ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது. கண்டி மாநகரின் கடுங் குளிருக்கு இதமாக இரண்டாம் முறையாக அடித்த அலாரத்தையும் ஸ்னூசில் போட்டுவிட்டு அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டாள் வர்ஷா.
‘ஹேப்பி பர்த்டே டார்லிங்’ பார்த்ரூமிலிருந்து உற்சாகமாக வெளிப்பட்ட கௌதம் குரலைத்தணித்து ‘இன்னும் தூங்கிட்டிருக்கியா? ரொம்பவே டயர்ட் போல’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். அந்தக் குளிருக்கும் குளித்திருந்தான். இடுப்பில் சுற்றியிருந்த துவாயின் கீழே கால்களில் இன்னும் ஈரமிருந்தது. மெதுவாக அருகில் வந்து ஈர விரல்களால் அவள் கன்னங்களை வருடினான். சிணுங்கிக்கொண்டே திரும்பியவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுவிட்டு, மறுபடியும்
‘ஹேப்பி பர்த்டேடா’
‘ம்ம், விஷ் எல்லாம் இருக்கட்டும். என்ன கிஃப்ட் தரப்போறீங்க?’
‘அதான் நேற்று நைட்டே கொடுத்தேனே’ சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.
‘ஏய், யூ…’ என்று அவனைத் தள்ளிவிட்டவள், ‘ஓகே, ரெடியாகு, இன்னும் பத்தே நிமிஷத்தில கிளம்பிடலாம்’ என்றவாறே எழுந்து, பாத்ரூமிற்குள் சென்று சாத்திக்கொண்டாள்.
இரவுக் குளிரில் ஈரமான வீதிகளை மரங்களினூடான சூரியப்பொட்டுக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. இலைகளில் ஒடுங்கிக்கிடந்த நீர்த்துளிகள் சொட்டத்தொடங்கி காலைக்குளிரை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்க, அந்தக் குளிரிலும் திருமணமாகி ஒரு வாரமே ஆன புது மனைவியின் கைகோர்த்தபடி நடந்துகொண்டிருப்பது இதமாகத்தான் இருந்தது கௌதமிற்கு.
‘வர்ஷு, ஹௌ டூ யூ ஃபீல்?’
‘இப்படியே நடந்துட்டே இருக்கலாம் போல இருக்குங்க’ கையை இன்னும் இறுக்கியவாறே அவன் தோளில் சாய்ந்துகொண்டவளைக் கடைக்கண்ணால் ரசித்துக்கொண்டான். சிலநிமிட நடையில் இருக்கும் கோயிலில் பிறந்தநாள் தரிசனம் முடித்துவிட்டு, அருகிலேயே ரெஸ்ரொரன்டில் காலை உணவையும் எடுத்துக்கொண்டு கொழும்பு புறப்பட்டாகவேண்டும். திருமணத்திற்காக எடுத்த விடுமுறை இன்றுடன் முடிய, அடுத்தநாள்முதல் அமரிக்க முதலாளித்துவத்திற்கு ஆணி பிடுங்கி, றூபியுடன் மல்லுக்கட்டவேண்டும் என்று நினைக்கையிலேயே என்னவோ செய்தது அவனிற்கு.
**********************************
கொழும்பு நகரின் இதயப்பகுதியிலிருக்கும் அந்த அப்பார்ட்மென்ட் வழமைக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையும் பரபரப்பாகக் காணப்பட்டது.
‘இங்கதான் சேர், த்தேர்ட் ஃப்ளோர்’
‘இவர்தான் முதல்ல பாத்திருக்கார்’
‘அன்யூஸ்வலா கதவு ரொம்பநேரம் திறந்திருந்தது சார், அதுதான் எட்டிப்பார்த்தேன்’
அப்போதுதான் வந்திறங்கியிருந்த இன்ஸ்பெக்டரிடம் யார்யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். லிஃப்டில் ஏறி வேகமாக மூன்றாம் மாடியை அடைந்தார் இன்ஸ்பெக்டர். மூன்றாம்மாடி வெறிச்சொடிப்போய் நிசப்தமாக இருந்தது. லிஃப்டின் எதிரிலேயே ‘ஓ’வெனத் திறந்திருந்த வீடு அவரை வரவேற்றது. டைல்ஸில் வடிந்திருந்த இரத்தம் வாசலில் திட்டாக உறைந்துபோய்க் கிடந்தது. இரத்தத்தைக் கண்ணாலேயே பின்தொடர்ந்தவருக்கு அதிகம் வேலை வைக்காமல் முன்னால் சொஃபாவின் அருகிலேயே சுருண்டு கிடந்தாள். பிங்க் நிறத்தில் இரவு உடை அணிந்திருந்தாள். இரத்தம் தோய்ந்த கத்தி அருகிலேயே கிடக்க, அவள் வயிற்றுப்புற ஆடை பிங்கிலிருந்து சிவப்பாக மாறி, பின் கபிலமாகக் காய்ந்துபோயிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் தயங்கியபடியே அழைத்துவரப்பட்டார்.
‘இவங்க பெயர் தெரியுமா?’
‘ஜெனி சார்’
‘கூட வேற யார்யாரெல்லாம் இருந்தாங்க?’
‘பேரன்ட்ஸ் இருந்தாங்க சார், போன கிழமைதான் ஊருக்குக் கிளம்பிப்போனாங்க. அவங்களுக்குக்கூட ஃபோன் பண்ணி சொல்லிட்டோம்’
‘கல்யாணம் ஆயிடுச்சா?’
‘இன்னும் இல்லை சார்’
‘நைட் உங்களுக்கு சத்தம் எதுவுமே கேக்கலையா?’ உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்.
‘ஓகே, யூ மே கோ நவ், அப்புறமாக் கூப்பிடுறேன்’ என்று தலையாட்டியவாறே வீட்டுக்குள் நுளைந்த இன்ஸ்பெக்டர் ஆதாரங்களைச் சல்லடை போடத்தொடங்கினார். ப்ரிண்ட்ஸ்காக ட்ஸ்ட் பண்ணி முடித்திருந்த சொபா முதற்கொண்டு மேசை ட்றாயர் வரை சல்லடைபோட்டார். அலமாரிகளைப் புரட்டிப்போட்டார். அங்கே கிடைத்த ஜெனியின் ஹேன்ட் பேக்கை ஆராயத்தொடங்கினார். மூக்கு மட்டுமே தெரியக்கூடிய சைசில் முகம்பார்க்கும் கண்ணாடி, லிஃப்ஸ்டிக், இரண்டு வகை ஸ்ப்ரே, சில கிரீம்கள் என்று ஒவ்வொன்றாகப் புறக்கணித்துக்கொண்டு வந்தவரின் கைகளில் அவளின் பர்ஸ் அகப்பட்டது. எடுத்துத் திறந்தவர் ஒருமுறை நெற்றியைச் சுருக்கிவிட்டுக்கொண்டார்.
அதிலே இருந்த புகைப்படத்தில் ஜெனியின் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.
இந்தத் தொடர்கதையை சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது. அவரவர் கற்பனைக்கே விடப்பட்டுள்ள தொடரில் எனக்கு அடுத்ததாக பதிவர் பவன் தொடர்வார்.
பின்னிணைப்பு
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம்பாகம்
பதிவர் சதீஷால் எழுதப்பட்ட மூன்றாம்பாகம்
பதிவர் மதுவால் எழுதப்பட்ட நான்காம்பாகம்
பதிவர் லோஷனால் எழுதப்பட்ட ஐந்தாம்பாகம்


