சூரியனே உனக்கோர் விண்ணப்பம்!

0 comments


பொங்கல் உண்பதற்காய் காலைப்
பொழுதோடு வருவாய் நீ
காத்திருந்து கையளிக்கிறேன்
கனிவாய் உனக்கோர் விண்ணப்பம்

ஊரெல்லாம் இன்று
உனக்காய்ச் சமைக்கயிலே
உணவில்லா மக்களுக்கும்
ஒரு பங்கைக் கொடுத்துவிடு

மரத்தின் நிழலில் வாடும்
மக்களிற்காய்க் கேட்கின்றேன்
மத்தியான வெயிலைக் கொஞ்சம்
மந்தமாக எறித்துவிடு

இரவில் ஒளியின்றி
இருக்கும் எம் மக்களிற்காய்
உன்னுடைய ஒளியைக் கொஞ்சம்
இரவினிலும் கொடுத்துவிடு

ஊரெல்லாம் வெடியுடனே
உனக்காய்ப் பொங்குகையில்
ஓரத்தின் ஓலத்திற்கும்
ஒருமுறை காதுகொடு

எமக்கெட்டாத ஊர்களையும்
எட்டிவிடும் நீ எமது
கட்டாத கதை மனதைத்
தட்டட்டும் சொல்லிவிடு

உழவுக்கு உயிர் கொடுக்கும்
உன்னிடத்தில் எனக்குள்ள
உரிமையில் கேட்கின்றேன் இல்லை
என்றிடாமல் ஏற்றுவிடு
Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy