Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, December 4, 2010

கொலைக்காற்று

26 comments

 

Love

ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது. கண்டி மாநகரின் கடுங் குளிருக்கு இதமாக இரண்டாம் முறையாக அடித்த அலாரத்தையும் ஸ்னூசில் போட்டுவிட்டு அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டாள் வர்ஷா.

‘ஹேப்பி பர்த்டே டார்லிங்’ பார்த்ரூமிலிருந்து உற்சாகமாக வெளிப்பட்ட கௌதம் குரலைத்தணித்து ‘இன்னும் தூங்கிட்டிருக்கியா? ரொம்பவே டயர்ட் போல’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். அந்தக் குளிருக்கும் குளித்திருந்தான். இடுப்பில் சுற்றியிருந்த துவாயின் கீழே கால்களில் இன்னும் ஈரமிருந்தது. மெதுவாக அருகில் வந்து ஈர விரல்களால் அவள் கன்னங்களை வருடினான். சிணுங்கிக்கொண்டே திரும்பியவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுவிட்டு, மறுபடியும்

‘ஹேப்பி பர்த்டேடா’

‘ம்ம், விஷ் எல்லாம் இருக்கட்டும். என்ன கிஃப்ட் தரப்போறீங்க?’

‘அதான் நேற்று நைட்டே கொடுத்தேனே’ சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.

‘ஏய், யூ…’ என்று அவனைத் தள்ளிவிட்டவள், ‘ஓகே, ரெடியாகு, இன்னும் பத்தே நிமிஷத்தில கிளம்பிடலாம்’ என்றவாறே எழுந்து, பாத்ரூமிற்குள் சென்று சாத்திக்கொண்டாள்.

இரவுக் குளிரில் ஈரமான வீதிகளை மரங்களினூடான சூரியப்பொட்டுக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. இலைகளில் ஒடுங்கிக்கிடந்த நீர்த்துளிகள் சொட்டத்தொடங்கி காலைக்குளிரை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்க, அந்தக் குளிரிலும் திருமணமாகி ஒரு வாரமே ஆன புது மனைவியின் கைகோர்த்தபடி நடந்துகொண்டிருப்பது இதமாகத்தான் இருந்தது கௌதமிற்கு.

‘வர்ஷு, ஹௌ டூ யூ ஃபீல்?’

‘இப்படியே நடந்துட்டே இருக்கலாம் போல இருக்குங்க’ கையை இன்னும் இறுக்கியவாறே அவன் தோளில் சாய்ந்துகொண்டவளைக் கடைக்கண்ணால் ரசித்துக்கொண்டான். சிலநிமிட நடையில் இருக்கும் கோயிலில் பிறந்தநாள் தரிசனம் முடித்துவிட்டு, அருகிலேயே ரெஸ்ரொரன்டில் காலை உணவையும் எடுத்துக்கொண்டு கொழும்பு புறப்பட்டாகவேண்டும். திருமணத்திற்காக எடுத்த விடுமுறை இன்றுடன் முடிய, அடுத்தநாள்முதல் அமரிக்க முதலாளித்துவத்திற்கு ஆணி பிடுங்கி, றூபியுடன் மல்லுக்கட்டவேண்டும் என்று நினைக்கையிலேயே என்னவோ செய்தது அவனிற்கு.

**********************************

கொழும்பு நகரின் இதயப்பகுதியிலிருக்கும் அந்த அப்பார்ட்மென்ட் வழமைக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையும் பரபரப்பாகக் காணப்பட்டது.

‘இங்கதான் சேர், த்தேர்ட் ஃப்ளோர்’

‘இவர்தான் முதல்ல பாத்திருக்கார்’

‘அன்யூஸ்வலா கதவு ரொம்பநேரம் திறந்திருந்தது சார், அதுதான் எட்டிப்பார்த்தேன்’

அப்போதுதான் வந்திறங்கியிருந்த இன்ஸ்பெக்டரிடம் யார்யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். லிஃப்டில் ஏறி வேகமாக மூன்றாம் மாடியை அடைந்தார் இன்ஸ்பெக்டர். மூன்றாம்மாடி வெறிச்சொடிப்போய் நிசப்தமாக இருந்தது. லிஃப்டின் எதிரிலேயே ‘ஓ’வெனத் திறந்திருந்த வீடு அவரை வரவேற்றது. டைல்ஸில் வடிந்திருந்த இரத்தம் வாசலில் திட்டாக உறைந்துபோய்க் கிடந்தது. இரத்தத்தைக் கண்ணாலேயே பின்தொடர்ந்தவருக்கு அதிகம் வேலை வைக்காமல் முன்னால் சொஃபாவின் அருகிலேயே சுருண்டு கிடந்தாள். பிங்க் நிறத்தில் இரவு உடை அணிந்திருந்தாள். இரத்தம் தோய்ந்த கத்தி அருகிலேயே கிடக்க, அவள் வயிற்றுப்புற ஆடை பிங்கிலிருந்து சிவப்பாக மாறி, பின் கபிலமாகக் காய்ந்துபோயிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் தயங்கியபடியே அழைத்துவரப்பட்டார்.

‘இவங்க பெயர் தெரியுமா?’

‘ஜெனி சார்’

‘கூட வேற யார்யாரெல்லாம் இருந்தாங்க?’

‘பேரன்ட்ஸ் இருந்தாங்க சார், போன கிழமைதான் ஊருக்குக் கிளம்பிப்போனாங்க. அவங்களுக்குக்கூட ஃபோன் பண்ணி சொல்லிட்டோம்’

‘கல்யாணம் ஆயிடுச்சா?’

‘இன்னும் இல்லை சார்’

‘நைட் உங்களுக்கு சத்தம் எதுவுமே கேக்கலையா?’ உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்.

‘ஓகே, யூ மே கோ நவ், அப்புறமாக் கூப்பிடுறேன்’ என்று தலையாட்டியவாறே வீட்டுக்குள் நுளைந்த இன்ஸ்பெக்டர் ஆதாரங்களைச் சல்லடை போடத்தொடங்கினார். ப்ரிண்ட்ஸ்காக ட்ஸ்ட் பண்ணி முடித்திருந்த சொபா முதற்கொண்டு மேசை ட்றாயர் வரை சல்லடைபோட்டார். அலமாரிகளைப் புரட்டிப்போட்டார். அங்கே கிடைத்த ஜெனியின் ஹேன்ட் பேக்கை ஆராயத்தொடங்கினார். மூக்கு மட்டுமே தெரியக்கூடிய சைசில் முகம்பார்க்கும் கண்ணாடி, லிஃப்ஸ்டிக், இரண்டு வகை ஸ்ப்ரே, சில கிரீம்கள் என்று ஒவ்வொன்றாகப் புறக்கணித்துக்கொண்டு வந்தவரின் கைகளில் அவளின் பர்ஸ் அகப்பட்டது. எடுத்துத் திறந்தவர் ஒருமுறை நெற்றியைச் சுருக்கிவிட்டுக்கொண்டார்.

அதிலே இருந்த புகைப்படத்தில் ஜெனியின் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.

இந்தத் தொடர்கதையை சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது. அவரவர் கற்பனைக்கே விடப்பட்டுள்ள தொடரில் எனக்கு அடுத்ததாக பதிவர் பவன் தொடர்வார்.

பின்னிணைப்பு

பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம்பாகம்

பதிவர் சதீஷால் எழுதப்பட்ட மூன்றாம்பாகம்

பதிவர் மதுவால் எழுதப்பட்ட நான்காம்பாகம்

பதிவர் லோஷனால் எழுதப்பட்ட ஐந்தாம்பாகம்

Thursday, September 23, 2010

டைமன்ட் (சவால் சிறுகதை)

21 comments

 

Gamini

கையிலிருந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு புன்னகையுடன் மீண்டும் ஒருமுறை தலையை ஆட்டிக்கொண்டான் சிவா. அதிலே பூக்களின் பின்னணியில், மாலைச்சூரிய வெளிச்சத்தால் அங்கங்களும் கொஞ்சம் மஞ்சள் தொட்டுத் தெரிய, வெள்ளை நிற ஆடையில், ஃபேன்சி தோடுகள் சகிதமாக ‘சீஸ்’ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள் காமினி.

‘சூப்பரா இருக்கா பாஸ், ஆமா பெயர் என்ன சொன்னீங்க?’

‘காமினி’ இது பரந்தாமன்

‘என்ன பெயர் பாஸ் இது? ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க?’

‘அடேய், அது அவளோட ஒரிஜினல் பெயர்டா, சரி நீ கிளம்பு. நைட் 2.30க்கு லேன்டிங். ட்றஃபிக் இருக்காது. ஒன் அவர்ல இங்க வந்துடலாம். பொருள் பத்திரம்’

‘பயப்படாதீங்க பாஸ், பொண்ணும் பத்திரமா இருக்கும்’ சிரித்தபடியே காரைக் கிளப்பினான் சிவா.

-

பதினைந்து நிமிடத் தாமதத்துடன் ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி முரண்டுபிடித்துவிட்டு, மூன்றாவதுதடவை முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வருகையை ஒற்றை வார்த்தையில் அறிவிப்புப்பலகை அறிவிக்க, ஒருவித பரபரப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. சிறிதுநேரத்திலேயே வெளிப்பட்ட காமினியைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமமிருக்கவில்லை அவனுக்கு.

‘ஹாய், ஐம் சிவா’ என்றவாறே கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டான்.

‘காமினி’

‘ஐ நோ, நைஸ் நேம். ட்ராவல்ல ஒண்டும் பிரச்சினையில்லையே?’

‘இல்லை. போகலாமா?’

இடதுபக்கக் கதவால் காமினி பின் சீட்டில் ஏறிக்கொள்ள, சீட் பெல்ட்டை மாட்டியவாறே காரை எடுத்தான் சிவா.

‘U.K ல எங்க இருக்கிறீங்க?’

‘Uxbridge’

‘ஸ்டூடன்ஸ் விசாவா? என்னோட மாமாகூட அங்கதான் இருக்கார், பெயர் கூட வந்…’

‘சிவா, உங்க பருப்பு எங்கிட்ட வேகாது. பரந்தாமன் அங்கிள் உங்களைப்பற்றி முன்னாடியே எல்லாம் சொல்லிட்டார். So, கொஞ்சம் பேசாமப் போறீங்களா?’

கோபத்துடன் சிவா ஆக்சிலரேட்டரை மிதிக்க, அதிகம் வாகனநடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் சீறிப்பாய்ந்தது கார். சிறிதுதூரத்தில் குறுக்கே புகுந்த மோட்டார்சைக்கிள்காரனைக் காப்பாற்ற சிவா எடுத்துக்கொண்ட முயற்சியால் கார் கண்ணுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த இரும்பு மின்விளக்குக்கம்பத்தை 30 பாகையால் சரிக்க, அதே வேகத்தில் முன் சீட்டில் இடிபட்டு, மீண்டும் பின்னால் பிடரியில் அடிபட்டு பின்சீட்டிலேயே வலதுபக்கமாகச் சரிந்தாள் காமினி.

-

உடலில் ஆங்காங்கே வயர்கள் மாட்டப்பட்டு, கண்கள் சொருகிய நிலையில் சோர்ந்து கிடந்தாள் காமினி.

‘சீரியசா எதுவுமில்லை. நெத்தியிலதான் ஏழு ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். ரத்தம் கொஞ்சம் அதிகமாப் போனத்தல மயங்கிட்டா. பிரடியில அடிபட்டதால மூச்சுவிட கொஞ்சம் கஸ்டப்பட்டா, இப்ப எல்லாம் நார்மல். கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சுடுவா’ அருகில் டாக்டர் ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி, பரந்தாமன் வீட்டைச் சென்றடைந்தாள்.

‘என்ன ஆச்சு காமினி? ஏன் இவ்வளவு லேட்? நெத்தியில என்ன காயம்?’ பார்த்ததுமே பதறிய பரந்தாமனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள் காமினி.

‘அப்ப சிவா?’

‘சீட் பெல்ட் மாட்டியிருந்ததால அவனுக்கு அவ்வளவா அடிபடல போல, ஆக்சிடன்ட் ஆனதுமே கார்லருந்து இறங்கி என்னோட ஹேன்ட்பேக்கையும் எடுத்துட்டு ஓடுறதைப பார்த்தேன். அதுக்கப்புறம் நான் மயங்கிட்டதால எதுவுமே தெரியல’

‘அதுசரி, நீ எதுக்கும்மா ஹாஸ்பிட்டல்ல இருந்து ஓடிவந்த? போலீஸ் கேஸ் வேற. சிக்கலாயிடும். வா போலீஸ் ஸ்ரேசனுக்குப் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு, உன் மத்த லக்கேஜசையும் வாங்கிட்டு வந்துடலாம்’

இவர்கள் வாசலால் வெளியேற, அதற்காகவே காத்திருந்தவன் போல குறுக்கே பாய்ந்து

‘ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை’ என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

‘த்சோ த்சோ த்சோ, பயந்துட்டியா?’ என்றவாறே துப்பாக்கியை எடுத்து இம்முறை பரந்தாமனின் நெற்றியில் வைத்தான்.

‘உன்னோட லக்கேஜில எனக்குத் தேவையான பொருள் ஒண்டு இருக்கு. மரியாதையா அதை எப்படியாவது போலீஸ்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்திடு. ஏதாவது வம்பு பண்ணணும்னு நினைச்சா உன்னோட பரந்தாமன் அங்கிள் அந்தப் பரந்தாமன்கிட்டயே போகவேண்டியதுதான்’ என்றான் சிவா.

-

சில மணி நேரங்களில் லக்கேஜை எடுத்தவாறு உள்ளே நுளைந்த காமினி பரந்தாமனும், சிவாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றாள்.

‘காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே’ என்று பாராட்டினார் பரந்தாமன்

‘டைமன்டா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி

‘என்னோட ப்ரண்ட் உன்கிட்ட தந்துவிட்ட பார்சல்ல டைமன்ட் இருக்கிற விசயம் உனக்குத் தெரியாது. அது இருக்கிற பாக் எண்டு நினைச்சுத்தான் சிவா உன்னோட ஹேன்ட்பேக்கை எடுத்துட்டு ஓடினான் என்கிறதும் உனக்குத் தெரியாது. கடைசியா நான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தா அரஸ்ட் பண்ணிடுவாங்க என்கிறதால உன்னைத் தனியா அங்க அனுப்புறதுக்குப் போட்டதுதான் இந்த துப்பாக்கி ட்றாமா என்கிறதும் உனக்குத் தெரியாது’ என்றுவிட்டு அதிர்ந்து சிரித்தார் பரந்தாமன்.

‘இப்ப உங்களைக் கொண்ணுட்டு டயமன்டை நானே எடுத்துக்கப்போறேன் எண்டுற விசயம் உங்களுக்குத் தெரியாது பாஸ்’ என்றவாறே பரந்தாமன் தலையில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

‘வெரிகுட், ஆனா நான் போலீஸ் என்கிற விசயம் உங்கள் ரெண்டுபேருக்குமே தெரியாது’ என்றவாறே சிவாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாள் காமினி.

Monday, August 23, 2010

நிலாக்காதல் – 3

16 comments

 

பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்
வாசித்துவிட்டுத் தொடர்ந்து வாசிக்கவும்.

சந்தோஷின் தொலைபேசியில் தெரிந்த அவளது பெயரைப் பார்த்ததுமே எடுத்துப் பேசடா என்று மனது குறுகுறுக்க, நண்பனின் தொலைபேசியில் ஒரு பெண்ணின் அழைப்பு என்ற நாகரிகங்களையெல்லாமே மறந்துவிட்டுத் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக் ‘ஹலோ’ என்றான் ஹரீஷ்.
‘ஹலோ, இஸ் சந்தோஷ் ஓவர் தேர்?’ என்ற எதிர்முனையின் குரலைக் கேட்டு மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிக்க, அவள்தான், அவளேதான் என்று இதயம் வேகமெடுக்க, தானாகவே கிளம்பிய சிரிப்பையும் கட்டுப்படுத்திக்கொண்டு
‘நோ, ஐம் ஹிஸ் ப்ரன்ட் ஹரீஷ்’
‘பார்டன்’
‘ஐம் ஹரீஷ், நீங்க தேவா சேரின்ட மகள் தானே?’
………….
‘ஹலோ….. ஹலோ......’
எதிர்முனையின் மௌனத்தை தொலைபேசி இணைப்பின் ‘பீப்’ ஒலி துண்டித்தது. கண நேரத்துக்குள் கலைந்துவிட்ட தன் சந்தோஷத்தை ஹரீஷ் பெருமூச்சாக வெளிவிட, ‘யார் மச்சான் ஃபோனில?’ கேட்டுக்கொண்டே வந்தான் சந்தோஷ்.

Nila

இலண்டன் மாநகரத்தின் வானத்தை மாலைச்சூரியன் செம்மையாக்கிக்கொண்டிருந்தது. அப்போதே ஆரம்பித்துவிட்ட பனியின் துகள்கள் மெதுவாக வீசிய காற்றில் ஆடியபடியே கீழிறங்கிக்கொண்டிருக்க, யன்னலினூடான சூரியக்கதிர்களைத் தன்மேல் படரவிட்டபடி இதையெல்லாம் ரசிக்கமுடியாதவளாய்  வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள் வைஷாலி. சந்தோஷிற்கு அழைப்பெடுத்த அக்கா ஒரு வார்த்தைகூடப் பேசாமல் லைனைக் கட் செய்ததும், சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் அறைக்குள் சென்று அடைத்துக்கொண்டதும், வேகமாக வீட்டைவிட்டு வெளியே போனதும் அவள் மனதில் குழப்பத்தையும் பயத்தையும் உண்டாக்கிவிட்டிருந்தது. தான் ஒத்திகை பார்த்து அரங்கேற்றிய நாடகம் தன் கண்ணெதிரிலேயே திசைமாறிப்போனதை மீண்டுமொருமுறை அசைபோடத்தோடங்கினாள் அவள்.

அவளுக்கும், அக்காவிற்குமான நேற்றய அந்த உரையாடல் மிக நீண்டதாக இருந்தது. முற்றிலும் புதிய ஒரு மனிதருடன் பேசுவதுபோல உணர்ந்தாள். எதைப் பேசுகிறேன் என்று அவளுக்கே தெரியாத அளவிற்குப் பேசினாள். சமயங்களைப்பற்றிப் பேசினாள். சாதியைப்பற்றிப் பேசினாள். யாழ்ப்பாணத்து அயலவர்கள் பற்றிப் பேசினாள். சந்தோஷைப்பற்றிப் பேசினாள். இறுதியாக அவனுடனான காதலைப்பற்றிப் பேசினாள். அவளது காதல் புரிந்துகொள்ளப்பட்டபோது சந்தோஷப்பட்டாள். அந்தக் கணம் முதல் அக்கா சந்தோஷிற்கு அழைப்பெடுத்த கணம்வரை எல்லாம் அவள் விரும்பியபடியேதான் நடந்திருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள். அதிகம் வார்த்தைகள் இல்லாத அந்த ஒற்றை நிமிடநேர தொலைபேசி உரையாடல் அவ்வளவு கனமானதா என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவள் தோள் தொட்டுத் திருப்பப்பட்டாள்.

பரீட்சைப் பெறுபேற்றை எதிர்பார்க்கும் மாணவனின் ஆர்வத்தோடு, கண்ணில் நிராகரிப்பின் வலியோடு, ஒரு நிராயுதபாணியாய், கருணையற்ற உலகத்தின்முன்னால் வைக்கப்படும் கடைசிப்பிரார்த்தனையாக அவள் நிமிர்ந்து பார்க்க, அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அக்கா.

சில நாட்களுக்குப்பிறகு…

அரைமணிநேரத் தாமதத்துடன் கட்டுநாயக்க விமானநிலைத்தில் வந்திறங்கிய ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் விமானத்திலிருந்து காதலையும், கடைமையையும் எதிர்நோக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தாள் லாவண்யா.

- பதிவர் கன்கோனினால் தொடரப்படும்.

Thursday, August 19, 2010

அன்புள்ள சந்தியா

23 comments

 

4508101812_9d460d7731_b

கொழும்பிலிருந்து விலகும் அந்த நெடுச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்துக்கும் சற்று அதிகமாகச் சீறிக்கொண்டிருந்த அந்தக் காரைச் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பெண் என்றால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். காருக்குள் ராபின் திக்கிலின் செக்ஸ் தெராஃபி  கரைந்துகொண்டிருக்க, நெற்றிக்கு மேலாக கண்ணாடியைக் கவிழ்த்துவிட்டபடி காரை ஓட்டிக்கொண்டிருந்த சந்தியாவின் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம்போட்டுக்கொண்டிருக்க, பற்களுக்குள் பபிள்கம் ஒன்று நசுங்கிக்கொண்டிருந்தது. அவளைப்பற்றி அதிகம் வர்ணிக்கத் தேவையில்லை. இலட்சங்களில் சம்பாதித்துக்கொண்டு தனது இருபதுகளையே இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் பொதுவாக என்ன விடயங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்களோ, அவை எல்லாமே இருந்தது அவளிடம்.

இவை எல்லாம் நடந்துகொண்டிருந்த கணத்தில் நான் ஒரு அரைச்சொகுசுப் பேருந்தில் அவள் செல்லும் அதே பாதையில் சென்றுகொண்டிருந்தேன். கையில் சுஜாதாவிக் கடவுள்
“தற்போது எக்ஸ்டென்டட் சூப்பர் கிராவிட்டி என்று ஒன்று கொண்டுவந்திருக்கிறார்கள். அதை விளக்க ‘கிராவிட்டான்’, ‘க்ளுவான்’ போன்ற கற்பனைத் துகள்களை… “
என்று ஏதோ தெளிவாக்க முயன்று, தெளிவாகக் குழப்பிக்கொண்டிருக்க பக்கத்து சீட்டில் இருந்தவர் ஆரம்பித்தார்.
‘தம்பி’ நிமிர்ந்து பார்த்தேன்.
‘நேரம் என்ன?’ சொன்னேன்.
‘நிறைய வாசிப்பீங்களோ?, எத்தினையாம் நம்பர்?’
‘2’
‘ரண்டாம் நம்பர்க் காரர்தான் இப்படி ஏதாவது தேடிக்கொண்டே இருப்பாங்கள். என்ன சந்தேகப்புத்தி கொஞ்சம் கூட. ஏழாம் நம்பர்ப் பெட்டையாப் பாத்துக் கட்டுங்கோ தம்பி, அப்பதான் சந்தோஷமா இருக்கலாம்’
ஒரு புன்னகையை அவருக்குப் பதிலாகக் கொடுத்துவிட்டு, ஜன்னலுக்கால் பார்வையைத் திருப்பியபோதுதான் அவளை எனது பஸ்சிற்குப் பக்கத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தபோது முதன்முதலில் தரிசித்தேன். பஸ்சிலிருந்தான பார்வைக்கோணம் காருக்குளிருந்த அவளைத் தெளிவாகக் காண்பிக்க, அடிவயிற்றில் பட்டாம்பூச்சி, தலைக்குமேல் பல்ப் என்று அத்தனை சகுனங்களும் சரியாக இருக்க இவள்தான் அந்த ஏழாம் நம்பராக இருக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டிக்கொண்டபோது, பச்சை எரிந்து வாகனங்கள் வெவ்வேறு வேகங்களில் விரையத்தொடங்கியிருந்தன.

ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு பஸ் பயண விதிகளின்படி இறங்குவதற்கு சிறிது நேரமே இருக்கையில் சரியாக எழுந்திருந்தேன். வெளியில் மழை பெய்துகொண்டிருக்க பஸ் ஹப்புத்தளையை அண்மித்துக்கொண்டிருந்த இருள் கவ்வத்தொடங்கியிருந்த மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று பஸ்சின் முன்னால் பெரிய சத்தமொன்று கேட்க, டிரைவர் பஸ்சை வலப்பக்கமாகத் திருப்பி, அவசரமாக பிரேக் போட்டு, மலைச்சுவற்றோடு உராய்ந்தபடி நிறுத்த கண்ணாடி உடைந்து சிதறியதில் எனக்குமேலும் துகள்கள் கொட்ட, பின்னாலிருந்த பெண் வீலிட்டாள்.

இறங்கிச்சென்று பார்த்தபோது பஸ்சுடன் முட்டியும் முட்டாமலுமாக மேலிருந்து உருண்டு விழுந்த ஒரு பெரிய பாறாங்கல் சமத்தாக வீற்றிருந்தது. அந்தப் பாதையில் மேலும் பல இடங்களில் மண்சரிவு என்பதை சற்று நேரங்களுக்கெல்லாம் வந்த தொலைபேசிக் குறுஞ்செய்தி உறுதிசெய்ய, சிறுவயதிலிருந்தே நன்று பழகியிருந்த இறப்பர்த்தோட்டங்களுக்குள்ளாக இறங்கி வீதியை ஒட்டியபடி வீட்டை நோக்கி நனைந்தவாறே நடக்க ஆரம்பித்த சிறிது தூரத்தில் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்
‘எக்ஸியூஸ்மி’ என்றது.
‘யெஸ்’ என்றவாறே திரும்பினேன். சிறிது தூரத்தில் அவள், அதே அவள் முழுவதுமாக நனைந்தபடி ஒடிவந்துகொண்டிருக்க, ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவள் அங்கங்களின் எளிமையிசை இயக்கத்தால் மனது பிரௌணியின் இயக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்க, தற்செயலாகத் திறந்துவிட்ட ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில் சிலையாகி, கனவா நனவா எனச் சுயசோதனை செய்துகொண்டு, சிலமுறை எச்சில் விழுங்கி, எனக்கே எனக்காக ஒருமுறை மூச்சுவிட முயன்று தோற்றுக்கொண்டிருக்க அருகில் வந்து
“லேண்ட் ஸ்லாப்பில் கார் மாட்டிட்டுது. நாளைக்குத்தான் எடுக்கலாம். இரவு தங்கறதுக்கு நல்ல ஹோட்டல் பக்கத்தில எங்கயாவது இருக்குமா?’ என்றாள்.

அவளைக்கூட்டிக்கொண்டு தங்குமிடம் தேடித்திரிந்ததில் நன்றாகக் கழைத்துவிட்டிருக்க, குளிர் வேறு உடம்பைக் குத்திக்கொண்டிருந்தது. அருகிலிருந்த ஹோட்டல்கள் எல்லாம் மண்சரிவின் புண்ணியத்தில் நிறைந்து வருமானம் பார்த்துக்கொண்டிருக்க, எஞ்சியிருந்த இரண்டாம்தர ஹோட்டல்களில் ஒரு பெண்ணாக அவள் தனியே தங்குவது சாத்தியப்படாது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
‘தெரிஞ்சவங்க வீடு ஏதாவது இருந்தாலும் பரவாயில்லை. அங்க தங்கிக்கலாம். அவங்களுக்கு நான் பே பண்ணிடறேன்’ என்று அவளே ஆரம்பித்தாள்.
‘உங்களுக்குப் பிரச்சினை இல்லேன்னா எங்க வீட்டுக்கும் வரலாம். அம்மாவும், தங்கச்சியும் இருக்கிறாங்கள்’ என்றதற்கு அவள் தலையை ஆட்டியபோது மனம் துள்ளிக்குதிக்க, ஏதோ ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பெண் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைத்தாள்.

வீட்டாரின் சந்தேகப்பார்வையைத் தீர்த்து, சம்பிரதாயபூர்வ அறிமுகங்கள் முடிந்த சிறிது நேரத்திலேயே தங்கையுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். அவள் பாடத்திலிருந்த ஏதோ ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைத்தாள். அம்மாவின் சாம்பாரை ர(ரு)சித்தாள். எமிலி டிக்கின்ஸன் கவிதைகளோடு வைரமுத்து கவிதைகளையும் ரசிப்பதாகச் சொன்னாள். தமிழில் பிடித்த எழுத்தாளர் சுஜாதா என்றும், தமிழில் அவரைத்தாண்டி அதிகம் வாசிப்பதில்லை என்றாள். மறுநாள் விதியில் கற்கள் ஒதுக்கப்பட்டு காரை வீட்டுக்கு எடுத்துவந்தபோது பலமுறை நன்றிசொன்னாள். தொலைபேசி இலக்கத்தைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றபோது மனதில் தைரியத்தை வரவளைத்துக்கொண்டு அவளது பிறந்ததினத்தைக் கேட்டுக்கொண்டேன்
ஏப்ரல் 7, 198*.

- தொடரலாம்.

Sunday, June 13, 2010

காட்டுச்சிறுக்கி

30 comments

 

dink

அவளிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஐந்தாவது முறையாகவும் தானாகவே துண்டிக்கப்பட்டிருந்தது. மனத்திற்கும், புத்திக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக்கொண்டு என்னால் தொலைபேசியை வெறிக்க மட்டுமே முடிகிறது. நல்ல ஒரு நண்பியாய், ஒரு தேவதையாய், ராட்ஷசியாய் அறிமுகமாகிவிட்டிருந்த அவளது ஆறாவது அழைப்பிற்காய் சிணுங்கத்தொடங்குகிறது தொலைபேசி.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

“ஹலோ, இஸ் நிதின் ஓவர் தேர்?”

“யெஸ்”

“ஐம் ம்ருதுளா ப்ரம் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மன்ட்”

அவள் குரலைக் கேட்ட அந்த முதற்கணம் இன்னும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. அலுவலகத்தில் சேர்ந்த முதல்நாளின் முதல் அழைப்பு. நல்ல சகுனம். வந்த தகவலால் அல்ல, கேட்ட அவள் குரலால்!

அவளுடன் முதல் சந்திப்பு, அலுவலகத்தில்தான். அவளைக் குரலைக்கொண்டு அவளை வடித்துவைத்திருந்த எனது கற்பனை என்னை ஏமாற்றியிருக்கவில்லை. அன்று அவள் அணிந்திருந்த வெள்ளை டீ – ஷர்ட்டும், அவளிடமிருந்து வந்த மெல்லிய பர்ஃப்யூம் வாசனையும், இன்ன பிறவும் தேவதைக்கான வரைவிலக்கணங்களைப் பூர்த்திசெய்துகொண்டிருக்க, மிருதுவாகக் கைகுலுக்கிக்கொண்ட அவளது ஸ்பரிசத்தில் ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன், ம்ருதுளா!

தேவதை நெருங்கிய நண்பியாகிவிட்டாள். அலுவலக ஓய்வு நேரங்கள் மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே அவளுடன்தான் கழிகின்றன. அதிகமாகப் பேசுகிறாள். பேசுவதா? நானா? கை ஒதுக்கும் கன்னத்து முடியையும், உதட்டோரச் சிரிப்பையும், தலையோடே ஆடும் காது வளையத்தையும் ரசிக்கவே நேரம் சரியாகிவிடுகிறதே எனக்கு!

திமிர் பிடித்தவள்! இதுதான் அவளைப்பற்றிய அதிகம்பேரின் விமர்சனம். எமக்குள்ளான நட்பு உடைத்துவிட்ட தடைகளால் நானும் அதை உணரத்தொடங்கியிருந்தேன். அதிகம் பேசியவள், அதிகமாக ஏசத்தொடங்கியிருந்தாள். சின்னச்சின்னத் தவறுகளுக்கும் சீறிவிழுந்தாள். அவளுடனான சந்திப்புக்கள் பெரும்பாலும் சண்டையில்தான் முடிகின்றன. ஏற்படுத்திக்கொள்ளும் சமாதானங்களும் நீடிக்க மறுக்கின்றன. என் தேவதையின் ராட்ஷசி அவதாரம்!

அன்றும் அப்படித்தான். ஒன்றுமே இல்லாத விடயத்துக்காய் அவளுடன் ஒருமணிநேரச் சண்டை. வலிந்து ஏற்படுத்திய யுத்தநிறுத்த உடன்படிக்கையின்பின் சொல்லிவிட்டுப் போனாள்

“ஏதடா ஒன்றுமில்லாத விடயம்? உன் சின்னத் தவறுகளையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீ எனக்கு நண்பனுக்கும் மேலேயடா!”

வாயடைத்து நின்றுவிட்டேன். விழித்துக்கொண்டுவிட்ட என் காதலை போய் சொல்லடா என்றது மனம். இந்தத் கோபக்காரியிடம் மாட்டிக்கொள்ளப்போகிறாயா என்றது புத்தி. இந்தக் குழப்பத்திலேயே கடந்துவிட்ட ஒருவாரத்தின்பின்தான் அவளின் இந்தத் தொடர் அழைப்பு. ஒருவழியாக குழப்பத்திற்கு முடிவு கண்டுவிட்டவனாய் ஆறாவது அழைப்பை எடுத்துக் காதில் வைக்கிறேன்.

ஆம், காதல் மனது சம்பந்தப்பட விடயம்!

Monday, January 25, 2010

அ(ந)ரசியல்

18 comments

‘உங்கள் மனைவியிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது’
பிரதீப் முன்னாலிருந்த கணிணித்திரை அவன் கவனத்தைக் கலைத்தது. ‘இப்போது வேலையாக இருக்கிறேன், பிறகு பேசச்சொல்’ என்றுவிட்டு தனக்கு முன்னாலிருந்த ட்ரான்ஸ்பேரன்ட் தொடுதிரையில் தோன்றிய தகவல்களுக்கேற்ப கணினிக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான்.
‘இல்லை, உடனடியாகப் பேசவேண்டுமாம், சிறிது  கோபமாக இருக்கிறார்கள்’
மீண்டும் கூறிய கணினியிடம் ‘சரி தொடர்பைக் கொடு’ என்றவாறே அதன்பக்கம் திரும்பினான்.

பிரதீப், கொழும்பிலுள்ள வர்த்தகமையக் கட்ட்டத்தின் 110ஆவது மாடியில் இavatar1ருந்த பிரதீப் அண் கோ வின் சுழல் நாற்காலியில் நாள்முழுவதும் சுழன்றுகொண்டிருக்கும் ஒருவன். அவனைச்சுற்றியிருந்த தொடுதிரைகள் அவனது வியாபாரத்தில் உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை கணப்பொழுதுக்குள் காட்டிக்கொண்டிருக்க, அவளது எண்ண ஓட்டங்களையே கட்டளைகளாக ஏற்று சில நிமிடங்களுக்குள் லட்சங்களில் சம்பாதித்துக்கொடுத்துக்கொண்டிருந்தது அவனது கணினி.

பிரதீப்பின் முன்னாலிருந்த கணினித்திரையில் தோன்றினாள் ப்ருந்தா.
‘ஹேய் ப்ருந்த், யூ லுக் சோ பியூட்டிபுல்’ என்றவனிடம்
‘பின்ன, வாரக்கணக்கில பாக்காம இருந்தா அப்படித்தான். இண்டைக்காவது வீட்டுக்கு வந்துடுவேல்ல?’ என்றாள். ‘
‘சாரிடா, உனக்குத்தான் தெரியுமில்ல, ஒன் அவர் நான் இங்க இல்லேன்னா எவ்வளவு லாஸ்ட் ஆயிடும் தெரியுமா உனக்கு?’ என்று பரபரத்தான் பிரதீப்.
அவனைப்பொறுத்தவரை பணம்தான் எல்லாமே. பணம் பண்ணும் ஒரு இயந்திரமாகவே நடமாடிக்கொண்டிருந்தான் அவன். மாத்திரைகளும், உடலின் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருந்த இயந்திரங்களும் அவனுக்குத் தூக்கத்தை முற்றிலுமாக மறக்கச்செய்திருந்தன. உலகெங்கும் பரந்திருந்த அவனது நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், ஆயிரக்கணக்கான இயந்த்திரங்களையும் ஒற்றை மேசையில் இருந்தவாறே வழிநடாத்திக்கொண்டிருப்பதற்கு அவனுக்கு நாள் ஒன்றுக்கு 24 மணித்தியாலங்கள் போதாதுதான்.

‘இன்னும் இரண்டு மணி நேரத்துல உனக்கு பிறந்தநாள் தெரியுமில்ல?, அதுக்குக்கூடவா வீட்டுக்கு வரக்கூடாது?’ என்றவளைப்பார்த்துப் புன்னகைத்துவிட்டு,
‘அப்படியா?, சரி சரி அதுக்கு முன்னாலேயே வீட்டில் இருப்பேன்’ என்றவாறே அழைப்பைத் துண்டித்தான்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திலிருக்கும் வீட்டுக்குப் போவதற்கே இருபத்தெட்டு நிமிடங்கள் ஆகிவிடும். எப்படியும் இரண்டுமணி நேரம் வீணாகப்போகிறது. வேலைகளை விரைவாக முடித்தாகவேண்டும் என்று அவன் எண்ணிமுடிக்கும் முன்னரே அவனது வேலைகளை கணினி அவன்முன் பட்டியலிட்டிருந்தது.

எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, அதிவேக லிப்டில் சில நொடிகளுக்குள் இறங்கிவந்து சரியாக 11.30க்கு காரில் ஏறினான். போகவேண்டிய இடத்தை அதிலிருந்த கம்யூட்டருக்குத் தெரியப்படுத்திவிட்டு கண்ணை மூடினான். தரையிலிருந்து சில அடி உயரத்தில் மிதந்தவாறே கணினியால் செலுத்தப்பட சீறிக்கொண்டு புறப்பட்ட கார் சில நிமிடங்களிலேயே நிறுத்தப்படது. விழித்துக்கொண்டு வினவிய அவனுக்கு காரிலிருந்த கம்யூட்டர்
‘மன்னிக்கவும், எல்லாப்பாதைகளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. சரியாக ஐம்பத்தெட்டு நிமிடத்தின் பின்னரே இங்கிருந்து எம்மால் நகரமுடியும்’ என்று கூறி ஓய்ந்தது.

காரில் இருந்தபடியே மெதுவாக எட்டிப்பார்த்தான் பிரதீப். அங்கேயிருந்த மேடையில் 2124ம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் சிறுபான்மை மக்களுக்கு நியாயமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று முழங்கிக்கொண்டிருந்தார்.

Monday, April 6, 2009

இல்லாமல் போன காதல் – சிறுகதை

4 comments


 

வழமையாக கொழும்பில் பெய்யும் மாலைநேர மழை அன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கையிலிருந்த குடை காற்றில் தன் கையை முறித்துக்கொள்ள அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்திற்குள் அடைக்கலமானேன். அடிக்கின்ற தூவானம் அதற்குள்ளும் மழை பெய்ய வைத்தது. ஆனாலும் அதனுள் கூட்டத்திற்குக் குறைவில்லை. கூட்டத்தில் ஏதோ ஒரு ஹைஹீல்ஸ் என் காலை மிதித்துவிடவே ஐயோ என அலறவேண்டும் போல இருந்தாலும் நாகரிகம் கருதி shit என்றவாறே திரும்பினேன். அ.. அது அவளேதான். யாரவள்?




 

அது என் பாடசாலைப்பருவம். எதிர்காலக் கனவு என்று பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும் அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப் படித்த நாட்கள். ஸ்கூலையும் டியூசனையும் விட்டால் பெரிதாக ஒன்றும் தெரியாது. அம்மாவின் புண்ணியத்தில் சில கோயில்கள் மட்டும் தெரிந்திருந்தன. அப்படி ஒரு கோயிலில்தான் அவளை முதன்முதலில் பார்த்தேன். கணுக்கால் தெரியத் தூக்கிப்பிடித்த பாவாடை தாவணியோடு கோயிலை அடி அடியாக அளந்துகொண்டிருந்தாள். என்னுடைய வயது இல்லையென்றால் ஒன்றிரண்டு குறைவாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். ‘தம்பி’ அம்மாவின் குரல். அடுத்த கோயிலுக்குப் போக அப்படி என்ன அவசரமோ?

 



Oh sorry என்றவாறே திரும்பியவள் அதே மூச்சில் நீங்களா என்றாள். நான் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் வாங்களேன். Coffee குடித்துக்கொண்டே பேசலாம் என்றாள். அப்போதும் லேசாகத் தூறிக்கொண்டிருந்த மழை பெரிதாக நனைத்துவிடாது என்ற தைரியத்தில் அவளுடன் இறங்கி எதுவுமே பேசிக்கொள்ளாமல் நடக்கத் தொடங்கினேன். என் நினைவுகளுடன் கூடவே..


 



அன்று ஒரு சனிக்கிழமை. வழமையான டியூசன் வகுப்புகளில் ஐநூறோடு ஐநூற்றி ஒன்றாக இருந்து படித்துக்கொண்டிருந்தேன். ஆசிரியர் தனது வளமையான பாணியில் ஒவ்வொருவராக எழுப்பிக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார். அப்போதுதான் கவனித்தேன். அவர் எழுப்பியது அது.. அவளேதான். எப்படி மிஸ் பண்ணினேன் இவ்வளவு நாளும் என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அன்று பெயர் தெரிந்துவிட்டது.

 



இரண்டு Coffee ஓடர் செய்துவிட்டு அமர்ந்தோம். கொழும்பு அவளையும் முழுவதுமாக மாற்றிவிட்டிருந்தது. உங்களைச் சந்திப்பேன் என நினைக்கவே இல்லை. அவள்தான் ஆரம்பித்தாள். இருந்த கடுப்பை எல்லாம் இப்படி ஹைஹீல்சால் காட்டுவீர்கள் என்று நானும்தான் நினைக்கவில்லை என்றேன். ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப்போல விழுந்து விழுந்து சிரித்தாள். அதற்குள் Coffee வந்துவிடவே பேச்சு சிறிது தடைப்பட்டது. அதற்குள் சிறிது flash back போய்விட்டு வரலாம்

 




மச்சான் அதில போறாளே அந்த சிவப்புக் கலர் சுடிதார். நண்பனின் கை அவளை நோக்கி நீண்டது. ஆமா அவளுக்கு என்னடா? இது நான். சூப்பரா இருக்கால்ல? அவன். இல்லடா சுமார்தான். இது நான். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான். ஆனால் அவன் அடுத்து அவளைத்தாண்டா நான் லவ் பண்ணறேன் என்று சொன்னபோது ஆடிப்போய் விட்டேன். என்னடா சொல்றே? எனக்கே தெரியாமல் எப்படி? என்றேன். ஒரு நாலு மாசமாடா. நம்ம கோயிலுக்குக்கூட அடிக்கடி வருவாடா. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணணும் என்ற அவனது காதலைப்பார்த்த என் காதல் இதயத்தின் மூலைக்குள் ஓடி ஒளித்துக்கொண்டது. முடிவு செய்தேன். அவனுக்குத்தான் அவள் என்று.


 



அவள் Coffeeயை எடுத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள். எதுவும் பேசாமலிருக்க ஒரு மாதிரி இருந்தது. மழைக்கு சுடச்சுடக் Coffee குடித்தால் சூப்பராத்தான் இருக்கும் இல்லயா என்றேன். ஏன் என்ன பேசுவது என்று தெரியவில்லையா என்றாள். எப்படித்தான் கண்டுபிடித்தாளோ. அப்படியில்லை என நான் இழுக்க நீங்கள் முதன்முதலில் எங்கிட்ட வந்து பேசினீங்களே ஞாபகம் இருக்கா என்றாள். மறக்க முடியுமா?




 

மச்சான் நீதான்டா என்னோட லவ்வை எப்படியாவது அவளிட்ட சொல்லணும். நண்பன் சொன்னபோது முதலில் மறுத்தாலும் பின் சம்மதிக்க வேண்டியதாகிவிட்டது. முதன்முதலில் வீட்டில் டியூசன் என்று பொய் சொல்லிவிட்டு நண்பனுடன் அவள் செல்லும் கோயிலுக்குச் சென்றேன். பல சினிமாப் படங்களை நினைவுபடுத்தும் ஒரு கவிதை எழுதிய கடதாசியைக் கையில் திணித்துவிட்டு காணாமல் போய்விட்டான். அதை அவளிடம் கொடுத்துவிட்டு, ஒன்பதுமுறை எச்சிலை விழுங்கிவிட்டுச் சொல்லிவிட்டேன் அவளிடம். நண்பனின் காதலை.


 



எல்லாமே இன்று நடந்ததுபோல் நினைவில் நின்றது. அப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அவளே தொடர்ந்தாள். உங்களுக்குத் தெரியாது. நான் டியூசனில உங்களைப் பார்த்ததில இருந்து உங்களை எவ்வளவு லவ் பண்ணின்னான் என்று. நீங்களும் என்னை கோயிலிலை வைத்து என்னைப் பார்த்தது எல்லாம் எனக்குத் தெரியாது என்றே நினைக்கிறியள்? எனக்கு எல்லாம் தெரியும். இதைச் சொல்லவே முடியாது எண்டிருந்தனான். நல்லவேளை இன்று உங்களைச் சந்திச்சேன். இல்லேன்னா என்ட மனசுக்குள்ளையே கிடந்திருக்கும். என்றுவிட்டுக் Coffeeயை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்தாள்.




 

அவள் கப்பை வைப்பதற்கும் அவளுடனான காதல் தோல்வியால் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட என் நண்பன் கையில் பில்லுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

 

 

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy