Friday, December 24, 2010

ம்…..

8 comments

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு

13 comments

 

Manmadhan Ambu

கமல், கே. எஸ். ரவிக்குமார் இணைப்பில் வந்திருக்கும் கமலின் இன்னுமொரு ராக்கெட் மன்மதன் அம்பு. கமலின் கலகல + விறுவிறுப்பான திரைக்கதையில், அவரது பாணி அலட்டலில்லாத நடிப்பில் இறுதிவரை கட்டிப்போட்டுவிடுகிறது மன்மதன் அம்பு.

பிரபல தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவனும், சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். சூர்யாவுடனான சூட்டிங்கின்போது த்ரிஷாவிற்கு புதிதாக வாங்கிய காரை பரிசளிக்க வரும் மாதவனும் அவரது தாயார் உஷா உதூப்பும் சூட்டிங் பார்ப்பதற்காக இருந்துவிட அங்கு நடக்கும் சில சம்பவங்கள் த்ரிஷாமீது மாதவனுக்கு சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடுகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக பாரீஸ் செல்லும் த்ரிஷாவைக் கண்காணிக்க கமலை நியமிக்கிறார் மாதவன். அங்கு இடம்பெறும் திடீர் திருப்பங்களும், கதையோடு ஒட்டிய நகைச்சுவையும் திரையில் பார்க்கப்படவேண்டியவை.

manmadhan_ambu_movie_pictures_10

முறுக்குமீசையும், மூன்றுநாள் தாடியுமாக இந்திய இராணுவ கமான்டோ மேஜர் ராஜா மன்னாராக வருகிறார் கமல். காதல் மனைவியை விபத்தில் பலிகொடுத்துவிட்டு பஞ்சதந்திரம் நண்பன் ரமேஷ் அரவிந்த்தின் கான்சர் ட்றீட்மென்ட்டுக்காக மாதவன் கொடுக்கப்போகும் பணத்தை எதிர்பார்த்து பாரீசில் அவருக்காக த்ரிஷாவைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் பாத்திரத்தில் வருகிறார் கமல். த்ரிஷாவின் பர்சைப் பறிக்கும் கும்பலைத் துரத்திப்பிடிக்கும் சேசிங் காட்சியில், அவரது மனைவியாக வரும் ஜூலியட்டை கடந்தல் கும்பலிடமிருந்து இராணுவ மேஜராக இருந்து காப்பாற்றும் காட்சியில், ‘போனால் போகட்டுன்னு’ பாடலில் ஆடிக்கொண்டே நடக்கும் காட்சியில், மனைவியுடனான ரொமான்டிக் காட்சியில், என்று நடிப்பில் வழமைபோல பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். திரைக்கதை, வசனங்களிலும் தனித்துத் தெரிகிறார்.

அவரைச்சுற்றியே நடக்கும் கதையைத் தாங்கும் நடிகையின் பாத்திரம் த்ரிஷாவுக்கு. கவிதை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவராக , அம்புஜாஶ்ரீ என்ற பிரபல நடிகையாக வருகிறார் அவர் இம்முறை சொந்தக் குரலில் பேசி அலட்டலில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

த்ரிஷாவைக் காதலிக்கும் சந்தேகப் பேர்வழியாக தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். அவருக்கேயுரிய ரொமான்டிக் லுக்குடன் அறிமுகமாகிறார். த்ரிஷாவுடனான ஊடலுக்குப் பிறகு அவரைக் கண்காணிக்க கமலை அனுப்பிவிட்டு அங்கு நடப்பவற்றை தொலைபேசியில் கேட்பதும், எந்நேரமும் நண்பர்களுடன் பாரில் தண்ணீரில் மிதப்பதுவும்தான் அவரது வேலை. க்ளைமார்க்சில் பாரீசிற்கு வந்து காமெடியில் கலக்குகிறார்.

manmadhan_ambu_movie_stills_04

 

பாரீசில் த்ரிஷாவின் பள்ளித்தோழியாக, இரு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்துவாழும் கதாபாத்திரத்தில் சங்கீதா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மகனாக வரும் குட்டி வாலு விஷ்ஷு பண்ணும் ரகளைகளும், பெரியவர்களின் சங்கேதங்களைப் பிடித்துக்கொண்டு அவன் பண்ணும் சேட்டைகளும் படம் முழுவதும் கலகல.

கான்சரில் அவதிப்படும் கமலின் நண்பனின் பாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், அவரது மனைவியாக ஊர்வசியும் வந்து போனாலும் ரமேஷ் அரவிந்த்தின் பாத்திரம் இன்னும் மனதிலேயே நிற்கிறது. இவர்களைத்தவிர த்ரிஷாவிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க அவரைத் துரத்தும் கேரள தயாரிப்பாளர் குஞ்சன் குரூப்பும், அவரது மனைவியும் கதையூடே நகரும் நகைச்சுவைக்கு நன்றாகத் துணைபோயிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் சூர்யாவாகவே வந்துவிட்டுப் போகிறார்.

கமலின் வரிகள் மற்றும் குரலில், தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் தியேட்டரில் தாளம்போட வைக்கின்றன. இலங்கை இரசிகர்களுக்கு போனஸ் பரிசாக கமலின் ‘கண்ணோடு கண்ணைக் கலந்தாள்’ கவிதையும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. புதுமையான ஒரு முயற்சியாக பின்னோக்கிப் பயணிக்கும் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் நீலவானம் பாடலும், அதற்கேற்ப சரியான வாயசைப்புகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. மனூஸ் நாடனின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரமும், சுற்றுலாக் கப்பலும் கண்முன்னே விரிகின்றன.

அருமையான கதைக்களத்தைத் தேர்வுசெய்து, அதற்கு நகைச்சுவை முலாம்பூசி வெளியிடுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் கமலும் கே. எஸ். ரவிக்குமாரும் என்றே சொல்லலாம். ஆங்காங்கே தன் நாத்திகக் கருத்துக்களையும் கமல் விதைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் மைனசாகச் சொல்லவேண்டுமானால் க்ளைமார்க்சுக்கு முந்தய கொஞ்சம் இழுவையான படகுக் காட்சிகளைச் சொல்லலாம். மற்றபடி அமைதியான முதற்பாதியும், கலகலப்பான இரண்டாம் பாதியுமாக ரசிகர்களுக்கு விருந்தாகிறது மன்மதன் அம்பு.

மன்மதன் அம்பு – கமலின் ராக்கெட்.

Saturday, December 18, 2010

இலங்கைப் பதிவர்கள் கிரிக்கெட் – புகைப்படங்கள்

17 comments

DSCN0212

நாளை ஞாயிற்றுக்கிழமை (19 – 12 – 2010) காலை 9.31 முதல் இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். சந்திப்பு வழமைபோல பதிவர் கெளபோய்மது அவர்களால் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.

இதையொட்டி பதிவர்களின் அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக இன்று இடம்பெற்ற பதிவர்களிற்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் புகைப்படங்களை கீழே காணுங்கள்

 

நன்றி நண்பர்களே!, நாளை சந்திக்கலாம்.

Thursday, December 16, 2010

மீண்டு'ம்...'

14 comments

96776343_4efe3075ff_b

ஆழம்

ஆழி அடி இருளில்
அமிழ்ந்திருந்து, அலைக்கழிந்து மேல்வந்து
ஆர்ப்பரிந்த மேற்பரப்பின் ஓரத்தில்
வெளிச்சத்தின் கிறக்கத்தில் - இவன்
அறிவுக்கெட்டிய ஆழத்தின் தேடுதலில்
இன்னும்
அதே இருளில்
அது...!

நம்பிக்கை

பொத்தி விரிந்த கரங்களில்
ஒட்டிக்கொண்ட மஞ்சள்பற்றி
லஜ்ஜையற்றுக் கிளம்பியது
இரசாயணத்தில் இறக்கப்போகும்
இறுதிப் பட்டாம்பூச்சி..!

அன்பு

தொடங்கலிலும், முடிவிலுமாக
கடிதங்களில் மட்டும் தொங்கியிருந்ததைக்
கலைத்தெறிந்துவிட்டது காலம்
சங்கேதச் சுருக்கங்களையும்
அடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி - இன்னும்
பாட்டியின் பார்வைக்கு மட்டும் இழைத்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு சந்திப்பிற்கிடையிலும்…!

Monday, December 6, 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட்

22 comments

336x2802

முஸ்கி – இந்தப் பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. தெரிந்தோ, தெரியாமலோ யார் மனதாவது புண்பட்டால் மருந்து போடுவதற்கு மருத்துவர் பாலவாசகனை அணுகவும்.

இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையில் பதிவர் நிரூஜாவின் அறிமுக உரையோடு ஆரம்பமாகியது.

இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள். பதிவுகளின் மூலம் சந்தித்துவந்திருக்கும் நாம், இன்று நேரில் சந்தித்திருக்கிறோம். இணையம் என்பதே ஒரு மாயை. அதில் கவற்சியான பெயர்கள் மற்றும் சம்பவங்கள் கொண்டு யாரையும் ஏமாற்றிவிடலாம் என்பதாலேயே இப்படியான சந்திப்புகள் அவசியமாகின்றன. முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றேன். நான் நிரூஜா என்று ஆரம்பிக்க முன்னாள் பதிவர் புல்லட் வாய்க்குள் ஈ புகுந்தது கூடத் தெரியாமல் அவரையே வெறித்துப்பார்க்கின்றார்.

அடுத்ததாக தன்னை அறுமுகப்படுத்த வருகிறார் பதிவர் மதிசுதா.

‘எனக்குத்தான் சுடுசோறு, இரண்டாவதாக பேசினாலும் சோறு இன்னும் ஆறேல்லை, சூடாத்தான் கிடக்கு’ என்றவர், ‘ நான் மதிசுதா, நனைவோமா என்ற தளத்தில் எழுதிவருகிறேன்’ என்று முடித்தார்.

அடுத்ததாக கன்கொன் கோபியின் முறை வர, அதைக் கவனிக்காமல் தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து யாரோ கோபிக்கண்ணா என்று செல்லமாக அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

‘நான் கோபிகிருஷ்ணா, கன்கொன் என்ற பெயரில் ….. பெயரில் ….. ‘என்று சிறிதுநேரம் யோசித்தவர், ‘தளத்தின்ட பெயர் எனக்கே மறந்துபோச்சு, அடுத்தமுறை வரேக்கை பாத்துக்கொண்டுவாறன்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.

அடுத்ததாக பதிவர் ஜனா

‘நான் ஜனார்த்தனன். Cheers with Jana என்ற தளத்தில் எழுதி வருகிறேன். இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்.... ஜப்பானிய இலக்கிய எழுத்தாளர் ஹருகி முரகாமி தனது யசுநாரி கவபாட்டா என்ற நாவலில் கூறியிருக்கிறார் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று. அவ்வாறான எனது தேடல்கள்தான் பதிவுலகுமூலம் வெளிப்படுகின்றன. பதிவர் சந்திப்புக்கு நன்றி’ என்று முடித்தார்.

அடுத்ததாக மைக்கைப்பிடித்தார் பதிவர் மது

‘அன்பின் பதிவர் எல்லாருக்கும் வணக்கம், நான் தான் மது’. எல்லோரும் குறுகுறுன்னு யாரோ புதியவரைப் பார்ப்பது போல பார்க்க, ‘ஆங்.. என்ன அப்பிடிப் பாக்கீங்க எல்லாரும் நான்தான் மதுயிசம் மது’ என்றார். அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் தோன்ற அப்பாடா என்று உட்காந்தார்.

அடுத்து சிவப்பு டீசர்ட் கையில் கறுப்பு ஜாக்கட், டீசர்ட் கழுத்தில் டீசர்ட்டை ஈய்த்துக்கொண்டிருக்கும் கறுப்புக்கண்ணபடி, காலில் கன்வஸ் சப்பாத்து,கைகளில் கறுப்பு கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்

‘அனைவருக்கும் வணக்கம் நான்தான் வந்தி வித்தின் பிரக்கட்ஸ் லண்டன் என் உளறல்களி்ல் சூப் வழங்கி வருகிறேன். இப்பதான் லண்டனில இருந்து ஃபிளைட் பிடிச்சு நேரா வாறேன்’. என்று முடித்தார்.

அடுத்ததாக சிரித்துக்கொண்டே மைக் பிடித்தார் கூல்போய் கிருத்திகன்.

‘வணக்கம். நான் கிருத்திகன். மதிசுதா அண்ணைக்கு சுறுசோறு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் பதிவு எழுதாவிட்டாலும் பதிவுலகத்தை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். பொழுது போக்கு எண்ட தளத்தில எழுதுறன். யாரும் எனக்குக் கோல் எடுத்துப்போடேதைங்கோ, ஐ ஆம் ஆல்வேய்ஸ் பிசி’ என்று காதுவரைக்கும் சிரித்தார்.

அடுத்ததாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பதிவர் ஆதிரை

‘நான்தான் ஆதிரை. கடலேறி என்ற தளத்தில எழுதினான். திடீரென்று பார்த்தால் அது என் பார்வையினூடு… என்று மாற்றப்பட்டிருக்கு. எனக்கு அடிக்கடி பதிவெழுத ஆசைதான். ஆனாலும் சில கடவுச்சொல் பிரச்சினைகளால் எழுதமுடியாமலிருக்கு’ என்று கவலையுடன் அமர்ந்தார்.

அடுத்து எழுந்த அனுதினன்

‘ஹாய் எவ்ரிபொடி, ஐம் அனு சுருக்கமா என்னை அனுதினன் அனுதினன்னு கூப்பிடுவாங்க, ஆடுகளம் என்ற பெயரில வலைப்பதிவை எழுதி வருகிறேன். சுத்தவர இருக்கிற 205 பட்டிக்கும் or பியூட்டிக்கும் நானே ராஜா, ஒரு நாள் நான் திருகோணமலையில இருந்து ரெயினில வந்துகொண்டிருந்த போது…..’ என ஆரம்பிக்க பவன் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கத்தொடங்கினார்.

அடுத்ததாக எழுந்த பதிவர் லோஷன்

‘நான்தான் லோஷன் அலைஸ் விக்கி அலைஸ் விக்கிரமாதித்தன்’ என்று தொடங்க குறுக்கிட்ட நிரூஜா,

‘அண்ணே கோவிக்காதைங்கோ, உங்களைத்தெரியாதாக்கள் யாராவது இருப்பினமோ? இப்ப இடைவேளை நேரம்’ எனச்சொல்ல கன்கொனும், அஸ்வினும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பதிவர் வதீஸ் கையில் பக்கோடாவுடன் வர, லண்டனில குளிர் -17. சூடா பக்கோடா சாப்பிட்டா இதமா இருக்கும் என்றவாறே சதீஷ் எழுந்துகொள்ள இடைவேளைக்காக அறிமுகம் இடைநிறுத்தப்பட்டது.

Saturday, December 4, 2010

கொலைக்காற்று

27 comments

 

Love

ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது. கண்டி மாநகரின் கடுங் குளிருக்கு இதமாக இரண்டாம் முறையாக அடித்த அலாரத்தையும் ஸ்னூசில் போட்டுவிட்டு அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டாள் வர்ஷா.

‘ஹேப்பி பர்த்டே டார்லிங்’ பார்த்ரூமிலிருந்து உற்சாகமாக வெளிப்பட்ட கௌதம் குரலைத்தணித்து ‘இன்னும் தூங்கிட்டிருக்கியா? ரொம்பவே டயர்ட் போல’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். அந்தக் குளிருக்கும் குளித்திருந்தான். இடுப்பில் சுற்றியிருந்த துவாயின் கீழே கால்களில் இன்னும் ஈரமிருந்தது. மெதுவாக அருகில் வந்து ஈர விரல்களால் அவள் கன்னங்களை வருடினான். சிணுங்கிக்கொண்டே திரும்பியவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுவிட்டு, மறுபடியும்

‘ஹேப்பி பர்த்டேடா’

‘ம்ம், விஷ் எல்லாம் இருக்கட்டும். என்ன கிஃப்ட் தரப்போறீங்க?’

‘அதான் நேற்று நைட்டே கொடுத்தேனே’ சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.

‘ஏய், யூ…’ என்று அவனைத் தள்ளிவிட்டவள், ‘ஓகே, ரெடியாகு, இன்னும் பத்தே நிமிஷத்தில கிளம்பிடலாம்’ என்றவாறே எழுந்து, பாத்ரூமிற்குள் சென்று சாத்திக்கொண்டாள்.

இரவுக் குளிரில் ஈரமான வீதிகளை மரங்களினூடான சூரியப்பொட்டுக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. இலைகளில் ஒடுங்கிக்கிடந்த நீர்த்துளிகள் சொட்டத்தொடங்கி காலைக்குளிரை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்க, அந்தக் குளிரிலும் திருமணமாகி ஒரு வாரமே ஆன புது மனைவியின் கைகோர்த்தபடி நடந்துகொண்டிருப்பது இதமாகத்தான் இருந்தது கௌதமிற்கு.

‘வர்ஷு, ஹௌ டூ யூ ஃபீல்?’

‘இப்படியே நடந்துட்டே இருக்கலாம் போல இருக்குங்க’ கையை இன்னும் இறுக்கியவாறே அவன் தோளில் சாய்ந்துகொண்டவளைக் கடைக்கண்ணால் ரசித்துக்கொண்டான். சிலநிமிட நடையில் இருக்கும் கோயிலில் பிறந்தநாள் தரிசனம் முடித்துவிட்டு, அருகிலேயே ரெஸ்ரொரன்டில் காலை உணவையும் எடுத்துக்கொண்டு கொழும்பு புறப்பட்டாகவேண்டும். திருமணத்திற்காக எடுத்த விடுமுறை இன்றுடன் முடிய, அடுத்தநாள்முதல் அமரிக்க முதலாளித்துவத்திற்கு ஆணி பிடுங்கி, றூபியுடன் மல்லுக்கட்டவேண்டும் என்று நினைக்கையிலேயே என்னவோ செய்தது அவனிற்கு.

**********************************

கொழும்பு நகரின் இதயப்பகுதியிலிருக்கும் அந்த அப்பார்ட்மென்ட் வழமைக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையும் பரபரப்பாகக் காணப்பட்டது.

‘இங்கதான் சேர், த்தேர்ட் ஃப்ளோர்’

‘இவர்தான் முதல்ல பாத்திருக்கார்’

‘அன்யூஸ்வலா கதவு ரொம்பநேரம் திறந்திருந்தது சார், அதுதான் எட்டிப்பார்த்தேன்’

அப்போதுதான் வந்திறங்கியிருந்த இன்ஸ்பெக்டரிடம் யார்யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். லிஃப்டில் ஏறி வேகமாக மூன்றாம் மாடியை அடைந்தார் இன்ஸ்பெக்டர். மூன்றாம்மாடி வெறிச்சொடிப்போய் நிசப்தமாக இருந்தது. லிஃப்டின் எதிரிலேயே ‘ஓ’வெனத் திறந்திருந்த வீடு அவரை வரவேற்றது. டைல்ஸில் வடிந்திருந்த இரத்தம் வாசலில் திட்டாக உறைந்துபோய்க் கிடந்தது. இரத்தத்தைக் கண்ணாலேயே பின்தொடர்ந்தவருக்கு அதிகம் வேலை வைக்காமல் முன்னால் சொஃபாவின் அருகிலேயே சுருண்டு கிடந்தாள். பிங்க் நிறத்தில் இரவு உடை அணிந்திருந்தாள். இரத்தம் தோய்ந்த கத்தி அருகிலேயே கிடக்க, அவள் வயிற்றுப்புற ஆடை பிங்கிலிருந்து சிவப்பாக மாறி, பின் கபிலமாகக் காய்ந்துபோயிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் தயங்கியபடியே அழைத்துவரப்பட்டார்.

‘இவங்க பெயர் தெரியுமா?’

‘ஜெனி சார்’

‘கூட வேற யார்யாரெல்லாம் இருந்தாங்க?’

‘பேரன்ட்ஸ் இருந்தாங்க சார், போன கிழமைதான் ஊருக்குக் கிளம்பிப்போனாங்க. அவங்களுக்குக்கூட ஃபோன் பண்ணி சொல்லிட்டோம்’

‘கல்யாணம் ஆயிடுச்சா?’

‘இன்னும் இல்லை சார்’

‘நைட் உங்களுக்கு சத்தம் எதுவுமே கேக்கலையா?’ உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்.

‘ஓகே, யூ மே கோ நவ், அப்புறமாக் கூப்பிடுறேன்’ என்று தலையாட்டியவாறே வீட்டுக்குள் நுளைந்த இன்ஸ்பெக்டர் ஆதாரங்களைச் சல்லடை போடத்தொடங்கினார். ப்ரிண்ட்ஸ்காக ட்ஸ்ட் பண்ணி முடித்திருந்த சொபா முதற்கொண்டு மேசை ட்றாயர் வரை சல்லடைபோட்டார். அலமாரிகளைப் புரட்டிப்போட்டார். அங்கே கிடைத்த ஜெனியின் ஹேன்ட் பேக்கை ஆராயத்தொடங்கினார். மூக்கு மட்டுமே தெரியக்கூடிய சைசில் முகம்பார்க்கும் கண்ணாடி, லிஃப்ஸ்டிக், இரண்டு வகை ஸ்ப்ரே, சில கிரீம்கள் என்று ஒவ்வொன்றாகப் புறக்கணித்துக்கொண்டு வந்தவரின் கைகளில் அவளின் பர்ஸ் அகப்பட்டது. எடுத்துத் திறந்தவர் ஒருமுறை நெற்றியைச் சுருக்கிவிட்டுக்கொண்டார்.

அதிலே இருந்த புகைப்படத்தில் ஜெனியின் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.

இந்தத் தொடர்கதையை சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது. அவரவர் கற்பனைக்கே விடப்பட்டுள்ள தொடரில் எனக்கு அடுத்ததாக பதிவர் பவன் தொடர்வார்.

பின்னிணைப்பு

பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம்பாகம்

பதிவர் சதீஷால் எழுதப்பட்ட மூன்றாம்பாகம்

பதிவர் மதுவால் எழுதப்பட்ட நான்காம்பாகம்

பதிவர் லோஷனால் எழுதப்பட்ட ஐந்தாம்பாகம்

Thursday, December 2, 2010

ம்…

15 comments

Sad

வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட
ஊமல் கொட்டைகளினதும்
மண் கட்டிகளினதும்
எறி பிடி விளையாட்டு

தண்ணீர் நிரம்பிய
சதுரக் குழிகளுக்குள்
சறுக்கி விழுந்து அடித்த நீச்சல்

எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்

கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு

பேச நாதியின்றி
எமக்குள் பேசியபடி
நானும், இன்னுமொரு பொம்மையும்

பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy